Mar 24, 2014

நான்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னைப் பற்றி யானென்ன சொல்ல?
எனக்கிடம் தமிழுக்குள் புன்னுனி போதும்
எனக்குள் தமிழுக் கிடமிஞ்சும் இமயம்
பள்ளிப் பருவ நாட்களில் தமிழே
துள்ளிவிளை யாடத் துணைவந்த நண்பன்
அவனுள் விளைந்த கலிப்பாத் துள்ளலால்
கவனம் முழுதும் கவர்ந்தவ னானான்
எனக்கென் னிறைவன் புரிய வைத்தான்
'மனத்திற் கினிமை தனித்தமிழ் சேர்க்கும்'
கல்லூரி சென்றதும் பிரிவு கொண்டேன்
அல்லல் கொண்டேன் அருந்தமிழ் நண்பன்
பிரிந்துவிட் டானே என்றே அரற்றினேன்
உரிமை எனக்கிலை உறவை அறுத்ததே
இளந்தொழில் நுட்ப வியலில் மூழ்கினேன்
இவ்வாண் டில்லது இறுதி பெற்றது
கலையும் தொழிலும் கந்தன் அருளினான்
கலக்கம் தவிர்த்துக் களிப்பு கொண்டேன்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment