Dec 17, 2014

தீவிரவாதம் ஒழிக

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னதான் வேண்டுமென ஏதுமொரு தெளிவுமின்றிச்
சொன்னதனைச் செய்கின்ற சுயபுத்தி யில்லாத
பேரறிவுக் கொழுந்துகளே! பெருந்தீமை புரிந்திட்டீர்!
ஆறறிவு உமக்கிருந்தால் ஆரவரென் றெண்ணியுளம்
பேதமிலா தொற்றுமையைப் பேணியுளங் குளிர்ந்திருப்பீர்!
பேதைகளாய் வாழ்ந்தோடி அரக்ககுணப் போதையிலே
மேதைகளாய் விளங்குயிரைப் போக்கிவிட்டீர்! போக்கிடமும்
இல்லாத புறம்போக்குப் போக்கிரிகாள் செத்தொழிவீர்
பொல்லாத உன்குழுமம் நில்லாமல் போகட்டும்
ஆருயிரை வதைப்பதற்கு ஆருரிமை தந்ததுமக்
கீதெனுளம் ஈதென்னூர் இஃதென்றன் நாடுலகம்
யாதொன்றும் அறியீரோ? ஏன்பிறப்பு பெற்றீர்கள்?
போகுவழி தவறென்று போதிக்க வில்லையுமைப்
பெற்றெடுத்துப் பேதைகளாய் ஆனாரே அவர்க்கென்ன
பெற்றுக்கொ டுத்தீஇர் பெருந்தீமை வடிவெய்தி!
புற்றுக்கி ரையாவீர் நற்சாவே வாராது!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 10, 2014

வெண்பாவாய்ப் பட்டேன்

நேரிசை வெண்பா

நெஞ்சமெலாம் நீயே நிறைந்திருக்க வேறேதுங்
கொஞ்சமேனு மச்சிந்தைக் கெட்டாதே - தஞ்சமடைந்
திட்டேனென் னாழ்மனத்தி னெண்ணமே வெண்பாவாய்ப்
பட்டேனென் னேயென்னே பண்

                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்க வேறு ஏதும் கொஞ்சமேனும் அச்சிந்தைக்கு எட்டாதே! தஞ்சம் அடைந்திட்டேன் என் ஆழ்மனத்தின் எண்ணமே! வெண்பாவாய்ப் பட்டேன் என்னே என்னே பண்!

       என்னவளே! என் நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்கிறாய், ஆதலால் வேறு எதைப்பற்றியும் சிறிதளவுகூட சிந்திக்க முடியாமல் தவிக்கும் என் மேலோட்ட மனம், என் ஆழ்மனத்தில் புதைந்த உன்னைப்பற்றிய எண்ணங்களிடம் தோற்றுப்போய்த் தஞ்சம் அடைந்துவிட்டது.
      இக்கருத்தைக் கொண்ட என்மனம், இயல்பான உரைநடையில் இதை எடுத்துரைக்கத்தான் முதலில் எண்ணியது. ஆனால், போகிற போக்கில், அஃது அக்கருத்தை நல்ல கட்டமைந்த தளைகளால் உண்டாகும் வெண்பாவின் வடிவிலே உருவாக்கிவிட்டது. அந்த வெண்பாவாகிய பாடலின் அருமையை எண்ணி வியக்கிறேன்.

உடைந்த உளத்தன்

கலிவிருத்தம்

உடைய வுடனிலா(து) உடைந்த வுளத்த!தே(டு)
உடையன் அடிமனத்(து) உறைய மறைக்குமா?
கொடைய ளித்தெனத் தங்கை தன்னுரை
கடைப்பி டிப்பனோ? காண்பன் காண்பனே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 14, 2014

அருண்குமார் - அருணா (திருமண வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

மதுர மொழிய மதுரைத் தமிழ
விதுர நெறிய விசய விழிய
அருண வருண பனிக்கும் அருள
ஒருத னிப்பேர் உயர்ந்த பண்ப
தென்றல் இதய தேன்றன் பதிப்ப
மன்றல் நன்னாள் மகிழ்ச்சி பெருக
தங்க வமுத வருணம் பெறுக
எங்கும் எதிலும் ஏற்ற நிறைய
எண்ணம் வளர்க இதயம் நிறைவ
தாக நெஞ்ச தாகம் நட்பாம்
ஒன்று தனியென் றிராஅ தொன்றிய
வொன்றா கிடுக வெல்லாம் வெல்லம்
உள்ள வெள்ளம் என்க
உயர்தனிச் செந்தமி ழெனவா ழியவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 15, 2014

பிரிவு

கலிவிருத்தம்

என்றுந் தனிமை யென்றுன் றனிமை
ஒன்று ரைக்கு மொன்றா நாழிகை
என்ற னுள்ளங் கொன்று வாழும்
இன்று ணைவன் இலனோ என்க

            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்றும் தனிமையென்று உன்றன் இமை
ஒன்று உரைக்கும் ஒன்றா நாழிகை
என்றன் உள்ளம் கொன்று வாழும்
இன் துணைவன் இலனோ என்க.

