Nov 27, 2011

சாம தான பேத தண்டம்

எதிரியைப் பணிய வைக்க நான்கு படிமுறைகளை வேதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன. அவை சாம, தான, பேத, தண்டம் என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.

'தங்கமலை இரகசியம்' படத்தில் இவை கையாளப்பட்டன. ஒவ்வொரு முறையைக் கொண்டும் ஒவ்வொரு வகையான எதிரியைக் கையாள்வதாகக் காட்டியிருந்தார்கள்.

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைத்தல், தண்டனை கொடுத்தல், யுத்தம் செய்தல்

இவை நான்கும் தோற்றுப் போகுமா? என்பது என் ஐயம். 'மன் மதன் அம்பு' படத்தில் நான்கும் தோற்றுப்போய், தகிடு தத்தம் செய்து (நாடகமாடி, ஏமாற்றி) வெல்வதாகக் காட்டியிருந்தார்கள். 'தங்கமலை இரகசியம்' படத்தின்படி எதிரியிடம் பொய்சொல்லி, ஏமாற்றி வெல்வதாகச் சொல்லப்பட்டது பேத முறைப்படி.

Nov 12, 2011

என் நண்பன்

குறள் வெண்பா

பெருந்தொலை நண்பா! பொருந்தலை நண்பா!
வருந்தலை நான்வாழ் வினில்.
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பெருந்தொலை - பெருந்தொல்லை, பெரும் தொலைவு
பொருந்தலை - பொரும் தலை, பொருந்தவில்லை
வருந்தலை - வருந்தவில்லை

Nov 7, 2011

முருகேசன் - தேவி (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

பொற்றேர் எழுந்து புறப்பட் டாற்போல்
பெற்றோர் சுற்றம் பேரன்புத் தோழர்
மிகுசூழ் மகிழ்நாள் முருகேசன் தேவி
தகுவாழ் பெறுக வீரெண் பேறாம்
கல்வி யாற்றல் வெற்றி யிளமை
நல்லூழ் ஆயுள்நோ யின்மை பெருமை
நெற்புகழ் அறிவு நுகர்ச்சிநன் மக்கள்
பொற்றுணிவு பொருளவை பெறுகென வாழ்த்தும்
தனவேல் அருள்சசி தமிழர சன்சிவா
மணியுறழ் வண்ணன் மாமணி கண்டன்
அணிமுகில் பிரபா அமலன் இரஜினி
பால சண்முகம் இராம மூர்த்தி
ஞாலம் உளவள நற்புகழ் பெற்று
வாழிய வளத்தொடும் நலத்தொடும் என்றே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்