Jul 16, 2015

கனவும் காதலியும்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னினைப் போடியா னுறங்கி னேனோ?
என்கன வில்நீ! என்சொல் வேனியான்?
நனவைப் போலவே இப்போ தும்நீ 
என்னைப் பார்க்க வந்தனை! என்னே!
உன்னுளம் உரைப்பதி யாஅ தென்னின்                                   5
'யான்வேண் டாமே யுனக்கு'என் பதுவே 
நனவில் காண வியலேன் ஆயின்
கனவி லாவது காண வேண்டும்
என்பதற் காகவே வந்தனை போலும்!
உன்னைப் பார்த்துநான் மொழிந்த தென்னெனின்              10
'இந்தச் சிரிப்பு இந்தச் சிரிப்புதான் 
வேண்டும் நீயழ கோவிலை யோவெனும் 
எந்தவே றுபாடும் என்றனுக் கில்லை
ஏனெனில் அங்ஙனம் நயம்படைத் தவனியான்'
இங்ஙனம் யான்மொழிந்  திடவே தென்னெனின்                 15
ஏதோ யான்சொலக் 'கலகல' வெனநீ
சிந்திய முத்துப் பற்சிரிப் பதுவே!
என்னில் வந்தடைந் தாயை யென்றன்
அன்னையும் அண்ணனும் காண வியந்தனர்
அங்கென் மொழிந்தோம்? அங்கென் செய்தோம்?                 20
ஏதும் என்றன் நினைவில் இல்லை
பின்னர் உணவகம் சென்றுண வருந்த 
விருப்பம் தெரிவித் தனைநீ! ஆயின்
அன்னையும் அண்ணனும் நிறைவிலா மனத்தொடு
என்னையும் உன்னையும் வழிய னுப்பச்                                  25
'சரீஇ' யென்றியா னிழுத்துச் சொன்னேன்
செல்லும் வழியில் பாணிப் பூரிக்
கடையொன் றெதிர்ப்பட வங்குச் சென்று
தேநீ ரோகுளம் பியோவொன் றுனக்கு
வாங்கிடக் கடைக்கா ரரிடம் உத்தர                                            30
வொன்று பிறப்பித் தனையே எனினும்
எனக்கும் சேர்த்து வாங்கிட வில்லை
கடையின் அருகில் நிழலில் அமர்ந்தோம்
ஏதோ கூறினேன் யானதற் குன்மொழி
யாதெனின் 'ஆதலி னாற்றான் உன்னுடன்                               35
பேசவும் விழையேன்' அதனைக் கேட்டுநம்
அருகமர்ந் திருந்த பாட்டியென் னென்று
வினவ வதற்கு 'இவனெனைக் காதலிக்
கின்றா னாமென் செய்ய' வென்றனை
'அவனை மணந்து நிம்மதி யோடு                                                 40
வாழ்ந்திருக் கலாமே' என்றாள் பாட்டி
அதனை எதிர்பா ராநீ வெறுப்புற்
றெழுந்து வந்தனை என்னுள் புன்னகை
பூக்க வந்தப் பாட்டியை நன்றி
யுடனியான் நோக்கிப் பின்னர் உன்னொடு                                45
நடந்தே என்னில் புகுந்தோம் அங்கே 
தடபுடல் எனநமை விருந்தெதிர் கொள்ள
யானுண் டிடத்தொடங் கினேனா யின்நீ
கொண்டு வந்த உணவை உண்ணத்
தொடங்கினாய் பின்னர் நேரமா யிற்று;                                      50
கிளம்ப வேண்டும் என்றனை நான்சரி
யெனமொழிந் துனக்கு விடைய ளித்தேன்
ஆயினும் என்னுளம் எனையங்கு நிற்க
இடந்தர வில்லை உன்னைத் தொடர்ந்தேன்
நடந்து செல்கையில் சாலையின் எதிர்ப்புறம்                          55
பூங்கா வைப்பார்த் தங்கே சென்றனை
சென்றே பூக்களைக் கொஞ்சினை பின்னர்
யோகா சனங்கள் செய்திடத் தொடங்கினை
இத்துணை நேரம் செடிமறை வில்நின்
றுன்னைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன்                       60
நீயெனைக் கண்டு கொள்ளக்கூ டாதென
உள்ளம் பதைத்தேன் ஆயினும் நீயெனைக்
கண்டு கொண்டனை அப்போது தானுனைக்
காண்கின் றேனென் பதுபோல் முகத்துதி 
சொன்னேன் அப்போது கனவு கலைந்து                                   65
விழித்தெழுந் தேனே! விழித்தெழும் தேனே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment