Dec 6, 2016

இறையில் அமைதியுற... - இரங்கற்பா

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி இறையில் அமைதியுற வேண்டுகிறோம்.

இரங்கற்பா

வஞ்சி விருத்தம்

அடங்கா மாரி அலைக்கழிக்கத்
தடங்கால் மாரி தலையொழிக்க
நடுகால் மாறிக் காலொழிக்க
வடக்கால் மாறத் தென்னெங்கே?


கலி விருத்தம்

எடுப்பது கையில் இயற்செங் கோலது
கெடுப்பது வஞ்ச வறுமைக் காலது
படுப்பது பகைவர் கைகொள் வாளது
தடுப்பது தடுக்கும் தின்மை தானது


வற்றறு பொற்றடத் துற்றநீர் அற்றென
உற்றவர் பெற்றவர் அற்றென உற்றவர்
பற்றறுந் தற்றவர் கற்றறிந் துற்றவர்
மற்றெவர் கொற்றவர் பொற்றவத் துற்றவர்


நற்றாயெனப் பெற்றாயுயர் நற்றாளிணைப் பொற்றாமரை
பெற்றேவளர் முற்றாவிதை முற்றாவினை கற்றோமினி
மற்றாருளர் பெற்றோமுனை அற்றாயுயிர் பெற்றார்பிறர்
பொற்றேர்வலப் பற்றேவளர் சற்றேவளர் சற்றேவலர்
                                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 20, 2016

திருமண வாழ்த்து - சுப்பிரமணி ஆனந்தி

சந்தக் கலிவிருத்தம்

அன்பின்விழி ஆன்றோர்மொழி ஐயன்வழி ஔகத்(து)
இன்பங்கொள ஈதல்வசி என்னும்படி ஏற்றம்
உன்னுங்கவி ஊக்கங்கொள ஒன்றித்தரும் ஓசை
தன்னில்சகி மன்னன்வழி நண்ணுங்கனி ஞான்று

அப்பிருமணி அகிலத்தினில் அரியனபெரும் யாவும்

ஒப்பிலிமணி என்றேநிலும் ஒண்ணித்தில நகையாள்
செப்பிடுமணி ஆனந்தியின் எண்ணங்கொளும் உள்ளம்
சுப்பிரமணி உறுகென்றுயர் உள்ளத்தொடு வாழ்த்தும்
                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 26, 2016

திருமண விழா அழைப்பு ஓலை - சுப்பிரமணி ஆனந்தி

(நேரிசை வெண்பா)
வாழிய வையகம் வாழிய செந்தமிழ்
வாழிய ஞாயிறு மாமதி - வாழிய
கோள்களும் மீன்களும் கொள்கை உலவிட
ஆள்தவர் ஆள்க அறம்                                                              1


(நேரிசை ஆசிரியப்பா)
அழகன் முருகன் அருள்மழை பொழிக
தழைக்கச் செய்குல சாமிகள் வாழ்க
பருவத மாமலை தருவளம் திகழும்
பருவத இராசன் குலத்தே நிகழும்
திருமண விழாவிது தேர்நாள்
வருவது பின்னே அறிவீர் தாமே.                                              2


(சந்தக் கலிவிருத்தம்)
திருவள்ளுவ ருள(ம்)வாழ்ந்திடு திகழீரிரு வைந்நூற்(று)
ஒருநாற்பது பின்னேழென ஒளிராண்டினி லொன்றி
வருதுன்முகி எனுவெம்முக வைகாசியி னான்கைந்(து)
இருமூன்றென வறிவன்புத னியனாளது திருநாள்                  3


புலர்திரளொளி புனர்வசுவது புரிவினையென நேர்நில்
நிலவதுவளர் பிறைநான்கென நிகழ்நாளது சேர்நில்
இலங்காங்கில வாண்டுரையென ஈராயிரத் தீரெட்(டு)
உலகோருளம் கொளும்நாள்எது? ஜூன்திங்களில் எட்டு        4