Aug 12, 2014

இழப்பும் அச்சமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், 

தொலைந்த தென்றதோ ருண்மையினும்
    தொலைக்கப் போகிறோம் என்பதனால்
தொலைத்து விடுகிற வாழ்வினிலே
    தோய்ந்த வச்சமென் செய்வேனோ?
தொலைத்தல் தோல்வியும் வெற்றியுமாய்த்
    தொலைந்த தொலைவத னுள்ளடங்கும்
குலைக்கச் செய்வது மதன்வேரில்
       குடியி ருக்குமப் பயந்தானே
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


மா-விளம்-காய்

Aug 7, 2014

சுபத்திரா (பிறந்தநாள் வாழ்த்து)

பஃறொடை வெண்பா

சுபத்திரா வாழ்க; சுகத்துடன் வாழ்க
சுபமாஅ யெச்செயலும் செய்துயர்ந்து வாஅழ்க
என்றன்றங் கையென்றும் இன்ப முறவாழ்க
நன்றென்றும் நின்வாழ்வில் சூழ வலம்வருக
அன்பாழி முத்தா யகங்குளிர வாழ்கவுயர்
பண்பாலே பேர்நிறுத்திப் பார்போற்ற வாழ்க
ககரமே யென்றால் கருப்பட்டி முன்னே
வகரமே யென்றால் வழித்துநக்கென் றோதும்
இலகுமனத் தாள்வாழ்க வின்முகத்தாள் வாழ்க
குலம்வாழ்க வாழ்க வினிது.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 5, 2014

கைக்கிளை

கலிவிருத்தம்

கைக்கிளை யேதங் கைக்கிலை யேசிந்
தைக்கிலை துன்பம்? தங்கிளை என்பன்?
மெய்க்கிளைப் பேறிடச் செய்க்குழைப் பாம்வீண்
பொய்க்குரைப் பேனே! நானே! நலமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:

கைக்கிளையே தம் கைக்கு இலையே (கைக்கிளை ஏதம் கைக்கு இலையே)
சிந்தைக்கு இலை துன்பம்? தம் கிளை என்பன் ?
மெய்க்கு இளைப்பு ஏறிடச் செய்க்கு உழைப்பாம் வீண்
பொய்க்கு உரைப்பேனே! நானே நலமே!

கைக்கிளை - ஒருதலைக் காதல்
ஏதம் - குற்றம்
தங்கைக்கிலை - தம் கைக்கு இலை
சிந்தைக்கிலை - சிந்தைக்கு இலை
இலை - இல்லை என்பதன் இடைக்குறை
தங்கிளை - தம் கிளை
கிளை - உறவு
மெய்க்கிளைப்பு - மெய்க்கு இளைப்பு
செய்க்குழைப்பாம் - செய்க்கு உழைப்பாம்
செய் - நிலம், துறை
செய்க்கு - துறைக்கு, நிலத்திற்கு, களத்திற்கு
பொய்க்குரைப்பேன் - பொய்க்கு உரைப்பேன்

இஃது என் வாழ்க்கை?

கலிவிருத்தம்

ஒன்றி னுள்ளே வொன்றிய காலே
பின்னொன் றுள்ளே யுள்ளஞ் செல்லே
னென்ற மிழ்ந்த டம்பி டிக்கக்
கன்றுள் ளத்தன் கருத்தா யாமே


அக்க ருத்த ழிந்த பின்னே
அக்க ரந்தான் மாறிச் செல்ல
அக்க ரையாற் றுச்செல் வந்தான்
அக்க றைநெஞ் சுள்ளே செல்லும்


இங்ஙன மாகக் கணத்திற் கொன்றாய்க்
கங்கணங் கட்டிக் கொண்டே றெண்ணம்
தங்கவி டாதே யொன்றிலு மொன்றாய்
எங்ஙன மறிவே னிஃதென் வாழ்க்கை?
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2014

ஒன்றா? சுழியா? ஒன்றாச் சுழியா ?

நேரிசை ஆசிரியப்பா

விண்ணில் ஒளிரும் எண்ணில் மீன்கள்
ஒன்றை யொன்றறி யாதே யாயினும்
மிளிரும் அதுபோல் இம்மீ னுக்கும்
யாதொன் றுந்தெரி யாஅ தாயினும்
மிளிர்தல் குறைவிலை எல்லா மறிய                         5
வேண்டு மென்னும் எண்ண மதற்கிலை
அறிந்து தானென் செயப்போ கிறது
அதன்வழி யதனெண மதனுணர் வதன்கோள்

எண்ண வரிய வணுக்க ளதன்கூட்
டமைவை நோக்கின் ஒருசெல் லாதலின்                10
உயிருள் ளதுவோ உயிரில் லதுவோ
இறைவன் பார்வைக் கெல்லா மொன்றே

ஒன்று மிலாத ஒருகூட் டாய்ச்சேர்ந்
தென்ன படைத்தென? உயர்ந்தோன் பார்வைப்
பேராழி யுலகும் ஓரணு வாமே                                      15

தோன்றிய யாவும் தோன்றுயா வற்றையும்
ஊன்றிய உருவங் கொடுத்துப் பகுத்தே
ஆய்ந்து காலம் போக்கு கிறது
முடிந்த வாழ்வை எண்ணிப் பார்க்க,
கடந்தது காலம் மட்டும்                                                    20
ஆற்றிய யாவும் அனர்த்தமா கும்மே

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 19, 2014

என்ன சொல்ல வந்தாய்?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்ன சொல்ல வந்தாயென்
  நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
   ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
    சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
    யானுறக் கந்தான் கொள்வதுவே?

