Sep 30, 2011

மாலைமாற்றுக் குறள்வெண்பா

குறள்வெண்பா
மாலை மாற்று

யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா                                                          1

யாதி நலமா? வளமாவாய்! உரை! யுவ ஆம்! ஆள் அவ் அம் ஆல்! அ நதியா

என்ன நலமா? உரைப்பாயாக! இளமையுடைய அந்த அழகியவனால் ஆளப்பட வேண்டியவளாகிய அந்த நதியாவே!

நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா                                                       2

நாதடவு தேதமிழ் அ ஆசிரியராய் அரிசிவாழ் அமித தேவுடு அது அ நா.

நாவினிக்கத் தமிழைச் சொல்லிக்கொடுத்த அந்த ஆசிரியராகிய அத்தலைவர் இறைவனுக்கு நிகரானவர்.

அரிசி - அரியும் சிவனும்
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்



நலம் விரும்பி

நெஞ்சுலகில் உலவுகின்ற 
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில் 
வாஞ்சைமிக உள்ளவன்நான்
இனிய உளவாகும் 
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப் 
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தும் 
நீயே நலம்விரும்பி!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதலாளும் நுதற்றோன்றினோனும்

நேரிசை ஆசிரியப்பா

என்னே! கண்டேன் என்னே! கண்டேன்
உன்னில் அவனை உலவக் கண்டேன்
உன்பெயர்ப் பொருளில் அவன்றலை விளங்கும்

உன்னை நினைக்கின் அவன்முகம் தோன்றும்
நதியா றென்றே நவின்றிடின் விளங்கும்
உன்சொல் கேட்கின் உன்பெயர் விளங்கும்
அழகுத் தமிழன் முருகன்
பழகு மொழியாய்! காத லாளே!

               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 17, 2011

கார்த்திகேயன் - விஜயலட்சுமி (திருமண வாழ்த்து)

உளமார வந்தித்தோம்! விழியாரச் சந்தித்தோம்!!
திருவார்ந்த கார்த்திகைக் குமாரர்தம் வாழ்க்கையிலே
பெருவிஜயம் மனம்இணையும் அமுதவளத் திருவமலத்
திருநாளில் வாழ்த்தியோர்க்குப் பெருநன்றி பகர்வோமே!           (1)

நேரிசை வெண்பா


கார்திகையும் காற்றிகையும் காணுபிற நாற்றிகையும்
கார்த்திகையான் கார்த்திகேயன் கார்திகைய - ஆர்த்தபுகழ்
கார்த்திகைவா ளைக்குலம்வாழ் கார்த்திகைமீன் கண்சிமிட்ட
கார்த்திகைக்க திர்மறை கார்                                                                       (2)

கரவருடத் தாவணியில் காணுபதி னாறில்
விரவும் சுவாதிமதி யோடு - மரபுதவழ்
சுக்கிரனார் நன்னாளில் சுந்தர மன்றலுக்கு
மிக்கமகிழ் வோடுவாழ்த்து க.                                                                     (3)
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி  சேகர்

நடராஜன் - தனலட்சுமி (திருமண வாழ்த்து)

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொங்கும் உள்ள மகிழ்வுக் களவே இல்லை இப்போது
  புனலும் தடமும் போல நீங்கள் வாழ்க பல்லாண்டு
தங்கும் மகிழ்ச்சி என்றும் குறையாத் தனித்தன் மையோடு
  தனநடம் என்னும் செல்வம் பெற்று வீறு நடைபோடு
சங்கம் என்னும் நெஞ்சம் ஆளும் திறமை தன்னாலே
  சரித்திரம் சொல்லும் தனிப்புகழ் பெறுவீர் உலகின் முன்னாலே
குங்கும நுதற்கண் பார்வையால் காணும் தின்மைகள் இரியட்டும்
  குதூகலம் பொங்கும் இத்திரு நாளில் நன்மைகள் பெருகட்டும்
                                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இலட்சுமணன் - ஜெயா (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

மன்றல் கொள்ள வந்த தலைவ!
தென்றல் உன்றன் உள்ளம்; சொல்லும்
சொல்லும் செம்மை உடைய தாகும்;
வெல்லும் உன்கை! ஆதா ரந்தான்
ஜெயமே கொண்டனை! வேறென் வேண்டும்?
வயப்படும் உள்ளும் உயர்செயல் எல்லாம்
குணமுயர்ந் தோங்கிக் குடிப்பெயர் தாங்கி
மணம்புரிந் திருமனம் ஒன்றி வாழ்க!
வாழ்க நலத்தொடு! வாழ்கபல் லாண்டு!
வாழ்க செம்மை யோடு வாழ்கவே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