அணிசேர்கதிர் அகிலந்தனை அடியொற்றிடுங் காலை
மணிநெற்கதிர் வருதலையென மணந்திடுமரு வேளை
மணியாறதை அடித்தேவரு மவ்வொன்றரை மிதுனம்
பணியேறிடுங் கனிநாளதே அருவேளைய தென்று                 5


(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஞ்சி லொன்று தீஅவ் வூராம்
நெஞ்சி லொன்றிட நேஎர் வீடாம்
திருவண் ணாமலை மாவட் டந்தனில்
திருவி ளங்கிடு தென்மகா தேவ
மங்கலந் த
ன்னில் வாழ்ந்தி ருந்த
நாட்டு வைத்தியர் சோதிட ரென்று
நாட்டு புகழ்நல் வேந்தர் ஆகிய
குமார சாமி சின்னம்மாள் மகனார்
பள்ளி கொண்டாப் பட்டில் வாழும்
நல்ல சோதிடர் நாட்டு வைத்தியர்
நல்லிசை யுல(கு)அறி பம்பை யோடு
பொற்சி லம்பு நடனத் தோடு
தொல்தெருக் கூத்தென்று பலகலை அறிந்த
வித்தகர் சேகர் பூமா தேவி 
இவர்த மக்கமை இளைய மகனாம் 
சுப்பிர மணியெனும் திருவளர் செல்வன் 
மன்னும் தமிழகழ் மனத்தே ரினனே!                                       6

(குறளடி வஞ்சிப்பா)
விழிமாநகர் விழுப்புரம்தனில்
எழிலாய்நிலும் ஓரூராம்
மேல்மலையனூர் தனில்வாழும்
ஆல்போல்குலந் தழைத்திடவே
அருள்கொடையங் காளம்மன்
திருக்கோயிலின் முன்னாள்அறங்
காவலர்எனப் புகழ்கொண்ட
சுப்பிரமணி பூசாரி
அவர்தம்துணை ஆண்டாள்
அம்மாள்இவர் தம்புதல்வர்
அரும்வாணிகர் கைதேர்ந்த
சமையற்கலை யாளரவர்
பம்பைதனை இசைக்கின்ற
பல்கலையறி பூசாரி
பாலுவென்பார் அவர்துணைவி
புஷ்பாஇவர் தம்முடைய
இளையமக ளாம்நகையாள்
ஆனந்தி
என்னும் திருவளர் செல்வி
மன்னும் மதிவத னத்தாள் தானே!                                         7


(நேரிசை ஆசிரியப்பா)
அவரை
இருவீட் டினரும் ஒருங்கே கூடிச்
சுற்றமும் நட்பும் சூழ நின்று
மேல்மலை யனூரில் சிவனருள் திருமண
மண்டபந் தன்னில் மணவணி காண
முறைமை தழுவி முடிவு செய்தனர்
அவ்வழித் தாங்கள் தங்கள் சுற்றமும்
செவ்வழி நட்பும் சேர்ந்திட வந்து
மணவணி காணும் மக்களைக் கல்வி
அறிவு வீரம் ஆற்றல் வெற்றி
அழகு நுகர்ச்சி ஆயுள் நல்லூழ்
இளமைநோ யின்மை நன்மக்கள் நெல்பொன்
பெருமை புகழெனும் பேறுகள் பதினாறு
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கென
உற்ற மகிழ்வின் உளம்வாழ்த் துகவே!                                  8
                      -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 13, 2016

காவடிச் சிந்து

அன்புச்செல் லத்தாயே போற்றி! - அம்மா
ஆண்டவன் என்றேதான் தோற்றிச் - சொல்லா
அரும்பாடெனுந் துயர்யாவையும்
துரும்பாக்கிடும் பெருந்தாயவள்
அன்பே - அவள் - பண்பே


இன்பத்தே எந்நாளும் நானும் - நலம்
ஈவதே உன்பால்நான் காணும் - பெரும்
ஈடிணையில் பேறதனில்
பாடிடுவன் ஆடிடுவன்
இணங்கி - உனை - வணங்கி

