Dec 17, 2014

தீவிரவாதம் ஒழிக

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னதான் வேண்டுமென ஏதுமொரு தெளிவுமின்றிச்
சொன்னதனைச் செய்கின்ற சுயபுத்தி யில்லாத
பேரறிவுக் கொழுந்துகளே! பெருந்தீமை புரிந்திட்டீர்!
ஆறறிவு உமக்கிருந்தால் ஆரவரென் றெண்ணியுளம்
பேதமிலா தொற்றுமையைப் பேணியுளங் குளிர்ந்திருப்பீர்!
பேதைகளாய் வாழ்ந்தோடி அரக்ககுணப் போதையிலே
மேதைகளாய் விளங்குயிரைப் போக்கிவிட்டீர்! போக்கிடமும்
இல்லாத புறம்போக்குப் போக்கிரிகாள் செத்தொழிவீர்
பொல்லாத உன்குழுமம் நில்லாமல் போகட்டும்
ஆருயிரை வதைப்பதற்கு ஆருரிமை தந்ததுமக்
கீதெனுளம் ஈதென்னூர் இஃதென்றன் நாடுலகம்
யாதொன்றும் அறியீரோ? ஏன்பிறப்பு பெற்றீர்கள்?
போகுவழி தவறென்று போதிக்க வில்லையுமைப்
பெற்றெடுத்துப் பேதைகளாய் ஆனாரே அவர்க்கென்ன
பெற்றுக்கொ டுத்தீஇர் பெருந்தீமை வடிவெய்தி!
புற்றுக்கி ரையாவீர் நற்சாவே வாராது!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்