செந்தில்நாதன் - அகிலா (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

உள்ளம் களிகூர உறவுத் திரள்சூழ
உள்ளும் செயல்யாவும் உளதாய் நிறைவேறச்
செந்தில் நாதற்குச் செந்தூர் எழில்முருகன்
வந்து பொழியருட்சேர் மன்றல் நலம்காண
அகிலம் உடைத்தான பரிசுப் பெரும்பேறு
முகிலின் அருட்போலும் முழுநில வதைப்போலும்
நிறைந்து பல்லாண்டு நிம்மதி மனமாண்டு
சிறந்து மகப்பேறு சீர்மை சொலவேண்டும்                             (1)
--------------------------------------
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எந்நாளும் பொன்னாளாய் இனித்திருக்க
  ஏற்றங்கள் எப்போதும் கைகொடுக்க
சந்தானம் மன்றுதிரு இராமலிங்கம்
  சிறந்தோங்கப் போற்றுதிரு மதிதுர்கா
சுந்தரமின் னொளிதோன்று வசிமுகிலும்
  ஜோதியொளிர் நலம்யாவும் ஒருசேர
வந்தோரும் வாழ்த்துகவே செந்திலகம்
  அகில்நுதலில்! அகில்நிறைவில்!! குகனருளில்!!!              (2)
                                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 16, 2011

அன்புத் தொல்லை (திருமண வாழ்த்து)

ஆம் சொல்லு ஜீவா...!

எங்கடா இருக்க? ஆஃபிஸ்லயா?

இல்ல வீட்லதான் இருக்கேன்... மார்னிங் ஷிஃப்ட்...

சரி! ஒரு கல்யாணம். ரிசப்ஷனுக்கு வந்திருக்கேன்டா...! உடனே ஒரு கவிதை வேணும்!

டேய்! மணி இராத்திரி பத்தரை ஆகுது...! தூங்கப்போற நேரத்துல கவிதை கேக்கற?

இதோ பார்ரா...! இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு கவிதை வரலனா, தூங்க விடாம தொல்ல பண்ணுவேன்... நீ ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணாலும் எப்படியாவது தொல்ல பண்ணுவேன்!!!

(அவன் எப்படித் தொல்லை கொடுப்பான் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை... அவனுக்குத்தான் தெரியும்)

அதல்லாம் முடியாது...! குட் நைட்...

உடனே அனுப்புற... ஃபோன வையிடா...

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

மறுபடியும் அலைபேசியில் அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... அடுத்த இரண்டு நிமிடங்களில் ஜீவாவிடமிருந்து அழைப்பு.

ஏய்...! உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...? சரி! ஒரு எட்டு வரில பொதுவா ஒரு வாழ்த்துக் கவிதை இருக்கு... அனுப்பவா? மெயில்ல அனுப்பவா?

டேய்...! இப்ப வேணுங்கிறேன்...! எப்ப போய் பிரிண்ட் அவுட் எடுத்துக் குடுக்கறது? மெசேஜ்ல அனுப்புடா... சும்மா நாலு வரில நச்சுனு இருக்கணும்.

நாலு வரியெல்லாம் கவிதையா...? சரி... பொண்ணு மாப்பிள்ளை பேர சொல்லு...

அந்த அண்ணன் பேரு அறிவழகன்... அவங்க பேரு வீணா...

மீனாவா...?

'வீ... வீ...' டா...

ஓ! 'வீணா' வா?

சரி சரி... மெசேஜ் அனுப்புறேன்!!!

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஜீவாவை அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... சற்று நேரம் கழித்து, ஜீவாவிடமிருந்து அழைப்பு..

சொல்லுடா...

மெசேஜ் வந்துச்சா...?

இதோ பாக்குறேன்...

காமெடியாதான் இருக்கும்... என்ன பண்றது...?

ஆம்... ஓகே! சரி ஃபார்வார்ட் பண்றேன்...

சரி... இப்ப எங்க இருக்க...? யாருக்குக் கல்யாணம்...

மைலாப்பூர்லதான்டா இருக்கேன்... அந்த அண்ணன் எங்க ஊருதான். ரிசப்ஷன் இங்க வச்சிருக்காங்க...

சரி... ஓகே! டேக் கேர்... பை...

உம். பை...

உம்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

--------------------------------------------------------------------------------------------
வீணையும் ஞானமும் வாணியின் சொத்து!
சேர்ந்தது அழகெனும் செம்மைநல வித்து!
உளம்நிறை மகிழ்விலே வசந்தங்கள் சேர்த்து
உயர்வுதான் வாழ்விலே என்பதென் வாழ்த்து!

என்செய்ய...? இதையும் கவிதையென ஏற்றுக்கொள்கிறார்கள்...
எனக்குத்தான் திருப்தி இல்லை!
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோட வேண்டுமே என்று!
ஓடட்டும் எனச் சேர்த்தால் ஓசை நழுவுமே என்று!