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 12, 2016

முத்தந்தரச் சொற்றந்தனை

சந்தக் கலிவிருத்தம்

முற்றந்தர முற்றந்தர முத்தந்தர முத்தே

சொற்றந்தனை சட்டென்றெனைத் தொக்குங்கலை யுற்றே
மற்றொன்றினை பற்றென்றவை வற்றென்றனை எற்றே
சுற்றங்கலை கற்றங்கலை தொற்றங்குல கற்றே
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காவடிச் சிந்து/ கா வடிசிந்து

வந்தவினை நொந்துமிக ஓடும் - தமிழ்
வாழ்ந்திருக்கும் இந்தவுல கோடும் - கடல்
வந்திழுத்துப் போயிடினும் செந்தமிழச் சங்கதனை
வழங்கும் அது முழங்கும்.


எந்தமிழென்(று) ஏத்துகிற வரதர் - பணி
ஏற்றவரும் பைந்தமிழ மரபர் - அவர்
ஏற்றிவைக்கும் தீபவொளி போற்றிவைக்கும் தீந்தமிழை
எங்கும் வளம் பொங்கும்!
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 29, 2016

வளையற்சிந்து - தூது

தென்றலினை நெஞ்சுதனைச்
  செந்தமிழை முகிலை - மான்
  சேர்பணத்தைக் குயிலைக் - கிளி
  செம்மலரைத் துகிலைத் - தூது
 சேர்த்திடவே ஏவிடுவார்
 செவ்வேலோன்  மயிலை


அன்னம்புகை யிலைவிறலி
 அரவஞ்சேர் வண்டு - காக்கை
 அருநாரை நண்டு - நெல்
 அரும்பலவாம் கொண்டு - பேர்
 அழகுமாலை கொண்டுவாராய்
 அகங்குளிரக் கண்டு

         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 26, 2016

இலாவணிச் சிந்து


எங்குலந்த ழைக்கவந்த தங்கமக ளென்றுனையான்
என்னுளத்தே வைத்திடுவேன் ஏத்தி ஏத்தி
தங்குளத்துத் துள்ளலிலே பங்குகொள வந்தவளே
தங்கமகப் பாடலினைச் சாத்திச் சாத்தி
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 15, 2016

அதுகவிதை?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
      மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
கலைநுட்பம் கற்றுணராக் கருத்துக் காலக்
      கவிதைசெயப் புறப்பட்டுக் கண்டெ டுத்த
அலைபட்ட நெஞ்சன்ன அழகே இல்லா
       அதுகவிதை புதுக்கவிதை கவிதை வேறென்?
 கலைக்கொலையைக் கண்டுள்ளம் கவன்றே சொல்வன்
       கவியழகைக் காணாத கவியும் ஏனோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்பே தமர்க்காம்

கட்டளைக் கலித்துறை

என்பே தமர்க்காம் எனவுளும் உள்ளம் இயன்றவர்தம்
அன்பே உலகின் அறவழி யென்றே அறிந்திடுவாய்
அன்பே சிவமென்(று) அறைந்திடு வாரே அவனியில்பின்
என்பே தமுந்தான் எதிர்நிலா(து) ஓடி இரிந்திடுமே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

ஒயிற்கும்மி

பாடிடு வாய்மனம் நாடிடு வாய் - அந்தப்
பாவகை யாவையும் தேடிடு வாய்
    படியாமையும் ஒருநாளினில்
    வழியாகிடும் படியாகிடும்
        பண்பினைத் தோண்டவி லக்கண மாம்!

      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கும்மிச் சிந்து

கண்டதைக் கேட்டதைப் பாடிடு வேன்- உளம்
கொண்டதை உண்டதைப் பாடிடு வேன்.
பண்டையோர் வாழ்க்கையைப் பாடிடு வேன் - மலர்
பைந்தமிழ்ச் சோலையைப் பாடிடு வேன்!

