Oct 27, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 4

டேய், என்னடா ஆச்சு, பேசுடா”, கெஞ்சினான் இரவீந்தர்.
முகங்கொடுத்துப் பேசவில்லை துரை.
இரவு உணவின்போது, இரவீந்தருக்கு என்னவென்று புரிந்துவிட்டது. உணவு முடிந்தபின், “சாரிடா துரை,.. நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. ஆளுக்கொரு வாழைப்பழம்தானே வைக்கிறார்கள். அதுல போய் கைவச்சிட்டேனே, சாரி டா” என்றான் இரவீந்தர்.
“அடத்தூ! இதான் பிரச்சினையா? இதுக்கா மூஞ்சத் தூக்கி வச்சிட்டு இவ்வளவு நேரமா அவன் கிட்டப் பேசாம இருந்த? இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா”, என்றான் ஸ்னோவின்.
“உன்ன யாருடா அவன் வாழப்பழத்துல கைவைக்கச் சொன்னது? உனக்குந்தானே ஒன்னு வெச்சாங்க, அது போதாதா உனக்கு”, என்றான் இரவீந்தரிடம்.
துரையும் இரவீந்தரும் ஒருவருக்கொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். ‘சாரி’ சொல்லிக் கொண்டார்கள். அன்றிரவு இந்நிகழ்ச்சியை ஒட்டி, துரை ஒரு கவிதை எழுதினான்.

துரைக்குத் தூக்கம் வரவில்லை. இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தான். சிறுபிள்ளைத்தனமாய்ச் செய்த செயலை எண்ணியும், கார்த்திகேயன் சொன்ன பதிலை எண்ணியும் சிரித்துக் கொண்டிருந்தான். என்னமோ தெரியவில்லை, ஸ்னோவினைப் போலவே, கார்த்திகேயன் மீதும் பெருமதிப்பு வந்துவிட்டது. அவனைச் செல்லமாய் ‘அப்பு’ என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். இன்மொழியன் என்றும் பெயர் வைத்து விட்டான்.
கார்த்திகேயன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஸ்னோவின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் சென்னைக்கு வந்த பிறகு, அவரவர்களின் வட்டார மொழி வழக்குகளை அவ்வளவாய்க் காட்டிக் கொள்ளவில்லை. கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தால். ஆனால் அவர்கள் இருவரும் ஒருத்தரையொருத்தர் கேலி செய்து கொள்வார்கள். “உங்க ஊர்ல எல்லாரும் ‘எலே’ன்னுதான் கூப்பிடுவார்கள்... ‘எலே வாலே போலே ஆம்பிளே பொம்பிளே’ன்னு”, என்பான் கார்த்தி. “உங்க ஊர்ல மட்டும் என்ன? ‘ஏனுங்க, வாங்க, போங்க, மாடுங்க, கண்ணுங்க, வாண்டுங்க’ன்னு கூப்பிடுவாங்க”, என்பான் ஸ்னோவின். ‘பாம்பறியும் பாம்பின கால்’ என்பதுபோல் உயர்ந்த குணங்களைக் கொண்ட இருவரும் இணைபிரியாத நண்பர்களாய் இருந்தனர். இத்தகைய எண்ணங்களை மனதில் அசைபோட்டு மகிழ்ந்திருந்த துரைக்கு இன்னமும் தூக்கம் வரவில்லை.