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 17, 2014

மனப்போக்கு

      எனக்கென்ன பாட்டெழுதத் தோன்றிடினு மாங்குமுன் வந்தமையு மருஞ்சந்தமு மதற்கேற்றாற்போ லமையுஞ் சொற்களு மச்சொற்களின் பிரிதன்மைப் பொருளுஞ் சேர்தன்மைப் பொருளு மாங்காங்கே விரவி யகத்தின்மகிழ்வைச் சேர்த்தழகு பார்க்கு மருந்தமிழே வுனையல்லால் வேறுயாரை யென்னுள்ளே யெப்போது மெண்ணிக் கொண்டிருப்பேன்?
    எக்காலு முன்னையே யெண்ணி யெண்ணி மகிழ்வுகொண்டிருக்கு மிவ்வுயிர் செய்த தவப்பயன்றா னென்ன? ஏதுமிவ்வுலகில் வேண்டாமென யெண்ணு மளவுக்கென் னுள்ளத்தை வயப்படுத்தி யேதோ வுளறுகிறே னென்றுபிற ரெண்ணு மளவுக்காளாக்கி விட்டனை. இதற்கியா னின்பங் கொளவா துயர்கொளவா யென்பதைப் பற்றியு மெண்ணுதற் கென்மன மொப்பவில்லை.

Jul 15, 2014

சீர்குலைவு

முதல்வரி மட்டுமே நினைவில் நிற்க, மற்ற வரிகளையும்தேடி மகிழ்வோம் என்று இணையத்தளத்தில் தேடிக் கடுப்பாகிவிட்டேன்.

ஒருபாடலைத் தேவைக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் மாற்றி எழுதிக் கொள்(ல்)கிறார்கள். இன்னும் விரிவாக அதனை எழுதி, அதைப் பெருமைப்படுத்துகிறார்களாம். ஒருபாடலை, அதனுடைய சந்தத்திலேயே எழுதுதலும் படித்தலும் எவ்வளவு இனிமை என்று அறியாத அறிவுக்கொழுந்துகளின் கண்ணியமான செயல் இது. ஒருபாடலை - அதனுடைய கட்டமை
ப்பை - அதனுடைய இலக்கணத்தைக் குலைக்காமல் இருப்பதற்குச் சீரும் தளையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவுச்சுடர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை இது.

பாரதியின் பாட்டையே கொஞ்சம் மாற்றி எழுதி, அவருக்கே வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.

போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!

பாரதி உயிரோடு இருந்தால் மீண்டும் இறந்திருப்பார். என்னடா இது, சீர்களும் அவற்றோடு ஒட்டி உறவாடும் சந்தமும் சரியாக இல்லையே எனத் தோன்றியது. மீண்டும் மீண்டும் படித்துச் சந்தத்தில் கொண்டுவர முயன்று கடுப்பாகிவிட்டேன்.

சரியான பாடல் எது என்பதில் எனக்கு இப்போது ஐயம் தோன்றுகிறது.

போற்றி போற்றியோ ராயிரம் போற்றிநின்
   பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
   செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
   துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதர சேயெங்கள்
   சாதி செய்த தவப்பயன் வாழிநீ!

இந்த வரிகளும் சரிதானா?

இன்னொரு பாடலும் இங்ஙனம் சீர்குலைந்தது எனக்கு நினைவிலிருக்கிறது.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஒருவெண்பாவின் ஈற்றடியில் எத்தனை சீர்கள் இருக்கவேண்டும் என்பதைக்கூட உணராமல், எப்படி மாற்றி இருக்கிறார்கள்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

Jul 10, 2014

சேர்த்தெழுதுதலி னினிமை

நீடாழி யுலகத்து மறைநாலோ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன்
கோடாக யெழுதும்பி ரானைப்ப ணிந்தன்பு கூர்வாமரோ

                                                  - மகாபாரதம்

இங்ஙனஞ் செய்யுற்றமிழிலு முரைநடையிலுஞ் சேர்த்தெழுதிப் பழகுதல் மனத்திற் கெவ்வள வினிமை நல்குகிறதென்பதை யாரிடம்போய் யான்சொல்வேன்.

என்றோழி யெனக்கென்றன் பிள்ளைக்கால் பயில்தமிழை
நன்றாக நினைவுறுத்தி நலமின்பங் கொளச்செய்தா - ளவள்
நன்றாக யிவ்வுலகம் போற்றிடவே வாழ்கவென
நெஞ்சார வாழ்த்துகிறேன் வேறென்ன யினிதுலகில்

                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 5, 2014

என் புதிய தோழமைக்கு ஒரு சிறுபரிசு

நேரிசை வெண்பா

உள்ளத்தேன் மாமொழியை யோரா வளவிற்குக்
கொள்ளத்தேன் சொற்பேச்சுத் தோழமையே - வெள்ளத்தேன்
உள்ளத்தான் வெண்பாவை வெண்பாவைக் கேயளித்தே
கொள்ளுவன் கொள்ளாவின் பம். 
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 3, 2014

செய்யுள் உணருரை

செய்யுளாய் இருந்த என்னை
உரைநடையாய் உருமாற்றி
உன்னளவுக்கு இறங்கிவிட்டேன்
என்னளவுக்கு இரங்காமல்
செய்யுளாகவே இரு
வேண்டாம் இந்த உரைநடை என்று
ஏன் என்னைக் கொல்கின்றாய்?

