Jan 19, 2013

மா வண்டு ஏன் மா வண் தேன் தேடி

நேரிசை வெண்பா

காவருங்கா லுள்ளத்தைக் கல்லாய் 
அடைத்துப்பின் 
ஏவல்லி ஏங்காதே இன்னாதே - மாவண்டேன்
மாவண்டேன் றேடி மலையாதும் காணாது
நோவது நீயறி வாய்
                - தமிழகழ்வன் சுப்பிரமணி 

ஏ வல்லி! கா வருங்கால் உள்ளத்தைக் கல்லாய் அடைத்துப் பின் ஏங்காதே இன்னாதே
மா வண்டு மா வண் தேன் மலை யாதும் தேடிக் காணாது நோவது ஏன்?  நீ அறிவாய்           - தமிழகழ்வன் சுப்பிரமணி

Jan 9, 2013

முள்ளம்பன்றி

கலி விருத்தம்

முள்ளம் பன்றித் தைக்கும் முதலே!
கொள்ளென் பென்றி ருப்பார் அன்பர்
வள்ளு வன்றன் பொன்மொழி போலவ்
வுள்ளன் பன்றி வேறென் வேண்டும்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
முள் அம்பு அன்றித் தைக்கும் முதலே!
கொள் என்பு என்று இருப்பார் அன்பர்
வள்ளுவன்தன் பொன்மொழி போல்
அவ்வுள்ளன்பு அன்றி வேறு என்(ன) வேண்டும்?

என்பு - எலும்பு

Jan 4, 2013

முத்து முகிற்பா (பிறந்தநாள் வாழ்த்து)

இன்னிசை வெண்பா

முகிற்பா முகிழ்ப்பால் முகப்பால் சிரிப்பாள்
திகைப்பாள் தவிர்ப்பாள் திடுமென்(று) அதிர்வாள்
எதற்கா யெனநான் வினாதற்(கு) உரைப்பாள்
பதின்க வனத்தா ளவள்.                         1

நேரிசை வெண்பா                   

பேச்சுப் புலியே! பிறர்பேச என்னாவாய்?
கீச்சுக் கிளியாய்க் கிடப்பேனே! - மூச்சுப்
பிடித்தே பகர்வாள் பிடித்தன வெல்லாம்
பிடிக்கா தனபுலம்பு வாள்.                             2

“இன்பொருள் இவ்வுல கத்தில் ‘ம’கரத்தில்
அன்னை அவட்கடுத்(து) அம்முகில்” - சொன்னதற்(கு)
உள்ளம் நிறைத்தனை! என்றே உரைத்தனை!
வெல்லுஞ்சொல் வேறில்லை யே.                       3

புத்தக மேபடித்(து) எந்நாளும் பண்பட்டுப்
புத்தகம் பெற்றுயரு மாபடிப்புப் - புத்தகமே!
வித்தக மேதைய லால்வேறென்? புத்தகச்
சித்தகம் செய்தாயை சொல்.                           4

மடமிது! ‘பால்வழு’ நன்(று)அன்(று)என்(று) எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா! - அடடாவஃ(து)
என்னென்று சொல்லவா ‘டா’வென்றால் ‘டா’வில்லை
‘அன்புள்ள அம்மணி’ யே!                            5

தமிழ்த்தோழி தானயத் தானையவள் தன்னேர்
அமிழ்தாழி யாகின் குரலாள் - உமிதாங்(கு)
அரிசிவமாய்க் காக்கும் அருந்தகையாள் வையம்
பெரியதோ? இல்லை அவட்கு.                         6

முத்து முகில்மழை முத்தம் தரதரை
வித்து பெறுவரம் ஒட்டியதே - கத்து
கடலெனச் சிற்ற ருவிதனைச் செய்யும்
திடமுள செம்மை யினாள்.                            7

நாணல் நதிக்கொரு நன்னண்பன் நாடொறும்
நாணல் எனவாழ்த் திடும்பிறந்த - நாணல்வாழ்த்(து)
என்றோழி! வாழ்கநீ டூழி! யுளமுழுதும்
இன்பக் கடலாழ்ந் திரும்.                             8
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்