Jan 12, 2015

வாண்டும் ஆண்டும் - வாழ்த்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இவ்வாண்டை அவ்வாண்டி  ரண்டாண் டின்முன் 
      இனியதொரு சமுகவலைத் தளத்தில் கண்டே
இவ்வாறு ழகரத்தைத் தவறாய்க் கொண்டு 
      இன்தமிழுக் கிழுக்குண்டாக் காதிர் என்று
செவ்வாயால் அறிவுறுத்தி  உண்மை அறிந்து  
      செந்தமிழால் பாராட்டிச் சென்றார் பின்னே
பவ்வம்போல் விரிதளத்தில் பார்த்து மீண்டும் 
      பழையகதை நினைவுறுத்தி மகிழ்ந்து நின்றோம்.

செவ்வனசெய் இன்தமிழாள்!  தமிழைப் பற்றிச்
      சிந்திக்கும் நெஞ்சத்தாள்!  மரபு மீது
திவ்வியம்கொள்  திருத்தகையாள்! பண்ணி சைக்கும்
      திறமுள்ள இன்னாவாள்! இன்னா இரிக்கும்
இவ்வானும் இம்மண்ணும் எல்லை இல்லா 
      எல்லாவற் றிலும்உயர்ந்த இறைவன் அருளால் 
இவ்வாண்டு யான்பெற்ற அன்புத் தோழி!
      எந்நாளும் பேரின்பம் பெற்று வாழி!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

2 comments:

Post a Comment