Jun 25, 2011

இனியவன் பேசுகிறான்

என் நண்பா!
இன்னலிலும் இன்பத்திலும்
என்னை எப்படி எழுதிக் குவிக்கிறாய்!
என்பதனால்
உனக்குள் அடங்கியவன் நான்
என்று மட்டும் எண்ணிவிடாதே!
அடங்காதவன் நான்
ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டு
அமுதமாய் இனிக்கிறேன் உனக்கு

எல்லையற்றவன் நான்
அணுவை மட்டுமே அறிந்து
அன்பு கொண்டவன் நீ!
ஆற்றல் கொண்டவன் நீ!
ஆறுதல் கொள்பவனும் நீ!

என் பரிமாணம்
உனக்குப் புரியாது
உன் எண்ணங்களின்
எல்லை வரையே
என்னை வரைவாய்!

எழுத்தே என்வேர்!
எல்லைப்படுத்தி ஆண்டவர்க்கும்
எல்லை இல்லை என்றும்
எல்லாம் நானென்றும்
உணர்ந்தவர்க்கும்
அவரவர் விருப்பம்போல்
அளவில்லா இன்பத்தை
அள்ளிக்கொடுக்க முடியும் என்னால்

இச்சிறு வாழ்க்கையில்
இத்தனைக் கோளாறுகளையும்
இத்தனை இன்னல்களையும்
எனக்கு இழைப்பதாய் எண்ணி
உனக்குள் கோட்டை கட்டி
என்னை
உள்ளடக்கம் செய்யாதே!

எனக்கொன்றும் இழிவில்லை
எப்படி வேண்டுமானாலும்
எந்தப் பரிமாணத்திலும் வாழும்
நிலையானவன் நான்!
நிலையற்றவன் நீ!

அஹிம்சையும் அடக்குமுறையும்
அப்பாற்பட்டவை எனக்கு
பிரளயமும் யுகமும்கூட
பொருட்டல்ல எனக்கு
எழுத்தும் மொழியும்கூட
எல்லையல்ல எனக்கு

உனக்குள் திடமாய்
உறைந்துள்ளேன் என்று
நீ எண்ணினால்
உனக்கே சொந்தமானவன் ஆகமாட்டேன்
உனக்கும் சொந்தமானவன் நான்

எல்லா உயிர்களுள்ளும்
இருக்கும் எண்ணம்
நம்மை மீறிய சக்தி - கடவுள்
நானும் கடவுள்தான்!
உள்ளங்களில் வாழ்ந்து
உலகைக் கடந்து வருபவன் நான்!
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 15, 2011

மாற்றமும் கூற்றமும்

ஏமாற்றம் என்மாற்றம்
எல்லாம் முடிய கூற்றம்
ஆற்றல் என்ப தாற்றம் எனவே
தோற்றிய நெஞ்சம் பின்னர் எங்ஙனம்
ஆற்றம் மாற்றம் ஆற்றும்?
தேற்றம் உளத்தின் தோற்றம்
காற்றில் கலந்த கவலை ஏற்றம்
ஆற்றம் இல்லா தாற்றல் இல்லை
பின்னர் எங்ஙனம் ஏற்றம்?
வாழ்க்கைச் சேற்றில்
வாழ்வே சோற்றில்
மாற்றம் ஆற்றில்
கூற்றம் ஈற்றில்
        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்