Apr 3, 2011

தேங்காயும் நானும்

நிலைமண்டில ஆசிரியப்பா

தேங்காய் ஒன்றை என்கைக் கொடுத்துப்
'பாங்காய் இரண்டு பாக மாக்கு'
என்றார் அன்னை இரண்டாய் உடைத்தே
சின்னத் துண்டுகள் இரண்டை உண்டேன்
தொண்டை 'கரகர' என்றது, தேங்காய்                    5
உண்டால் அங்ஙனம் இருக்கும் எனநான்
எண்ணினேன் சிறிது நேரம் சென்றபின்
கொண்டேன் தும்மல் அளவும் இன்றி
சளியும் பிடித்த(து) உடல்கன கனத்தது
துளிர்த்தன எண்ணங்கள் என்ன டாஇது?                 10
தெங்கம் பழத்தால் சளிபிடித் திடுமோ?
தெங்கம் என்றதும் தோன்றின நினைவுகள்
எப்போதோ படித்த இலக்கியப் பாடல்கள்
தப்பேதும் இன்றிச் சிந்தைக் கெட்டின
'அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம்'மற்றும்           15
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்'என்றும் ஓடின
இன்னொரு நிகழ்வு முன்னொரு நாளில்
எந்தை தந்தார் ஒருதேங் காயை
உடைத்துவா என்றார் உடைத்ததும் அதனை             20
உற்று நோக்கினேன் உளத்துள் உதித்தது
'கொண்டைப் பூவுடையாய்! குளிர்வெண் மையகத்தாய்!
தண்ணீர் மைகுன்றாத் தனியறத் தோடுயர்ந்தாய்!
கண்ணும் மூன்றுடையாய்! காணும் விழாவெல்லாம்
பண்டை முதலிருந்து பார்க்கும் தேங்காயே!'             25
அதனைத் தந்தையிடம் காட்ட வியந்தார்
'அழகாய்க் கவிதை புனைந்தனை அந்த
அழகன் சஷ்டியன் பெருமையை என்சொல'
'இப்படிப் பட்ட தேங்காய் எனக்கு
யெப்படி இந்தத் துன்பம் தந்தது?'                      30
என்றே எண்ணி வியந்திடும் போது
ஒன்றுதோன் றியது 'நம்தந் தைதான்
நாட்டு வைத்திய ராச்சே! அவரிடம்
கேட்டால் புரியும்' கேட்டேன் சொன்னார்
'தேங்கா யால்சளி பிடிக்கா தானால்                   35
தூங்கும் சளியைக் கிளர்ந்தெழச் செய்யும்'
மறுநாள் ஆங்கில மருத்துவர் ஒருவரை
அணுகி அவரிடம் கேட்டேன் சொன்னார்
தேங்காய் உண்டதால் சளிபிடித் ததுவோ?
இருக்கா தப்பா இளநீர் கூட                        40
சிலசம யங்களில் சளிபிடிக் கச்செயும்
வெயிலில் சென்றுபின் உடனே குடித்தலால்
தண்ணீர் கூடச் சளிபிடிக் கச்செயும்
என்றார் எதனை யான்நம் புவது?
தெரிந்தால் உரையும் தெரிந்துகொள் கின்றேன்         45
தேங்காய் தின்றால் சளிபிடித் திடுமோ?
என்றுநான் எண்ணிக் கொண்டிருக் கையில்
குதர்க்க மாய்ச்சில எண்ணங்கள் தோன்றின
ஓ!தேங் காயை உடைத்தத னாலோ
தண்டனை கொடுத்த திந்தத் தேங்காய்?              50
இல்லை யே!அதன் பிறவிப் பயனை
அடைய நானும் உதவியுள் ளேனே!
பின்னே ஏனிது? புரிய வில்லை
என்னன்னை சொன்னார் 'சென்ற வாரம்
ஊருக்குச் சென்றோ மன்றோ? அந்த                55
ஊர்த்தண் ணீருனக் காக வில்லை'
சிரிப்பு வந்த(து) 'அப்படி யோ?'என
'ஆமஃ தூறித் தானதன் வேலையைக்
காட்டும்' என்றார் நம்பி விட்டேன்
இதனொடு நின்று விடவில்லை இன்னும்              60
சிந்தித் தேன்பின் சொன்னேன் 'அம்மா
அந்தத் தேங்காய் எந்தமரத் துக்குச்
சொந்தமோ அந்த மரமோ எந்த
மண்ணைச் சேர்ந்ததோ அந்த மண்ணின்
தண்ணீர் தானெனக் காக வில்லை                  65
அஃதூ றித்தான் வேலையைக் காட்டுது'
இன்னும்சிந் தித்தேன் ஒன்றுதோன் றியது
தேங்கா யோ?இது தெங்கம் பழமோ?
காயொரு பருவம் பழமொரு பருவம்
காயென்றும் பழமென்றும் ஒரேபரு வத்தில்           70
பெயர்பெற்ற பொருளிது மட்டும் தானோ?
என்னுடல் மட்டும் விழுந்து கிடக்க
என்சிந்தை அடங்காமல் சிந்தனை செய்தது...         73
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்