உனக்கும் எனக்குமான தொலைவு
சீர்மிகுந்த செய்யுளுக்கும்

சீர்மைதேடிப் பெயரும் உரைநடைக்கும்
இடைப்பட்டதாகக்

கணத்திற்குக் கணம் கூடிக்கொண்டே போகிறது

நான்
மனிதக் கணத்திற்கு உட்பட்டவன்தான்
எங்கிருந்தும் அருள்புரியும் மாதேவன் அல்லன்
நான் எங்கிருந்தும்
எங்கும் நிறைந்தவளாய்

உன்னைக் காண்பதே
என் பொழுதுபோக்காகிப் போனதன்பின்

அடங்கிய மனத்தான்
தொடங்கிய தவத்தான்
அத்தவம்
உன்னைப்பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது
உன்னை என்மனம் பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது

எந்த ஆணியும் வேணாம்
என்னும் உன்னெண்ணம்
இந்த ஆணும் வேணாம்

என்றும் சொல்கிறது

வந்துவிடப் போகிறது
வாயில் ஏதேனும்
என்றவளே
வெந்துவிடப் போகிறது

என்மனம் என்று
ஏன் உனக்குப் புரியவில்லை

அகந்தைக் கிழங்கு
அகழ்ந்தாகி விட்டது
ஆனால்
அகம் தைகிழங்கு

ஆழத்தில் புதைந்துகொண்டே போகிறது

அகச்செய்யுள் ஆழ்ந்து அமர்ந்தவளே!
அதனுரையை உணர்வாயோ?
 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 1, 2014

வரலாறு பேசணும்ல...

தரவு கொச்சகக் கலிப்பா

என்வீட்டுச் சிறுபூட்டே ஏனுடைந்தாய் எதிர்பாரா
தின்றென்னைச் செலவிட்டே இன்னுயிர்நீத் தனையெனக்குச்
சொன்னிறையாச் செலவீட்டு வஃதெவ்வா றுணர்ந்தாயோ?
என்றாலும் இத்தனைநாள் எனைக்காத்தாய் நீவாழ்க!
                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 19, 2014

அஞ்சுதல் அஞ்சாமை

குறள் வெண்பா

அஞ்சுதற்(கு) அஞ்சாது வாழ்பவன் வையத்தில்
துஞ்சிய யாக்கைக்(கு) இணை
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

வாசுதேவ கிருஷ்ணன்

கலிவிருத்தம்

இளையான் உள்ளம் இளையான் எனினும்
இளையாய் நிற்பன் இளையா யெண்ணி
இளையா யிகழா தேயுளம் இளைக
விளைய ளந்தான் விளைவாய் நிறைவான்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பொருள் :
இளையான் உள்ளம் - உள்ளம் சோர்வடைய மாட்டான்.
இளையான் எனினும் - பலராமனுக்கு இளையவன் என்றாலும் (பலராமன்
சொல்லைத் தட்டமாட்டாதவன் என்றாலும்)
இளையாய் நிற்பன் - காவல்காடாக, கட்டுவேலியாக, கவசமாக நிற்பவன்
இளையாய் எண்ணி - எண்ணிய இயற்றாத இகழ்ச்சிக்குரியவனாய் நினைத்து
இளையாய் இகழாதே - அற்பத்தனமாய் இகழ்ந்துவிடாதே
உளம் இளைக - கொண்ட எண்ணத்தைக் கைவிடுக
இளை அளந்தான் - பூமியை அளந்தவன்
விளைவாய் நிறைவான் - எங்கும் எதிலும் ஏற்படும் எல்லாமுமாய்
நிறைந்திருப்பவன்.

Jun 12, 2014

பொன்றுந்துணையுந் துணை

நேரிசை வெண்பா

ஒன்றாஅ உள்ளத் தழுந்தீஇ வேறொன்றும்
நின்றாஅ டாதூஉ நேர்வதென்ன? - பொன்றுந்
துணையும் துணைவரு மாஅத் துணையுள்
அணையும் அணைவரு மா
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பிரித்தறிய:
ஒன்றா உள்ளத்து அழுந்தி வேறொன்றும் நின்றாடாது நேர்வதென்ன?
பொன்றுந்துணையும் துணைவரு மாத்துணை உள்ளணையும் அணை வருமா?


பொருள்:
பொருந்த இயலாது என்ற உள்ளத்தில் அழுந்தி, வேறு எதைப்பற்றியும் எண்ண இயலாத இந்தக் கைக்கிளையில் நிகழ்வதென்ன? கடைசி வரையில் துணையாக வரும் பெருந்துணை என எண்ணும் உள்ளத்தில் பொருந்திய இந்த எண்ணத்திற்குப் பொருந்த வேண்டியவை பொருந்துமா?

