Oct 27, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 4

டேய், என்னடா ஆச்சு, பேசுடா”, கெஞ்சினான் இரவீந்தர்.
முகங்கொடுத்துப் பேசவில்லை துரை.
இரவு உணவின்போது, இரவீந்தருக்கு என்னவென்று புரிந்துவிட்டது. உணவு முடிந்தபின், “சாரிடா துரை,.. நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. ஆளுக்கொரு வாழைப்பழம்தானே வைக்கிறார்கள். அதுல போய் கைவச்சிட்டேனே, சாரி டா” என்றான் இரவீந்தர்.
“அடத்தூ! இதான் பிரச்சினையா? இதுக்கா மூஞ்சத் தூக்கி வச்சிட்டு இவ்வளவு நேரமா அவன் கிட்டப் பேசாம இருந்த? இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா”, என்றான் ஸ்னோவின்.
“உன்ன யாருடா அவன் வாழப்பழத்துல கைவைக்கச் சொன்னது? உனக்குந்தானே ஒன்னு வெச்சாங்க, அது போதாதா உனக்கு”, என்றான் இரவீந்தரிடம்.
துரையும் இரவீந்தரும் ஒருவருக்கொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். ‘சாரி’ சொல்லிக் கொண்டார்கள். அன்றிரவு இந்நிகழ்ச்சியை ஒட்டி, துரை ஒரு கவிதை எழுதினான்.

துரைக்குத் தூக்கம் வரவில்லை. இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தான். சிறுபிள்ளைத்தனமாய்ச் செய்த செயலை எண்ணியும், கார்த்திகேயன் சொன்ன பதிலை எண்ணியும் சிரித்துக் கொண்டிருந்தான். என்னமோ தெரியவில்லை, ஸ்னோவினைப் போலவே, கார்த்திகேயன் மீதும் பெருமதிப்பு வந்துவிட்டது. அவனைச் செல்லமாய் ‘அப்பு’ என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். இன்மொழியன் என்றும் பெயர் வைத்து விட்டான்.
கார்த்திகேயன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஸ்னோவின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் சென்னைக்கு வந்த பிறகு, அவரவர்களின் வட்டார மொழி வழக்குகளை அவ்வளவாய்க் காட்டிக் கொள்ளவில்லை. கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தால். ஆனால் அவர்கள் இருவரும் ஒருத்தரையொருத்தர் கேலி செய்து கொள்வார்கள். “உங்க ஊர்ல எல்லாரும் ‘எலே’ன்னுதான் கூப்பிடுவார்கள்... ‘எலே வாலே போலே ஆம்பிளே பொம்பிளே’ன்னு”, என்பான் கார்த்தி. “உங்க ஊர்ல மட்டும் என்ன? ‘ஏனுங்க, வாங்க, போங்க, மாடுங்க, கண்ணுங்க, வாண்டுங்க’ன்னு கூப்பிடுவாங்க”, என்பான் ஸ்னோவின். ‘பாம்பறியும் பாம்பின கால்’ என்பதுபோல் உயர்ந்த குணங்களைக் கொண்ட இருவரும் இணைபிரியாத நண்பர்களாய் இருந்தனர். இத்தகைய எண்ணங்களை மனதில் அசைபோட்டு மகிழ்ந்திருந்த துரைக்கு இன்னமும் தூக்கம் வரவில்லை.

1 comment:

சரவண வடிவேல்.வே said...

ஏன், இந்த இடைவெளி??? அடுத்தப் பாகம் எங்கே பாஸ்??

Post a Comment