Dec 26, 2010

ஏன் தோற்றுப்போனேன் நான்?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏன்தோற்றுப் போனேன்நான் என்மீ துனக்கு
     
யெள்ளளவும் விருப்பமிலை என்ப தாலோ?
'நான்மாற மாட்டேன்'என் றேநீ சொன்னாய்
      நானினைத்தேன் 'மனிதமனம் தானே மாறும்'
ஆனாலென் எண்ணமெல்லாம் தவிடு பொடியாய்
       ஆகியதுன் னொருவார்த்தை கேட்ட கணமே
ஏனென்னை நம்புகிறாய்? ஏமா றாதே!
       எனையுன்றன் நினைவினின்று நீக்கென் றாயே!

எனக்கினியும் உரிமையிலை உன்னை நினைக்க
      என்தோழி தன்கடமை நன்றாய்ச் செய்தாள்
உனக்கென்றன் மீதில்லா விருப்பம் தன்னை
      உணர்ந்துகொண்டு வுண்மையொன்று ரைத்தாள் பாரேன்
'உனக்குமந்த தைரியந்தான் வரவே யில்லை
      உடன்படித்த நண்பனைஏன் புண்ப டுத்த?'
எனநினைத்தாய் அவள்செய்தாள் நட்பின் கடமை
      எனைமிகுதிக் கண்மேற்சென் றிடித்து ரைத்தாள்

அவள்கேட்ட வம்மூன்று கேள்வி கள்தான்
      அம்பைப்போல் என்னுளத்தைத் துளைத்தெ டுக்க
தவம்போன்று வுனைநினைந்த என்றன் வாழ்க்கை
      தவறென்றும் வழிமாறும் என்று ரைக்க
அவமெனக்கு மனப்பேச்சைக் கேட்ட ழிந்தேன்
      அறிவுக்கண் திறந்தாளே! மூன்றே வார்த்தை
'கவலையே மாற்றந்து ரோகம்' என்றாள்
     முதலுனக்கு யிடையெனக்குக் கடைபி றர்க்கு

என்செய்ய? தேவதையே! முருகா! என்றேன்
      எல்லாமே இன்றமிழ்ச்சொல் விளையாட் டாக
என்பிதற்றல் இலக்கணம்பொ ருந்து கவிதை
      எனப்பதிந்தே யெனைப்பார்த்து யெள்ளி நகைக்கும்
என்னாகும்? என்செய்வாய்? என்றக் கறைதான்
      இனியார்மேல் யான்கொள்வேன் இன்னும் ஒன்று
என்னெதிர்கா லக்குறிக்கோ ளாக நிற்கும்
       ஆற்றுமொழிக் கென்னுரைப்பேன் அஃதுன் பெயரே!

எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! இனியும்
       எள்ளளவும் உனைத்துயரப் படுத்த மாட்டேன்
தங்காது யென்மனதில் உன்னைப் பற்றித்
       தான்கொண்ட எண்ணங்கள் முயற்சி செய்வேன்
தங்களுடை வாய்மொழியாம் 'நன்றி'  தன்னைத்
       தான்செலுத்தப் பெருங்கடமை அருணா வுக்கு
எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
       எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 6

“மைக்ரோ டெவில்! (Micro Devil...!) - குட்டிச் சாத்தான்”, என்று சொன்னதும் சிரித்து விட்டான் துரை.

“என்னடா இது?”

“அன்று அந்தப் புலம்பு புலம்பினாய், தேர்ச்சி பெறுவேனான்னு. உன்னைச் சமாதானப் படுத்தவே எங்களுக்குப் போதும் போதும்’னு ஆகிடுச்சு. அவ்வளவு தொல்லை பண்ணிட்டு,  இன்னிக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கியே,  அதனாலதான்” என்றான் ஸ்னோவின்.

‘யார் யாரோ என்னென்னமோ எல்லாம் சாதித்துவிட்டு எத்தனையோ பெரிய பட்டமெல்லாம் பெறுகிறார்கள். எனக்கும்கூட இப்படியெல்லாம் பட்டப்பெயர் வைக்க ஆட்கள் இருக்கிறார்களே’ என்று எண்ணி நெகிழ்ந்து போனான் துரை.

துரை இப்போதெல்லாம் யாரிடமும் கோபித்துக் கொள்வதில்லை. இரவீந்தர் முன்பைவிட மிகவும் பிடித்துப் போன நண்பனாகிவிட்டான். அவனிடம் முன்பு தான் கோபித்துக் கொண்டதை எண்ணி அவ்வப்போது வருத்தப்படுவான். இனிமேல் யாரிடமும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்று தனக்குள் ஓர் உறுதிகொண்டான். இப்போது யார் எவ்வளவு கேலி செய்தாலும், துன்பப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது.

"டேய்! வாங்கடா சாப்பிடப் போலாம். Time ஆயிடுச்சு"
எல்லாரும் சென்றார்கள்.

சே! செம talent ra."
"யார டா சொல்ற?"

சச்சின தான்டா."
"ஆமாம் டா, அவர் 16 வயசுலயே கிரிக்கெட்டுக்கு வந்த மார்க்கண்டேயன்"
"செம கலக்கு கலக்குறார் டா, இந்த God of Cricket"
"தென் ஆப்பிரிக்கா கூட ஆடுறது னா, திருநெல்வேலி அல்வா சாப்படறது மாதிரி னு போட்டிருந்தாங்க பாத்தியா பேப்பர்ல"
". . ."
ஸ்னோவினும் கார்த்தியும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

சிவ பூஜையில் கரடி புகுந்தது.
"ஸ்னோவின்,  எனக்கு ஒரு புதுப்பெயர் வைத்திருக்கிறேன். ‘வெண்பாரதன்’. எப்படி இருக்கிறது?”

“நல்லாதான் இருக்கு, நீயும் உன் தமிழும், திருந்தவே மாட்டியா?” என்றான் ஸ்னோவின்.

“சரி, இப்ப இந்தப் பெயர் வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?”, கேட்டான் கார்த்தி.

“இனிக் கவிதைகளை இந்தப் பெயரிலேயே எழுதப் போகிறேன். முதலில் இந்தப்பெயரில் ஒரு மின்னஞ்சல் உருவாக்கப் போகிறேன்” என்றான் துரை.

ஸ்னோவினுக்கு உள்ளுக்குள் ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘பரவாயில்லை. இவன் பிழைத்துக்கொள்வான். கணினி ஆதிக்கக் காலத்தில், கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவனும் ஒரு காரணம் ஆவான்’

வெண்பாரதன் இப்போது ஒரு குறள்வெண்பா எழுதினான்.
             
               ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே;தான் பெற்ற
                 தமிழும்நண் பர்களும் தான்’
                                               (கதை முடிவுறும். தமிழ்ச்சிந்தனை தொடரும்)