Mar 23, 2014

நான் ஆசிரியரானால்...

நாளைய நாட்டின் தூண்களுக்கு
  நன்னெறி ஒழுக்கம் நற்பண்பு
நாளும் கற்றுக் கொடுப்பதிலே
  நானுளம் மகிழ்வேன் ஆசிரியர்         1

ஆசெனும் குற்றம் அறியாமை
  அனைத்தையும் நீக்கித் தன்னைத்தான்
அறிந்திடச் சிறந்த வழிகாட்டி
  அதனை நானும் நன்குணர்ந்தே 2


புத்தகப் பாடம் மட்டுமின்றி
  புலமை வளரும் அளவிற்கு
வித்தகம் விதைத்துப் பண்படுத்தி
  வியக்கும் உலகம் எனச்செய்வேன்     3

பொறுமை யுடனே மாணவர்க்குப்
  புரியும் வண்ணம் எடுத்துரைப்பேன்
திறமை தன்னை வெளிக்கொணர்ந்து
  சிந்தை வளம்பெற வழிசெய்வேன்      4


பிறரை மதித்து நலம்போற்றும்
  பண்பா டுடைமை புலப்படுத்தி 
அறவழி நின்று வாழ்வினிலே
  அகிலம் போற்ற வழிசெய்வேன் 5


உலகில் உன்னதப் பணியிதுவே
  உயர்சமு தாயம் நிலைபெறவே
கலைகள் யாவும் வளம்பெறவே
  கருவாய் இருப்ப திப்பணியே          6


கல்விச் செல்வம் கனிச்செல்வம்
  கல்வி ஒன்றே உலகத்தை
நல்வழிப் படுத்தும் என்பதனை
  நாளும் மகிழ்வுடன் எடுத்துரைப்பேன்   7
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment