May 1, 2010

தப்புத் தப்பாய்த் தமிழ்

என்ன சொல்வது?
நெஞ்சு பொறுக்கவில்லை.

தமிழின் அடிப்படைச் சொல்லிலக்கணத்தை மறந்து, தப்புத் தப்பாய் எழுதும் தமிழர்களால் எங்ஙனம் 'செம்மொழி' என்று பெருமையடித்துக் கொள்ள முடிகிறது?

தொலைக்காட்சிச் செய்திகள், அறிவிப்புச் செய்திகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் என எங்குப் பார்த்தாலும், சொற்களுக்கு இடையில் தேவைப்படும் வல்லின ஒற்று எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவதே வாடிக்கையாய்ப் போய்விட்டது தமிழர்களுக்கு.

சொற்றொடர் என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் எனலாம். குடும்ப உறவுகள் வலுப்பட, அன்பு, பாசம் போன்றவை இணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தேவையான இடங்களில் அவ்வல்லின ஒற்றுகளை இணைத்து எழுதுவது, குடும்பத்தின் உறவுச் சங்கிலியை வலுப்படுத்துதல் போன்றதாகும்.

வல்லின ஒற்றுகளை விடுத்து எழுதுவது, குடும்ப உறவுகளில் அன்பு காணாமல் போவதைப் போன்றதாகும். அத்தகைய மனநிலையில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தமிழின் எழுத்தே சான்றாக உள்ளது.

கொடுமை
தமிழக முதல்வருக்குப் பாரட்டுவிழா நடத்தும் மேடை அறிவிப்புப் பலகையில் கூட இந்தத் தப்பைக் காணலாம் என்றால் தமிழ் எங்கு வாழ்கிறது? அது எப்படிச் செம்மொழியாகும்? என்று எனக்குப் புரியவில்லை.

                 பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா
                (பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா)
                    
                      தமிழ்_திரையுலகம்
                     (தமிழ்த்திரையுலகம்)

இப்படியெல்லாம் தமிழைத் தப்புத் தப்பாய் எழுதிவிட்டுத் 'தமிழ்ச்செம்மொழி' என்று பேசுவதில் என்ன பெருமை இருக்கிறது?

இந்தக் கொடுமையைக் கண்டிருக்கிறீர்களா? செம்மொழி மாநாட்டிற்காக ஆங்காங்கு எழுதப்பட்ட விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

                    உலக தமிழ் செம்மொழி மாநாடு
                   (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)

என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையை!