Jul 8, 2009

தலைவனும் மலரும்

ஒருமுறை என்னுடைய ஆசிரியர் திரு அன்பரசு அவர்கள், 'பெண்களை மலர்களோடு ஒப்பிட்டு வருணித்தல் போல ஆடவன் ஒருவனை மலர்களோடு ஒப்பிட்டு வருணிக்க முடியுமா?' எனக் கேட்டார். அப்போது எழுதிய செய்யுள்...

நிலைமண்டில ஆசிரியப்பா


தலைவா! உன்னைத் 'தாமரை' என்பேன்
தாவித் தாவித் தனித்தன்மை தேடுதலால்
இறைவா! நீதான் 'பாரி ஜாதம்'
இன்முகத் துடனே எனக்குனை ஈந்ததனால்
கார்மலை என்னும் 'குறிஞ்சிப்' புலமே
கவின்தமிழ்க் கந்தனை உள்ளுறை வித்தனையே!

பொருள்:
தாமரை -தா + மரை - தாவுகின்ற மான்
பாரி ஜாதம் = பாரி வள்ளலின் இனத்தைச் சேர்ந்தவன்
குறிஞ்சிப் புலம் = குறிஞ்சி மலர்களைத் தன்னகத்தே கொண்ட மலைப்பகுதி


'செய்யும் ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையைத் தேடுவதால் துள்ளுகின்ற உள்ளம் படைத்த மானைப் போன்றவனே! இன்முகத்துடன் எனக்கு உன்னையே தந்ததனால் நீ பாரி வள்ளலின் இனத்தைச் சேர்ந்தவன். 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் உறையும் இடம்' என்பதற்கேற்ப, உன் உள்ளம் எனும் உறுதி கொண்ட குறிஞ்சிப் புலத்தில் கந்தனை வைத்துப் போற்றுகின்றாயே!' எனத் தலைவி தலைவனின் இயல்புகளைக் கூறிப் புகழ்கிறாள்.
 

No comments:

Post a Comment