Jun 3, 2014

தமிழ்வரம்

கலிவிருத்தம்

உடற்ற ளர்ந்தனன் உடற்று ளத்தனன்
மிடற்று றைந்தன கடற்று வற்றினன்
தடுத்த போதியன் அடுக்குப் பாவினன்
எடுத்த தமிழினன் இனிய வமிழினன்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பொருள்:
உடல் தளர்ந்தனன் - உடல் தளந்ந்தான்
உடற்று உளத்தனன் - வருந்தும் உள்ளம் கொண்டான்
மிடற்று உறைந்தன கடற்று வற்றினன் - தொண்டையில் உறைந்த தண்ணீரானது வறண்டுபோகும் காட்டைப் போல் ஆனவன்.
தடுத்த போது இயன் - காதலை மறுத்த பெண்ணை நினைத்துக் கொண்டிருப்பவன்.
அடுக்குப் பாவினன் - அழகாய் அடுக்கிப் பாடும் பாவினங்களால்
எடுத்த தமிழினன் - பாடும் தமிழன்
இனிய அமிழ் இனன் - (ஆதலின்)இனியவை அமிழ்ந்திருக்கக் கூடியவன்

கடறு - காடு
மிடறு - தொண்டை
போது - பூ

May 10, 2014

முப்பெருங் கலைமகள்கள் வாழ்க!

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மேலோங்கு வெளியீட்டு மேலாண்மைக் குடும்பத்தின்
     முத்தான இரத்தினங்கள் முகிழ்த்தெழுந்த குடும்பத்தின்
வாலான கடைக்குட்டிப் பாப்பாக்கள் செய்தவருஞ்
     சாதனைகேள் தோழர்காள் தோழீகாள் வாருங்கள்
வாழ்த்திடுவோம் வாயார நெஞ்சாரக் கலைவாணி
     மாவருளைப் பெற்றிட்ட பிஞ்சுள்ளக் குழந்தைகாள்!
வாழ்க!பெறும் பதினாறு பேறுகளைப் பெற்றிட்டு!
     வாழ்கதவ வுள்ளத்துக் கல்வியினாழ் தொட்டிட்டு!
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 8, 2014

கண்ணாவுக்குக் கண்வலி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணா!உன் கண்வலியைக் கண்டே உள்ளம்
    கொண்டபதைப் பெல்லாம்நான் என்ன சொல்வேன்
கண்ணெவ்வா றுள்ளதெனக் கேட்ட தற்குன்
    கண்ணைநி ழற்படமெ டுத்த னுப்பிக்
கண்கலங்க வைத்தனையஃ தாரோ என்றென்

   எண்ணத்தில் தோன்றியதை எழுத்தில் சேர்க்க
கொண்டவழ குத்தேவ தைத்தாய்! என்னே!
   கொஞ்சுமெழிற் சொல்லாலே விடைப கர்ந்தாய்!

                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 5, 2014

வஞ்சம்

நேரிசை வெண்பா

அஞ்சுதலுக் கஞ்சாத வஞ்சமுள நெஞ்சத்த!
செஞ்சதுனைக் கொஞ்சமுமு றுத்தாது - பஞ்சமிலாத்
துஞ்சுமிரு ளுள்ளத்தால் கள்ளமெலாம் வெல்லமெனத்
தஞ்சாத னைக்கூறு தான்.

May 3, 2014

How do I understand Paging Space

எனக்கு மேலே ஏதோ ஒரு சத்தி, 
என் மனத்தில் ஏற்படும் பல்லாயிரத் துணுக்குகளுக்கான சிந்தனைகளை என் மூளை என்னும் RAM-ல் ஏற்றி, 
அவ்வப்போது, மறக்கக்கூடாத சில எண்ணங்களை ஆழ்மனம் என்னும் Paging space பகுதிக்குத் தள்ளி, 
ஒரு கணப்போதில் இத்தனை செயல்களை மட்டும்தான் இவனால் தாங்க முடியும் எனக் கணக்கிட்டு, 
அத்தனை செயல்களை மட்டும் இயக்கும் வல்லமையைத் தந்து, தேவையானவை, தேவையற்றவை எனத் தருணத்திற்கேற்பப் பிரித்தாளும் வல்லமையைத் தந்து,  
இந்த இயங்கு தளத்தை (Operating System) இயக்க வைக்கும் 
அந்தச் சத்தியை (Operator) என்னவென்று சொல்வது? 

உணர்ந்தபின் ஒன்றுமில்லாதது, 
உணராத வரையில், உயர்வானதுதான்!!!

My Dreams

Oh! my sweet dreams!
With all my thinking streams.
What a powerful guide!
And a truthful raid...
Sometimes you are frightening
Making me with brightening
Thoughts, something to write
With the mindful delight.
Whatever I think in real life,
While I'm sleeping very rife.
Oh my sweet dreams
With all my thinking streams...

Apr 14, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

நேரிசை வெண்பா

வாகைக் கெனமனிதர் வேண்டிய செல்வங்கள்
வாகாய் வளஞ்சேர்க்க வள்ளன்மை - வாகுலேயன்
வாரி நலஞ்சேர்க்க வாகைப்புத் தாண்டேமும்
மாரி தனைச்சேர்த்து வா
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கார்த்திக் குமார் - பிறந்தநாள் வாழ்த்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எண்ணந்தோ யெல்லாமும் இனிக்கப் பேசும்
   இயல்பான உயருள்ள வள்ளல் வாழ்க!
வண்ணந்தான் பற்பலவாம் உளத்தே பறக்கும்
   வார்த்தையிலே உலகமெலாம் உயரே பறக்கும்
எண்ணாத எண்ணரிய எண்ணம் யாவும்
   எளிதாக உருவேற்றிச் சாதிப் பாய்நீ!
மண்ணாளும் மன்னன்போல் நீடு வாழ்க!
   மாசம்பத் தெல்லாமும் பெற்று வாழ்க!

