Jul 31, 2015

கைக்கிளை யேதங் கைக்கிலை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)
நாவளன்தன் நெஞ்சதனில் நேர்ந்திடூஉம் நற்றலைவி!
ஆவலன்தன் மொழிக்கேங்கி யனுதினமும் காத்திருக்கும்
காவலன்தன் காவளம்சேர் காலமுந்தான் வந்ததெனத்
தாவலனென் றுள்ளத்தைத் தாங்கியெழு தும்மொழிகேள்!

புளிபோட்டு விளக்கியவள் மொழிகேட்டு நகைத்தவன்தன்
களிப்புக்கா தாரமும்நீ கண்ணுள்ளே நிற்கின்றாய்!
ஒளித்தலறி யாதிவன்தன் உணர்வுகளைச் சிறுகணமும்
அளித்தருள்நின் னெஞ்செனக்க டங்காத வுளமொழிகேள்!

(தாழிசை)
நினைவகற்ற வியலாது நினைதினமும் நெஞ்சுறைத்துக்
கனவினிலே காண்கின்ற கள்வனைநீ உணர்வாயோ?

நினைப்பிரிய மனமில்லா நேயத்தன் வன்சிறைதான்
எனைக்கொல்ல ஏங்கவிட்டு விட்டதனை உணர்வாயோ?

கண்சிமிட்டும் நொடிப்பொழுதில் கணக்கறியாச் செயல்புரியும்
கண்களைநே சிப்பவனின் கனியுள்ளம் உணர்வாயோ?

என்சிறையீ தென்றறிய வியலாதும்; அறிந்தும்பின்
தன்சிறையீ தென்றுணர்ந்தான் அவனைநீ உணர்ந்தாயோ?

தன்செய்த னக்கோர்பொன் செயவிழைந்தான் அப்பொன்னேர்
பொன்னித்தாய் தன்னில்தான் போற்றுவள்நெஞ் சுணர்ந்தாயோ?

பாவினனி யல்பாம்தன் பொருந்துள்ளப் பெருந்தகையாள்
நாவினளைத் தான்தேடி நலமுறுதல் உணர்ந்தாயோ?

(தனிச்சொல்)
ஆம்பின்,

(அராகம்)
அவனுளங் கருமுகி லெனவெளி யடைந்திடுந்
தவனுளம் வருந்தியு ழல்கிற தென்னை?

பொருளெது வவனெதிர் படினுனின் நினைவுகள்
அருள்வது வெனவுளம் மருள்கிற தென்னை?

களவுடை யவனெனக் கருதினை அதுவுளக்
களமெனக் கருதினன் தவறிலை என்னை?

சிவனென வளப்பரும் பருவதன் மகளெனத்
தவமொழிந் தவடனை நெருங்கின னென்னை?

(தனிச்சொல்)
ஆதலின்,

(தாழிசை)
தோழீஇ யேபின்தோள் கொடுத்தென்றன் உளமாற்று;
நாழீஇ யும்பிரிய மனமில்லேன் எனைத்தேற்று;
ஆழீஇ வேறென்னுள் ளந்தானஃ  திரங்காற்று;
கேழீஇல் பெருந்துணையாய் உளக்களத்தே வுனையேற்று;
ஏழீஇ சைமீட்டி எல்லையிலா உளத்தாற்று;
வாழீஇ யெனப்பரந்தென் னுளஞ்சேரு மொழியாற்று;

(தனிச்சொல்)
உரைப்பாய்

(நாற்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
என்செய் கின்றனை? என்சொல் கின்றனை?
புன்செய லோவென்? நன்செய லோவென்?
சிந்திக் கின்றனை? அதுவன் றென்னின்
நிந்திக் கின்றனை? பிழைப்பைப் பாரும்!
எனவுரைக் கின்றனை? அதுவன் றென்னின்
நன்றூஉ நன்றென் அன்புடை நெஞ்ச!
எனவுரைக் கின்றனை? என்சொல் வேனியான்?
அன்பே நண்பே உள்ளம் பகர்வாய்!

(தனிச்சொல்)
இன்னுமியான்

(சுரிதகம்)
தூது யாதெனத் தேர்ந்திடு வேனோ?
யாதென் னுளத்தை உனக்குரைத் திடுமோ?
ஏது யென்னென் றறிகிலேன்
போதே தேனே உள்ளம் பகர்வாய்!
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

2 comments:

Nagendra Bharathi said...

களிப்பைத் தந்த கலிப்பா . நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Post a Comment