Jul 31, 2011

அழகுச் சிலை

அழகுச் சிலையொன்று - என்
அருகில் வந்ததே!
பழகுத் தமிழ்கொண்டு - விழிப்
பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
மனதில் ஒரு களம்கண்டாள்
கண்டதால் களர்நிலம்
விளைநிலம் ஆனதே!
ஒவ்வொரு விதைமுத்தாய்
விழுந்ததே முளைத்ததே
எண்ணத்தில் ஊறிய
என்சிறு கவிதையாய்!

பேசிய ஒரு வார்த்தையில்
புரிந்ததே அவள் நெஞ்சம்!
முல்லைப்பூ நகையினால்
முழுநிலா தோற்றதே!
புன்னகை சிந்திடும்
உதடுகள் தாமரை!
மழலையின் மொழியைப்போல்
கொஞ்சிடும் நாவினள்!

தேவதை அவள் தேவதை
அவள் கண்களின் நேரலை
கண்டதும் வெண்ணிலா
ஒளிக்கதிர் இழந்ததே!
மீன்களும் தம்மினம்
பூமியில் உண்டென
நோக்கின நோக்குங்கால்
அதிசயம் கண்டதே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காணுமோ காட்டாறு?

மேகம் தூதுவனோ?
அலைந்து திரிகின்றது
குலைந்து போகின்றது
காணுமோ காட்டாறு?

ஏவியவன் யார்?
கார்மேகம் அழுது
கண்ணீர் விடுவதைக்
காணுமோ காட்டாறு?

ஏவியவன் இறைவனாய்
இருக்க இயலுமோ?
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?

காயம் பலவுண்டு
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?

குறிஞ்சியோன் முல்லைக்கு
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதற்காதலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நுதற்கா தலமே! நின்னைப் படைக்க
முதற்கா ரணமாய் விளங்கு மாற்றுக்
குணர்த்திடு வாயோ? உணர்வுரைப் பாயோ?
ஏக்கத் தண்ணீர்த் தேக்கத் தொட்டிலில்
அடைபட் டதனை மடைதிறந் தாற்போல்
வழிசெய் நதியாய்க் கடல்சேர்த் திடுவாய்!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தங்கத்திரு மங்கை (வஞ்சிப்பா)

குறளடி வஞ்சிப்பா

தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
னந்தானெதிர் தந்தாளதைச்
சந்தத்தமிழ்ச் சொந்தன்திரு
மஞ்சன்தனைக் கொஞ்சுங்குழந்
தையோவென மெய்யாய்முறு
வல்தந்தவ னுள்ளம்புகுந்
தெல்லையஃ தில்லாமகிழ்
வைத்தந்தருள் கின்றாளவள்
யானோ
சிறுபரு வத்தனன் சீருற
வுறுதுணை யெனக்கிங் கெனநிற் பாளோ?
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காற்றினிலே... பூங்காற்றினிலே...

காற்றினிலே - பூங்
காற்றினிலே - வரும் 
பாட்டினிலே - செவி பெறுந்தேன் 
ஊற்றினிலே - மனம் 
மயங்குதற்போல் - தான் 
இயங்குதற்போல்

நினைவினிலே - நீ 
நேர்கையிலே - புவி 
அனைத்தினையும் - நான் 
மறக்கின்றேன் - உயிர் 
துறக்கின்றேன் - மறு 
பிறக்கின்றேன்

நேரினிலே - நீ 
நேர்கையிலே - ஒரு 
வார்த்தையுமே - என் 
வாயினின்று - வெளி 
வாராமல் - மனம் 
சோராமல் - ஆவல் 
தீராமல்

உறைகின்றேன் - இதை 
அறைகின்றேன் - நீ 
பிறையன்றோ - மனச்
சிறையன்றோ - நல்
சுரமன்றோ - வலக்
கரமன்றோ - பெரு
வரமன்றோ

மொழி பகர்வாயோ?
நுதல் பகிர்வாயோ?
மனம் புகுவேனோ?
மணம் புரிவேனோ?
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்