                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 13, 2014

இரம்யா பழனி - பிறந்தநாள் வாழ்த்து

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆதவன் அயனத் தாதி
  அருமைத் திருநாள் பிறந்த
சாதனைச் சிறுமி வாழ்க!
  சந்த வண்ணம் சூழ்க!
போதனை மென்மை யுள்ளம்
  புன்மை எள்ளல் பேச்சும்
ஏதமில் எண்ணம் சொல்லும்
  செயலும் வாழ்க! வளர்க!
    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 9, 2014

தன்னிலை விளக்கம் அல்லது தமிழ் முழக்கம்

தரவு கொச்சகக் கலிப்பா

என்னுள்ளத் தோட்டமெலாம் எழினிறைந்த போதலர்ந்தும்
என்னுள்ளத் தோட்டமெலாம் எழினிறைந்தப் போதளர்ந்தும்
கண்ணெறிந்து காதலித லைவதலை வியினினைவும்
கண்ணெரிந்து காதளித லைவலித லைவலியும்
எண்ணத்தே எந்நாளும் எண்ணிச்சொல் லியலாத
எண்ணந்தோ யுந்தாளும் என்னத்தொல் லியலாத்த
மிழ்ச்செழியாள் மகிழ்ச்சியினால் மிடற்றெல்லை வரையுண்டு
மிழ்செழியா மெழுச்சியது போதுமென்ன லைவாய!
                                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய:
என் உள்ளத் தோட்டம் எல்லாம் எழில் நிறைந்த போது(பூ) அலர்ந்தும், என் உள்ளத்து ஓட்டம் எல்லாம் எழில் நிறைந்து அப்போ(து) தளர்ந்தும், கண் எறிந்து(வீசி) காதலி(க்கும்) தலைவ(னுக்குத்) தலைவியின் நினைவும், கண் எரிந்து, காது அளி(க்கும்) தலை(யாய) வலி(யும்), தலைவலியும், எண்ணத்தே எந்நாளும் எண்ணிச் சொல்(ல) இயலாத எண்ணம் தோயும் தாளும் (பாதங்களும்) என்னத் தொல்(எவ்வளவு பழமை எனக் கூற) இயலாத் தமிழ்ச் செழியாள் மகிழ்ச்சியினால் மிடற்று எல்லை (மிடறு - கழுத்து, தொண்டை, குரல்வளை) வரை உண்டு உமிழ்(கின்ற) செழியாம் எழுச்சியது போதும் என் அலைவாய! (அலைவாய் என்னும் திருச்செந்தூர் முருகனே!

காதலிதலைவ, காதளிதலைவலி - வினைத்தொகை
தொல்லியலாத் தமிழ் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அலர்ந்தும் தளர்ந்தும் - முரண்

Mar 29, 2014

அருணா நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

மங்கலச் செல்வி! மரகதக் கல்நீ!
மங்கையர்க் கரசி மதிநிறை வாணி
திங்கள் வதனப் பேரொளிப் பொற்கிழி
சங்கம் நிறைதமிழ் மதுரைப் பைங்கொடி
பொங்கும் உள்ளம் பூரிப் பாலே!
மங்கை உன்மொழி செவிகேட் டாலே!
பேறுகள் பலவும் பெற்று
நூறாண் டுகள்மகிழ் வோடு வாழ்கவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

உணரா மனமே உமராய்!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உணரா மனமே உமராய்!
    உணர்ந்த னைமனத் தமராய்!
கணந்தான் பொருந்து வரமாய்!
    கணத்தில் உணர்ந்த வருமாய்!
குணக்குன் றேகோ மானே!
    குணமே குன்றா மானே!
எணமொன் றிட்ட திடரே
    இலாது யர்வே திடமே!
   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கிளர்ச்சி

கலிவிருத்தம்

நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தை
சுருக்கென் றுரைக்கும் சோம்பல் முறிப்போர்க்குக்
கருக்கென்று பெருகிக் கொட்டும் மழைபோல்
கருக்கொள் மனத்துள்! காலம்நம் கையில்
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நம்பிக்கை

கலிவிருத்தம்

விரலே நீயாய் விரவியே வாயால்
மிரளும் பெண்ணே! முரலும் வண்டே!
கவலை விலக்கிக் கலைத்திறம் பழக்கிக்
கவினால் கலக்க அகிலம் உனக்கே
    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தானறியாது ஆனவள்

தரவு கொச்சகக் கலிப்பா

தானறியா தானவளே தானறியா வாணவனுள்
தானறியச் சொல்வானேன் தானறியா தானதன்பின்
தானறிவன் தன்னுள்ளே தானின்றித் தானொன்றா
தானவனைத் தானவனாய்த் தான்கருதித் தகர்த்தாயோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய :
தான் அறியாது ஆனவளே, தான் அறியா ஆண் அவனுள்.
தான் அறியச் சொல்வான் ஏன், தான்  அறியாது ஆனதன்பின் ?
தான் அறிவன் தன்னுள்ளே தானின்றித் தான் ஒன்றாது ஆனவனைத் 
தானவனாய்த் (அரக்கனாய், பகைவனாய்) தான் கருதித் தகர்த்தாயோ? 

