Sep 2, 2010

நண்பனின் பிரிவு

நதிக்கு நண்பன் நாணல்தான்
'நலமா?' நாளும் கேட்டிடுமே!                        1


நாணலின் நண்பன் நதிதானே
வாழ்வினில் வளமே சேர்த்திடுமே!            2


தட்டிக் கொடுப்பவன் நண்பனே!
தட்டிக் கேட்பதும் நண்பனே!                           3

இன்பம் துன்பம் ஏதெனினும்
உடனுறை பவனே நன்னண்பன்                    4

நினைந்தால் போதும் நெஞ்சார
நினைவிலும் நன்மை செய்திடுவான்         5

நேசம் உள்ள நண்பனே!
நெஞ்சம் உன்னை மறக்குமா?                        6

பாசப் பிணைப்புப் பந்தமே!
பண்பில் ஓங்கிய சொந்தமே!                          7

நாளும் உன்னை நினைக்கையில்
நெஞ்சில் இன்பம் தங்குதே!                             8

கொட்டும் நீர்த்துளி கண்ணிலே
நண்பா பிரியும் போதிலே                                 9

நிலையி னின்று பிரிந்தாலும்
நினைவுகள் என்றும் மறவாதே!                   10
                   - சுப்பிரமணிய தமிழகழ்வன்

No comments:

Post a Comment