                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 4, 2016

நொண்டிச்சிந்து

சிந்துவைச் சிந்தையி லே - கொளத்
தித்திக்கும் எண்ணங்கள் சித்திக்கு மே
தந்தமிழ்த் தந்தத்த மிழ் - செறி
சந்தத்தைச் சிந்திடும் அந்தத்த மிழ்.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஆனந்தக் களிப்பு

சிந்தனை செய்கைசொல் ஒன்றாய் - நின்று
சீரிய வாழ்வினைக் கொண்டுசெல் நன்றாய்!
தந்தையும் தாயும்காண்  தெய்வம் - அந்தத்
தாரணி என்பாரைப் போற்றியே உய்வம்                           1

கந்தனை உள்ளத்துக் கொண்டேன் - அந்தக்
காந்தனைச் செந்தமிழ்ச் சொல்லுக்குள் கண்டேன்
எந்துணை என்றும வன்றான் - எதிர் 
ஏதேதும் துன்பமும் தந்திட நின்றால்                                 2
       
                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

Mar 15, 2016

ஒற்றிலா வெண்பா

நேரிசை வெண்பா 

திகடி கடலை தெளிய ருடனா
லகடு முகடு மறியா - வகட
விகட கவித மிதனை யெழுத
வகட கவித மது.
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

பிரித்தறிய:

திகழ் திகழ் தலை தெளி யருள் தன்னால் அகடும் முகடும் அறியா அகட 
இகழ்தக விதம் இதனை எழுத அகழ்தக விதம்  அது.

Mar 6, 2016

ஆசானைப் போற்றுவோம்

நேரிசை வெண்பா 

தருவாய்த் தரும்வாய்; தகுதமிழ்த் தேனீ
தருக்கள் பலவாய்த் தழைக்கக் - கருவாய் 
வரந்தரும்  ஆசான் வரத இராசர் 
மரபினைப் போற்றும் வழி 
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
------------------
தகுந்த தமிழ்த்தேனைத் தரும் மரங்களைப் பலவாறாகத் தழைக்கச் செய்யும் ஆதியாக வரம் தரும் ஆசான் வரதராசனார் மரபினைப் போற்றும் வழியில் மரத்தைப் போலத் தம்வாய்மொழியால் தமிழ் தருவோம்.
ஈ தருக்கள் - வினைத்தொகை.
-----------------
மரத்தைப் போலத் தன் வாய்மொழியால் தமிழைத் தருவார்;
தகுந்த தமிழ்த் தேனீ;
மரங்கள் பலவாய்த் தழைக்கப் பேருதவி புரியும் ஆதியாக வரம் தரும் ஆசான் 
மரபு கவிதையைப் போற்றிப் பாதுகாக்கும் வழியை அமைத்துக் கொடுப்பவர்

Feb 14, 2016

இசைத்தமிழ்க் கவிதை

தரவு கொச்சகக் கலிப்பா

கவிதைநதி கட்டற்றுக் கானகமெல் லாமோடிப்
புவிதனிலே புனிதருக்குள் புன்னகையைச் சேர்த்திடுமே!
செவியதற்கோர் இன்பூற்றுச் செழுமையினால் இசைத்தமிழை
நவில்நாவின் பெருமையினை நான்பாடி நாடுவனே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடலேறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் மா மா காய் மா மா

மடலேறுந் தேவைக்(கு) ஆக்கி 
        மனமேறு மாம டந்தாய்!
இடரூட வென்னை விட்டிங்(கு) 
       "ஈடல்லள் என்னை விடுக"
தடமேற உன்றன் சொற்கள் 
       தடுமாற்றத் தென்றன் கொள்கை 
மடமேற யான ழிந்தேன் 
        வாய்க்காதான் வாய்க்கால் தானே!
                         -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சச்சிதானந்தத்தை மனத்தில் கொள்

முற்று முடுகு, ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கொத்துதித்துக் கொத்துதித்துக் கொத்துபித்தத் தத்தகத்துத்
துத்ததத்துக் கொத்துகுக்கத் துத்துகுத்துச் - சத்தகத்துத்
தத்தகத்துச் சுத்தசித்துத் தத்திதத்துச் சச்சிதத்துப்
புத்தகத்துக் கத்துதொத்திப் பொத்து.
---------------------------
பிரித்தறிய :
கொத்து உதித்துக் கொத்து உதித்துக் கொத்து பித்தத் தத்து அகத்துத் 
துத்து அதத்துக் கொத்து உகுக்கத் துத்து உகுத்துச் சத்து அகத்துத் 
தத்து அகத்துச் சுத்த சித்துத் தத்து இதத்துச் சச்சிதத்துப் 
புத்தகத்துக்கு அத்து தொத்திப் பொத்து.
---------------------------
பொருள் :
கொத்து உதித்துக் கொத்து உதித்து - கொத்துக் கொத்தாக உதித்து