திருச்சிற்றம்பலம்

கலிவிருத்தம்

ஐந்துநி மிடங்கள் அகிலம் மறந்தே
ஐந்தடங் கொருவன் அகிலத் தானை
சிந்தையில் சேர்த்த செம்மை நலமே
அந்தமஃ தில்லா ஆனந் தம்மே!
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வருத்த வெண்பா

குறள் வெண்பா

என்செய வென்செய லென்செய் யதனுளே
புன்செய லென்செயு மா?
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
என்செய - என்ன செய்ய
என்செயல் - என்னுடைய செயல்
என்செய்யதனுள் - வேலை செய்யும் துறையில், அலுவலகத்தில்
புன்செயல் - பயனற்ற செயல்
என்செயுமா? - என்று ஆகுமா?

சுரேஷ் சங்கர் (பிறந்தநாள் வாழ்த்து)

கலிவிருத்தம்

செய்தக செய்துசேர் செம்மைச் செம்மல்!
பெய்தக வன்புளப் பெற்றி பெற்றனை!
உய்தக வழியுரை உயர்வு முற்றினை
எய்தக மொழிசொலி எழுத லாகுமோ?


வழிநேர் தடைகள் தடக்கல் எனவாம்
விழிநேர் துயர்கள் துடைத்தே வழிசெய்
நதிக்கண் பொதிந்துள வினிமை போல
உதித்தவன் வாழிய! சகல வாழிய!

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 25, 2014

நாயகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

நாய்காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
       நாயகனோ மும்முரமாய் வேலையிலே
தோய்மனதாய்த் துவண்டிருந்து முடிந்தபினே
      துரிதமுடன் அடியெடுத்து வைத்தாரே
வாயிற்படி கடந்தபினே நினைவுக்கு
     வசப்பட்ட பகலுணவுப் பாத்திரத்தைப்
போயெடுத்துப் பின்சென்றார் ஆனாலும்
      நாயினினை வெப்போதும் மறக்கவில்லை
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Joao Lima Neto (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை வெண்பா

ஜாஅஓ லீமாநீட் டோ!ஜெயம் கொள்மின்!வாழ்
காஅ வளத்துடன் எந்நாளும் - மாஅ
மனித! நிரல்நிறை பேரறி வாள!
தனித்துவ! வாழிய வே!

                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Hi Joao!
Wish you all success in your life!
Live a healthy & wealthy life!
Live like a king!
Live happy with your great knowledge!
Live great!

Mar 24, 2014

தமிழ்ப்பண்

குறள் வெண்பா
பொருட்பின்வருநிலையணி

இசைவேய் கழையோ? கவிதோய் கவினோ?
நசையார் நயத்தமிழ்ப் பண்.

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தமிழ்

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணமெலாம் நீயே! என்னருமைத் தமிழ்க்குழவீ!
வண்ணமெலாம் பாடுதிறம் வாய்க்கவில்லை என்றாலும்
கொண்டவரை நானுனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
அண்டமள வென்னெஞ்சை ஆட்கொண்டாய்! நீவாழ்க!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கண்மணி

தரவு கொச்சகக் கலிப்பா

நென்னலே நானுணர்ந்தேன் நற்றமிழின் அரும்பாவாய்!
சின்னதொரு விளையாட்டாய்ச் சினங்கொண்டீர் எனநினைந்தேன்.
இன்னலிலை தப்பில்லை 'சரிசாரி அந்தாதி'
உன்றனுடை மறுமொழியும் வியக்குநயம் வாய்த்ததுவே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நான்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னைப் பற்றி யானென்ன சொல்ல?
எனக்கிடம் தமிழுக்குள் புன்னுனி போதும்
எனக்குள் தமிழுக் கிடமிஞ்சும் இமயம்
பள்ளிப் பருவ நாட்களில் தமிழே
துள்ளிவிளை யாடத் துணைவந்த நண்பன்
அவனுள் விளைந்த கலிப்பாத் துள்ளலால்
கவனம் முழுதும் கவர்ந்தவ னானான்
எனக்கென் னிறைவன் புரிய வைத்தான்
'மனத்திற் கினிமை தனித்தமிழ் சேர்க்கும்'
கல்லூரி சென்றதும் பிரிவு கொண்டேன்
அல்லல் கொண்டேன் அருந்தமிழ் நண்பன்
பிரிந்துவிட் டானே என்றே அரற்றினேன்
உரிமை எனக்கிலை உறவை அறுத்ததே
இளந்தொழில் நுட்ப வியலில் மூழ்கினேன்
இவ்வாண் டில்லது இறுதி பெற்றது
கலையும் தொழிலும் கந்தன் அருளினான்
கலக்கம் தவிர்த்துக் களிப்பு கொண்டேன்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரியாவிடை

