Jul 12, 2015

பாலச்சந்தர் நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
மடஞாயி றெதிர்காண வியலாதே ஓடிடூஉம்
தடந்தோளா னிளவெழிலார் பிறைநுதற்சந் திரன்தீரன்
தண்மதுரைத் தமிழ்கொஞ்சும் தனிப்பேச்சுக் குரித்தான
கண்கருத்து கொளநின்று பெருவெற்றி பெறுதலைவன்
மன்மதன வன்மனதில் கரவொன்றும் கலவாத
இன்னிலையான் இனிமையுற வெந்நாளும் வாழ்ந்திடவே

(தாழிசை)
மீட்டும் இசைவீணை கலைவாணி கைநிகர்தாம்
காட்டும் திறமெவர்க்கும் இலையிங்கு யெனவோதி
தீட்டும் வரைமுறைகள் திறமையுடன் எதிர்நோக்கி
ஈட்டும் பெரும்பொருளான் இயல்பெற்றி யெனவியம்பு

சேர்த்துப் புகழ்வென்றி தனங்கல்வி துணிவிளமை
ஆர்த்த நுகர்ச்சியொடு நலம்பயக்கும் நன்மக்கள்
கூர்த்தபே ரறிவுடைமை குறைவில்பொன் னாற்றல்சால்
தீர்க்காயுள் நல்லூழ்நோ யிலாமைநெல் பெருமைசொல்

ஏற்றமே நினக்கென்றும் எழுச்சிகொளும் எப்படியும்
காற்றூ செனவிளங்கும் கலையாவுங் கைசேரும்
ஆற்றல் அறைவனங்ங னந்தானே யறிந்திடுவாய்!
கூற்றம் மருண்டெதிரில் வாராதே யெந்நாளும்

(அராகம்)
பொழினுதற் பொழிகரு முகிலெனக் கருணைய னரவர சனின்மக னவன்
பழிக்குநர் பயந்திடத் திடமனம் படைத்தவன் பருவம களிர்விருப் பவன்
விழிப்புணர் வுடையவன் ஒருதனி யரியென விளங்கிடும் தனதனன் அவன்
எழுச்சியில் இணையிலை எதிர்வரு பெருதுயர் எளிதினில் முறியடி தவன்

(அம்போதரங்கம்)
(நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம்)
ஆழிநின் றோங்கிடுபே ரலையென்று பொங்கவாஅ
வாழிவாழ் வாங்கென்று நிலைத்துநிறை வேறிடவே;
ஆழிசேர் கையானின் அருளென்றும் நின்றனக்கு
ஊழியுள வரைக்குமிசை வளர்ந்தோங்கி வாழ்ந்திடவே

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
இனிமையுற வெந்நாளும் இளஞ்சந்தி ரா!வாழ்க!
கனியுள்ளக் கன்றெனவு தயசந்தி ரா!வாழ்க!
தனிநிகரில் செயலாற்றுஞ் செயச்சந்தி ரா!வாழ்க!
நனிநவிலும் இனிவாய! நிறைசந்தி ரா!வாழ்க!

(முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
உயரெண்ணம் உன்னுள் காணும்;
உலகந்தான் உன்பின் காணும்;
உன்திறத்துக் கிணையோ? நாணும்;
உன்னுயர்வுக் குறுதுணை யாவும்;
தவமென்ப துன்றன் ஞானம்;
தனிநோக்குன் மனதோ வானம்;
துணிபுக்கென் னுவமை சொல்வேன்?
துணிந்துரைப்பேன் உலகை வெல்வோன்

(இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்)
காற்றைவா னுயர்செல்வான்
கருதைவா னுளம்வெல்வான்
ஆர்த்தெழுங்க டல்போல்வான்
அமைதியுளம் காட்டிடுவான்
சீர்திகழ்ந்தோங் கிடமொழிவான்
சிறுமைசே ரிடமொழிவான்
பாட்டுக்கோர் தலைவனவன்
பாட்டுக்குச் செலமாட்டான்
பண்புக்கோர் உறைவிடந்தான்
நண்புக்கோர் நிறைகுடந்தான்
செய்வனசெய் திருப்பவன்றான்
செய்யாத செயத்துணியான்
எங்கெவ்வா றறிவன்றான்
சிங்கமெனத் தனியுயர்ந்தான்
கருதியன மொழிபவன்றான்
கருத்தாக மொழிபவன்றான்

(தனிச்சொல்)
எனவாங்கு,

(சுரிதகம்)
எண்ணரும் நற்கு ணங்க ளுடையன்
தண்மனம் தீரம் தனிநேர் வென்றி
உடையன் இளம்பிறை நிலவன் மன்மதன்
அடைவன் வாழ்வில் அரும்பே ரிடந்தான்
பிறந்த நாணல் வாழ்த்து
வாழிய பெரும்பே றுற்றுவா ழியவே!
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

Post a Comment