கொத்து பித்தத் தத்து அகத்து - கொத்துகின்ற (தீமையை உண்டாக்கும்) பைத்தியம் நிறைந்த மனத்தே

துத்து அதத்து - வஞ்சம், பொய்மையின்கண் உண்டாக்கும் அழிவை

கொத்து உகுக்க - முழுமையாக அழியுமாறு

துத்து உகுத்து - அத்தீய குணங்களை அழித்து

சத்து அகத்துத் தத்து - மனத்தில் வலிமை நிறையுமாறு வந்து நிறையும்

(அகத்து - மனத்தில்)

சுத்த சித்துத் தத்து இதத்துச் சச்சிதத்து - தூய்மையே வடிவான சச்சிதானந்ததின்

புத்தகத்துக்கு அத்து தொத்திப் பொத்து - புதுமையான உள்ளத்தின் கரையைக் கண்டு, (மனத்தில்) கொள்வாயாக.
---------------------------
இலக்கணக் குறிப்பு :

கொத்து பித்தம், தத்து அகம், தத்து இதம் - வினைத்தொகை

துத்து உகு, அத்து தொத்தி - இரண்டாம் வேற்றுமைத் தொகை

சுத்த - பெயரெச்சம்

புத்தகம் - பண்புத்தொகை

தொத்தி - வினையெச்சம்.
---------------------------

Feb 12, 2016

தமிழ்க்கோள்


தரவு கொச்சகக் கலிப்பா

வஞ்சியவள் உணராத வாஞ்சையினால் உறவாகா
நெஞ்சுதனி யாய்நின்று நேர்வதனைத் தணிக்காது

துஞ்சிடுதல் தனைத்தடுத்துத் தூவாஅம் எக்கோள்கொல்?
செஞ்சொல்லில் தேற்றுதலைச் சேர்தமிழ்க்கோள் கொள்நெஞ்சே!
                                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்னாம் யானிங்கு இருந்தினியே?

வஞ்சி விருத்தம்

நின்றாய் நில்லா நிலையின்று
சென்றா யுள்ளஞ் சீர்குலையக்
கொன்றா யன்பே! கொள்ளாமல்
என்னா மியானிங் கிருந்தினியே?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 21, 2016

போற்றப்பட வேண்டியது - தாய்மை

(தமிழ் வாழ்த்து)
மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி!

(அவையடக்கம், தலைமைக்கு வாழ்த்து)
கற்றபெ ருந்தகை! முற்றுமு ணர்ந்திடு
நற்றவஞ் சேர்கவி! நற்றுணை யாகுக! 
சிற்றறி வுள்ளவன் குற்றங்கள் பொறுத்துயர்
கற்றலு ரந்தருங் கவிஞரே! வாழிய!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)
ஆற்றலுளங் கொள்ளவரும் ஆதரவாய் அங்கிருந்தே
ஏற்றவொரு தெளிவினையும் எண்ணத்தே விதைத்துயிர்த்தே
ஆற்றுதலுக் குரியதொரு ஆற்றலையும் அதுதளர்ந்தால்
ஆற்றுதலும் அந்தவுளம் அடைந்ததுயர் அனைத்தினையும் 
ஊற்றெனமுன் வந்துதவும் உயர்பண்பால் மேலோங்கி
போற்றுதலுக் குரித்தான பொன்மனங்கொள் தாயவளே!

