Feb 27, 2011

புதுக்கவிதையாம்...

இப்போதெல்லாம்
இதற்கென்று
சிந்திப்பதில்லை.
எண்ண ஓட்டங்களை
எல்லைப்படுத்தி
எழிலுறச் செய்வதில்லை.

இத்தகு சீரழிவுக்கு
நீதான் காரணம்!
எதைப்பற்றியும் கவலையில்லை
இதுதான் இக்கால உலகம்!
எல்லைமீறிப் போய்விட்டாய்!
இனிமையும் போய்விட்டது!
உன்னுள்ளும் என்னைத் தேட முடியுமா?

நீ ஆள வந்துவிட்டாய்!
நான் காணாமல் போகிறேன்...

என்னாட்சியில்
இனிமை என்ன குறைந்துவிட்டது?
என் ஆட்சியின் பலன்
எல்லாருக்கும் எட்டுவதில்லை!
அரிதின் முயன்றோர்க்கு
எளிதில் இடந்தருவேன்!

உழைப்பின் பலனை ருசித்தவர்கள்
என் தலைமுறையினர்!
அணுவணுவாய் ரசித்தவர்கள்
என் தலைமுறையினர்!
என்னுள்ளே ஏகப்பட்ட
ஆளுமைப் பிரிவுகள்
என்னை நன்றாய் உணர்ந்தவர்களை
எப்போதுமே கைவிடுவதில்லை நான்!
உனக்கு என்ன இருக்கிறது?
உன்னை ஆள்பவர்க்கும் ஆய்பவர்க்கும்
அவ்வளவு ஆழத் தோண்டுதல்கள்
தேவையில்லை!
உரித்துவைத்த வாழைப்பழம் நீ!
உண்மையைச் சொன்னால்
எல்லாருக்கும் நீ 
எளிதில் கிடைப்பவன்தான்!

ஆனால்,
உன்னைப் பற்றியே உணராத சிலர்
உணர்ந்துவிட்டதாய்
உண்மையென உரைத்தே
வீணாய் அறிவிழந்து போய்விட்டார்கள்!
சிந்தனைத் திறனைக் குறைத்துவிட்டாய்!
உன்னைத் திரும்பச் சொல்லவும்
திணருவார்களே!
அப்போது தெரியும் என்னருமை!
ஆனால், ஒன்று கூறுகிறேன்
என்வேரால் விரிந்த ஆலில்லை நீ!
அந்நியத்தின் தாக்கம் நீ!
உன்னையும் விட்டுவைக்கவில்லை அவர்கள்
அவ்வளவே!
வாழ்ந்துவிட்டுப் போ!

No comments:

Post a Comment