Oct 9, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 3

தேர்வு முடிந்ததும், “என்னடா, விடைத்தாளைச் சீக்கிரமா குடுத்துட்ட போல? அப்புறமும் என்னடா எழுதிட்டு இருந்த?” எனக் கேட்டான் ஸ்னோவின்.
“வேற என்ன? கவிதைதான்”, மொழிந்தான் சின்னதுரை.
“அறிவுக்கொழுந்து! தேர்வு அறையிலயும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டியா? சரி... அதை விடு. தேர்வு எப்படி எழுதின?”
“அதான் அரைமணி நேரம் முன்னயே கொடுத்துட்டேனே! சரியாவே எழுதல...”
“ஏன்டா...? நேத்து படிச்ச கேள்விங்க தானே கேட்டிருந்தாங்க...”
“அப்படியா...! படிச்ச மாதிரியே தெரியலியே...”
“ஒன்னுமில்ல... கேள்வியைக் கொஞ்சம் மாத்திக் கேட்டிருந்தாங்க...”
“ஹூம்... என்ன பண்றது...? எனக்குப் புரிஞ்சது அவ்வளவுதான்”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... போகப் போகப் புரியும்...”
“ஏதோ, உன்னால தான் நான் கொஞ்சமாவது எழுதினேன்”
“அடுத்த வருஷம் பாரு... நீ என்ன விட அதிக மார்க் வாங்குவ...”
“எப்படிச் சொல்ற...?”
“உங்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு...”
“பார்ப்போம்”
இதுவல்லவா நட்பு! சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமன்றோ!

மாலை, விடுதி அறையில் தங்கியிருந்த இன்னொரு நண்பனிடம் ஊமைச் சண்டையில்
இறங்கியிருந்தான் சின்னதுரை. இரவீந்தர் அவனிடம் தானாய் வந்து பேசினாலும், அவன் வாய் திறக்கவே இல்லை. ‘உம்’மென்று இருந்தான். அவனுக்கு இரவீந்தர்மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
உள்ளே நுழைந்த ஸ்னோவினிடம் இரவீந்தர் சொல்ல, அவன் சின்னதுரையிடம் கேட்டான். “என்னடா பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அப்போது கூட, அவன் வாய் திறக்கவே இல்லை.
“அவன், உம்முனா மூஞ்சி, அப்படித்தான் இருப்பான். அவனே சொல்லும்போது கேட்டுக்குவோம்”, என்றான் ஸ்னோவின்.
அந்த அறையில் தங்கியிருந்த இன்னொருவன் கார்த்திகேயன். அவனிடம் சென்று ஸ்னோவின் கேட்டான், “கார்த்தி, ரொம்பப் பசிக்குது... சாப்பிட ஏதாவது வச்சிருக்கிறியா?”
“ஆம், வச்சிருக்கேன்”
“சரி, கொடு”
“வாய் வச்சிருக்கிறேன்...”
குபீர் என்ற சிரிப்பு அறைமுழுவதும் பரவியது. இரவீந்தரும் கார்த்தியும் சிரித்தார்கள்.
“ச்சோ, உங்கிட்ட போய் கேட்டேன் பாரு”, என்றான் ஸ்னோவின்.
அறை அமைதியானது. ஓர் ஐந்து நிமிடம் போயிருக்கும். மீண்டும் திடீரென்ற சிரிப்பொலி. சின்னதுரைதான் சிரித்தான். ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள் மற்ற மூவரும்.
“என்னடா, உம்முனா மூஞ்சி! திடீர்னு சிரிக்கற? என்னாச்சு உனக்கு?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஒன்னுமில்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்த்தி சொன்னானே! அதை நெனச்சித்தான் சிரித்தேன்”
“அடப்பாவி! மொக்க நாயே! ரொம்ப லேட் ரெஸ்பான்ஸ் டா, சரி சிரிச்சுட்ட, கோபம் போயிடுச்சா? என்ன பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அதைச் சொல்லத் தயக்கப்பட்ட சின்னதுரை, “அப்புறமா சொல்றேன்” என்றான்.
இன்னும் கடுப்பானான் இரவீந்தர்.
                                                                   (தொடரும்)

1 comment:

சரவண வடிவேல்.வே said...

நண்பா தொடர்ந்து எழுதவும்... வாழ்த்துக்கள்.

Post a Comment