Oct 9, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 3

தேர்வு முடிந்ததும், “என்னடா, விடைத்தாளைச் சீக்கிரமா குடுத்துட்ட போல? அப்புறமும் என்னடா எழுதிட்டு இருந்த?” எனக் கேட்டான் ஸ்னோவின்.
“வேற என்ன? கவிதைதான்”, மொழிந்தான் சின்னதுரை.
“அறிவுக்கொழுந்து! தேர்வு அறையிலயும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டியா? சரி... அதை விடு. தேர்வு எப்படி எழுதின?”
“அதான் அரைமணி நேரம் முன்னயே கொடுத்துட்டேனே! சரியாவே எழுதல...”
“ஏன்டா...? நேத்து படிச்ச கேள்விங்க தானே கேட்டிருந்தாங்க...”
“அப்படியா...! படிச்ச மாதிரியே தெரியலியே...”
“ஒன்னுமில்ல... கேள்வியைக் கொஞ்சம் மாத்திக் கேட்டிருந்தாங்க...”
“ஹூம்... என்ன பண்றது...? எனக்குப் புரிஞ்சது அவ்வளவுதான்”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... போகப் போகப் புரியும்...”
“ஏதோ, உன்னால தான் நான் கொஞ்சமாவது எழுதினேன்”
“அடுத்த வருஷம் பாரு... நீ என்ன விட அதிக மார்க் வாங்குவ...”
“எப்படிச் சொல்ற...?”
“உங்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு...”
“பார்ப்போம்”
இதுவல்லவா நட்பு! சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமன்றோ!

மாலை, விடுதி அறையில் தங்கியிருந்த இன்னொரு நண்பனிடம் ஊமைச் சண்டையில்
இறங்கியிருந்தான் சின்னதுரை. இரவீந்தர் அவனிடம் தானாய் வந்து பேசினாலும், அவன் வாய் திறக்கவே இல்லை. ‘உம்’மென்று இருந்தான். அவனுக்கு இரவீந்தர்மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
உள்ளே நுழைந்த ஸ்னோவினிடம் இரவீந்தர் சொல்ல, அவன் சின்னதுரையிடம் கேட்டான். “என்னடா பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அப்போது கூட, அவன் வாய் திறக்கவே இல்லை.
“அவன், உம்முனா மூஞ்சி, அப்படித்தான் இருப்பான். அவனே சொல்லும்போது கேட்டுக்குவோம்”, என்றான் ஸ்னோவின்.
அந்த அறையில் தங்கியிருந்த இன்னொருவன் கார்த்திகேயன். அவனிடம் சென்று ஸ்னோவின் கேட்டான், “கார்த்தி, ரொம்பப் பசிக்குது... சாப்பிட ஏதாவது வச்சிருக்கிறியா?”
“ஆம், வச்சிருக்கேன்”
“சரி, கொடு”
“வாய் வச்சிருக்கிறேன்...”
குபீர் என்ற சிரிப்பு அறைமுழுவதும் பரவியது. இரவீந்தரும் கார்த்தியும் சிரித்தார்கள்.
“ச்சோ, உங்கிட்ட போய் கேட்டேன் பாரு”, என்றான் ஸ்னோவின்.
அறை அமைதியானது. ஓர் ஐந்து நிமிடம் போயிருக்கும். மீண்டும் திடீரென்ற சிரிப்பொலி. சின்னதுரைதான் சிரித்தான். ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள் மற்ற மூவரும்.
“என்னடா, உம்முனா மூஞ்சி! திடீர்னு சிரிக்கற? என்னாச்சு உனக்கு?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஒன்னுமில்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்த்தி சொன்னானே! அதை நெனச்சித்தான் சிரித்தேன்”
“அடப்பாவி! மொக்க நாயே! ரொம்ப லேட் ரெஸ்பான்ஸ் டா, சரி சிரிச்சுட்ட, கோபம் போயிடுச்சா? என்ன பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அதைச் சொல்லத் தயக்கப்பட்ட சின்னதுரை, “அப்புறமா சொல்றேன்” என்றான்.
இன்னும் கடுப்பானான் இரவீந்தர்.
                                                                   (தொடரும்)

Oct 1, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 2

பக்கத்து அறையில் தங்கி இருந்த முகுந்தன் உள்ளே நுழைந்தான்.
“வாடா, நல்லவனே!”, தனக்குப் பிடித்தவர்களை, உற்சாகத்தோடு இப்படித்தான் அழைப்பான் சின்னதுரை. “என்ன படிச்சிட்டியா?”
முகுந்தன் சொன்னான், “எங்க படிக்கிறது, ஒன்றும் புரிய மாட்டேங்குது, ஆமா, நீ படிச்சிட்டியா?”
“நானா? எங்க படிக்கிறது? ‘சப்ஜக்ட்’ட தூக்கிப் போட்டுட்டுக் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன்ல...”
“ஆமாம், நேத்து அந்த சீனியர் அண்ணன் கேட்டாரே ஒரு கவிதை, அதை எழுதிட்டியா?”
“ஏதோ எழுதியிருக்கேன், படிச்சுப் பாரு”. கவிதையைக் கொடுத்தான் சின்னதுரை.

“காற்றினிலே
பூங்காற்றினிலே
வரும் பாட்டினிலே
.............................
............................”.

முழுவதையும் படித்துவிட்டு, “அடேயப்பா! எப்படிடா இப்படியெல்லாம் எழுதறீங்க? செம ‘ரைமிங்’கா இருக்கு. ரொம்ப ஃபீல் பண்ணி எழுதி இருக்க போல!”, என்றான் முகுந்தன்.
“ஒரு இலக்கணங்கூட இல்லாம எழுதி இருக்கேன். இதப்போய் இவ்வளவு பெரிசா பேசறியே?”, என்றான் சின்னதுரை.
“இந்தக் காலத்துல இப்படி எழுதனாலே போதும்டா”
“முகுந்தா, இந்தக் கதையைக் கேட்டியா?”, என்றான் ஸ்னோவின் முகத்தைத் துடைத்துக் கொண்டே.
“எந்தக் கதை?”, என்றான் முகுந்தன்.
“ஒன்னுமில்ல, துரை எனக்கு ஒரு பேரு வச்சிருக்கிறாராம்...”
“அப்படியா, துரை? என்ன பேரு?”
“வெண்பனி வெற்றியன்!”, என்றான் சின்னதுரை.
“என்னாது...? வெண்பனி வெற்றியனா...?” சிரித்தான் முகுந்தன். ஸ்னோவினும் தான்.
படிப்பு நேர மணி அடித்தது. “ஸ்டடி பெல் அடிச்சிட்டாங்க... நான் கிளம்பறேன்”, கிளம்பினான் முகுந்தன்.
மறுநாளைய சிறுதேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார்கள். ஆங்கிலம் அவ்வளவாய்ப் புரிந்துகொள்ள முடியாத சின்னதுரை, அகராதியைப் புரட்டிப் புரட்டி, ஏதோ புரிந்துகொண்டு படித்தான். படிப்பு நேரம் முடிந்து, இரவு உணவிற்கு மணி அடித்தார்கள்.
“படிச்சிட்டியா துரை?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஏதோ கொஞ்சம் புரிஞ்சது. இன்னும் முடிக்கலைடா”, என்றான் சின்னதுரை.
“சரி, சாப்பிட்டுட்டு வந்த பிறகு, நானே மீதியைச் சொல்லிக் குடுக்கறேன்”, என்றான் ஸ்னோவின்.
மறுநாள், தேர்வை முடிந்தவரை எழுதிவிட்டு, விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்தான் சின்னதுரை. “இன்னும் அரைமணி நேரம் இருக்கு, அப்புறந்தான் போக முடியும். அப்படியே உட்கார்”, என்றார் ஆசிரியர்.
அப்படியே அமர்ந்தான் சின்னதுரை. அவனது எண்ணங்கள் சும்மா இருக்குமா? கவிதைத் தாளம் போட ஆரம்பித்தன. எழுதுவதற்குத் தாள் இல்லையே... என்ன செய்வது? வினாத்தாளின் பின்புறம் காலியாக இருந்தது. அது போதுமே! எழுத ஆரம்பித்தான் மனதைத் தோண்டி...

“தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
...........................................
...........................................”

                                                      (தொடரும்)