Apr 9, 2014

தன்னிலை விளக்கம் அல்லது தமிழ் முழக்கம்

தரவு கொச்சகக் கலிப்பா

என்னுள்ளத் தோட்டமெலாம் எழினிறைந்த போதலர்ந்தும்
என்னுள்ளத் தோட்டமெலாம் எழினிறைந்தப் போதளர்ந்தும்
கண்ணெறிந்து காதலித லைவதலை வியினினைவும்
கண்ணெரிந்து காதளித லைவலித லைவலியும்
எண்ணத்தே எந்நாளும் எண்ணிச்சொல் லியலாத
எண்ணந்தோ யுந்தாளும் என்னத்தொல் லியலாத்த
மிழ்ச்செழியாள் மகிழ்ச்சியினால் மிடற்றெல்லை வரையுண்டு
மிழ்செழியா மெழுச்சியது போதுமென்ன லைவாய!
                                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய:
என் உள்ளத் தோட்டம் எல்லாம் எழில் நிறைந்த போது(பூ) அலர்ந்தும், என் உள்ளத்து ஓட்டம் எல்லாம் எழில் நிறைந்து அப்போ(து) தளர்ந்தும், கண் எறிந்து(வீசி) காதலி(க்கும்) தலைவ(னுக்குத்) தலைவியின் நினைவும், கண் எரிந்து, காது அளி(க்கும்) தலை(யாய) வலி(யும்), தலைவலியும், எண்ணத்தே எந்நாளும் எண்ணிச் சொல்(ல) இயலாத எண்ணம் தோயும் தாளும் (பாதங்களும்) என்னத் தொல்(எவ்வளவு பழமை எனக் கூற) இயலாத் தமிழ்ச் செழியாள் மகிழ்ச்சியினால் மிடற்று எல்லை (மிடறு - கழுத்து, தொண்டை, குரல்வளை) வரை உண்டு உமிழ்(கின்ற) செழியாம் எழுச்சியது போதும் என் அலைவாய! (அலைவாய் என்னும் திருச்செந்தூர் முருகனே!

காதலிதலைவ, காதளிதலைவலி - வினைத்தொகை
தொல்லியலாத் தமிழ் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அலர்ந்தும் தளர்ந்தும் - முரண்

No comments:

Post a Comment