Jun 28, 2009

செங்கால் நாராய்!

நேரிசை ஆசிரியப்பா

செங்கால் நாராய்! செங்கால் நாராய்!
செங்காந் தண்ணுதல் தண்நெஞ் சங்கொள
எங்கோ வில்மன மெய்த வம்பாய்
எண்ணங்க ளோடி என்றும் தேடக்
கண்ணில் காணாக் கன்னியைக் காணா
தென்றும் வருந்தும் இளமட நெஞ்சம்
பொன்றும் வரையில் உணராது
சென்றிடு மோநீ சொல்வாய் நாராய்!


பொருள்: சிவந்த கால்களையுடைய நாரையே! செங்காந்தள் பூவைப் போன்ற நெற்றியைக் கொண்டவளை என் குளிர்ந்த நெஞ்சமானது கொள்ள, என் 'மனம்' என்னும் வில் எய்த 'எண்ணம்' என்னும் அம்பு, இலக்கை அடையாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் வருந்தும் என் இள மட நெஞ்சம் இறக்கும் வரையில் என்னவளை உணராது சென்றிடுமோ? சொல்வாயாக!

Jun 15, 2009

தோண்டும் புதையல்

தோண்டும் புதையல் அறிவாகும்
தோண்டத் தோண்டச் செறிவாகும்                      1

வேண்டும் வேண்டும் எனக்கேட்கும்
மீண்டும் மீண்டும் மனப்பாட்டு                               2

வேண்டும் இடத்தில் ஏற்றுவிக்கும்
விலையில் மகிழ்வைத் தோற்றுவிக்கும்          3

சிந்தையை ஒருமை செய்திடுவாய்
சீர்மைச் சீர்தனை எய்திடுவாய்                               4

நெஞ்சில் எண்ணம் நிலைக்கட்டும்
நேரிய பெருமை நிலைக்கெட்டும்                         5
                                      - தமிழகழ்வன்

Jun 6, 2009

பிள்ளையாரும் பிள்ளைகளும்

நிலைமண்டில ஆசிரியப்பா

சிறுகல் எடுத்துச் சிறுவர் இருவர்
உறுமுட் புதரில் ஓணானைப் பார்த்து
வீசினர் அதுபுதர் உள்ளே காய்ந்த
மாசில் குண்டு மணிக்கொடி மீதே
படவே மணிகள் 'படபட' வென்றே
விடவே சிறுவர் அதனை எடுத்துப்
"பிள்ளை யார்க்குப் பிழைதனைச் செய்த
கள்ளஓ ணானைக் கண்டே அடித்தோம்
கண்டாயா பிள்ளை யாரவர் தம்முடைக்
கண்களை நமக்குப் பரிசாய்த் தந்தார்"
என்றே எண்ணி இன்பங்கொண் டனரே!
                                            - தமிழகழ்வன்.