வேகமாய் ஓடிய காலங்கள்
வேதனை நெஞ்சில் கோலங்கள்               1

கொடுமை வார்த்தைச் சிதறல்கள்
கொண்டவன் நெஞ்சப் பதறல்கள்             2


இல்லை இனியே என்றாலும்
வாரா இனியும் அந்நாளும்                           3

ஒருவனை ஒருவன் ஓட்டுதலும்
கோபம் மகிழ்ச்சி காட்டுதலும்                   4

நெஞ்சம் தொட்ட பேச்சுகள்
நேயம் வைத்த மூச்சுகள்                             5

நேரில் காணல் இனியரிது
பாரில் இக்கொடு மைபெரிது                     6

உணர்வுப் பூர்வச் சிந்தனைகள்
உடனே அவற்றின் நிந்தனைகள்            7

களிக்கும் வகுப்பு இனியமைதி
கண்களில் நீரின் நினைவிறுதி               8

கூடி வாழ்ந்த பறவைகள்
தேடிச் செல்லுதே பலதிசைகள்              9

குன்றின் தீபச் சுடரொளிகள்
குவலயம் எங்கும் படரொளிகள்            10

கூட்டச் செறிவு மேகங்கள்
குளிர்ந்த மழைத்துளித் தூறல்கள்         11

வேடிக்கை நிந்தனை விளையாட்டு
வீரியப் படிப்பு இனியில்லை                    12

கண்களைத் திறந்தே உறங்குதலும்
உறங்காக் கனவும் இனியில்லை            13

எல்லாம் எல்லாம் முடிந்ததுவே
இன்னொரு பொழுதும் விடிந்ததுவே    14
          - தமிகழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பாரதியார்

பாரு தம்பி பாரப்பா
    பாரதி யாரைப் பாரப்பா
கேளு தம்பி கேளப்பா
    பாரதி சொல்லைக் கேளப்பா

பாரதி யாரோ?  அருந்தமிழர்
    பாரத விடுத லைக்கவிஞர்
சாரதி என்றால் மிகையாகா;
    தமிழ்த்தேர் ஓட்டும் பெருந்தமிழர்

இளமை வயதே கவித்தமிழை
    இனிமை என்று கருதியவர்
இளமை யில்பா ரதியானார்
    இவர்பார் அதிசின் னப்பயலோ?          

பாப்பா பாட்டு பாடினார்
    பாழும் அடிமை சாடினார்
பாரத விடுதலை நாடினார்
    பெண்ணின் விடுதலை தேடினார்           

விடுதலை அவர்தம் உயிர்மூச்சாம்
    உயர்ந்த தமிழே அவர்பேச்சாம்
கொடுந்தளை அடிமைத் தனமெல்லாம்
    கும்பிட்டு விட்டோ டிப்போச்சே                

கண்ணன் பாட்டும் குயில்பாட்டும்
    கவித்தமிழ்ச் சோலையின் எழில்பாட்டாம்
பண்ணெனும் இசைப்பா வல்லவராம்
    பறவைகள் பாசமும் சொன்னவராம்

சிந்துப் பாவில் புதியதமிழ்
    சாதனை படைத்த புதியதமிழ்
அந்தம் இல்லா அழகுதமிழ்
    அவரால் பிறந்த அழகுதமிழ்             

பாரத வளர்ச்சி பலதொழில்கள்
    வளம்பெற வேண்டுவ(து) அவர்கனவு
பாரதி யாரைப் போற்றுவோம்
    பண்ணரும் செயல்களும் ஆற்றுவோம்

நுதற்காதலம்

உன்னால் எப்படி முடிகிறது?
உன்மனம் உன்னிடம்
ஒன்றும் உரைக்கவில்லையா?
என்மனம் பலவீனம்...
ஆட்பட்டபின்
அதிலிருந்து மீளமுடிவதில்லை
ஏற்கனவே எண்ணற்றவை
எண்ணிச் சொல்ல முடியவில்லை
இன்னும் ஏன் ஏமாற்றம்?
ஏன் இந்த மாற்றம்?
புரியாமல் பிதற்றுகிறேன் - விதி
அறியாமல் கதறுகிறேன்.
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தெளிவு

இழந்தவற்றின் ஏக்கங்களுக்கும்
இன்னல்களின் தாக்கங்களுக்கும்
இனி இங்கே இடமில்லை.
ஆற்றும் முறையில்
ஆற்றத்தக்கவற்றின்
ஆக்கங்களுக்கே
அகமும் அறிவும்
ஆழட்டும் ஆராயட்டும்.

          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொட்டு (ஹைக்கூ)

தொட்டிப் பெண்ணிற்கு
எத்தனை நெற்றிகள்
...?
தொட்டியில் ஒட்டிய பொட்டுகள்...

       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 23, 2014

Phani sir (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எல்லா நலமும் பெற்றிணை இல்லாத்
தலைவன் எனவே திகழ்பரம் பொருளே!
பலநூ றாண்டுகள் பாரினில் பெருமை

பொங்கிட வாழ்குவை! பொடியன் வாழ்த்துவன்!
தங்களின் மொழியெமைத் தலைநிமி ரச்செயும்
!
இந்நாள் போல எந்நாளும்

செந்நாள் ஆக செழிக்கட் டும்மே!

             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்