(தாழிசை)
கருசுமந்து கருதாத கருத்தெல்லாம் மிகச்சுமந்து
பெருதுயர்ம றந்துபெறும் பிஞ்சுள்ளக் கொஞ்சலுக்காய்
ஒருபத்துத் திங்கடவத்(து) உழன்றுதரந் தொட்டுமகிழ்ந்(து)
உருவாக்கும் பெரும்பிறவி உயர்தாய்க்கோர் உவமையிலை

பிள்ளைதனக் காகவந்தப் பிறைநிலவைப் புவிக்கிழுத்துத்
தெள்ளமுதந் தனையூட்டித் தென்றலெனச் சீராட்டிக்
கொள்ளமனம் அருங்கதைகள் கூறிநலம் பேணியுல(கு)
உள்ளதென வாழ்கின்ற உயர்தாய்க்கோர் உவமையிலை

தன்னலத்தைக் கருதாத தன்னிகரில் தனிப்பிறவி!
தன்மகவே உலகமெனத் தாங்கியுளம் மிகமகிழ்ந்து
தன்னிறைவு பெறுகின்ற தவவாழ்க்கைக்(கு) அணிகலனாய்த்
தன்னன்பைப் பொழிகின்ற தாய்தனக்கோர் உவமையிலை

(நாற்சீரடி இரண்டு அம்போதரங்கம்)
யாதொரு துயரும் எனைநெருங் காமல்
காதலி னால்பொழி கனியுளங் கொண்டவள்;
ஆதர வாக அணைத்துக் காத்துச்
சாதனைச் சிகரம் தொட்டிடச் செய்பவள் 

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
மழலை மொழிதனில் மற்றவை மறப்பவள்;
மழலை மொழிக்கே மற்றவை துறப்பவள்;
நிழலாய் நிதமும் நின்று காப்பவள்;
நிழலை உண்மை நிலைக்குநேர் விப்பவள்

(முச்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
பொறுமையின் சிகரம் தாய்;
புனிதத்தின் உறைவிடம் தாய்;
திறமையின் பிறப்பிடம் தாய்;
திகழ்குணம் தருபவள் தாய்

(இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
அன்பும் அவள்;
பண்பும் அவள்;
இன்பும் அவள்;
நண்பும் அவள்;
உலகும் அவள்;
உயிரும் அவள்;
கலையும் அவள்;
கவினும் அவள்

(தனிச்சொல்)
ஆதலின்,

(சுரிதகம்)
போற்றத் தகுந்த புனித குணம்;பெறும்
பேற்றில் பெருமைப் பேறது; பொறுமை;
தன்னல மில்லாத் தவமும் அன்புங்கொள்
தாய்மைக் குணத்தைப் போற்றித்
தாய்மன முணர்ந்து தொண்டுசெய் வோமே!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

முகநூல் குழுமம் - "பைந்தமிழ்ச் சோலை" நடத்திய கவியரங்கத்தில் பங்கேற்க எழுதிய பாடல் 

Jan 12, 2016

எம் தங்கச்சியே! எம் தம் கச்சி யேகம்ப!

கலிவிருத்தம் 

எந்தங் கச்சியே கம்ப வமுதச் 
சந்தம் பருகுயர் ஞானத் தமிழ்ச்சம் 
பந்தம் பெறுகுவாய் மகிழ்வா மஃதே

எந்த வொன்றும னதனுக் கிணையோ?
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கைக்கிளை

குறளடி வஞ்சிப்பா

உரையாதுறை பெருங்காதலும்
நிலையாநிலை யிருகால்களும் 
வருத்தந்தனைப் பெருக்கஞ்செயும்
பொருத்தங்கொள வுறக்கந்தொலைத்
தினியாதிய துயராகிடும்
நிலையொடு
வாழ்ந்தி ருக்கும் மனனே
தாழ்ந்தி ராதே தனிச்சுகந் தானே!
     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 11, 2016

கைக்கிளை

தரவு கொச்சகக் கலிப்பா

சொல்லாத காதலும் நில்லாத கால்களும்
சோகத்தைச் சொந்தமெனச் சேர்த்திருக்கும் அந்தமென
எந்நாளும் எண்ணாது இன்னாளும் இன்னாது
இன்னாதி யானாலும் எதிர்ப்பதமாய் வாணாளும்
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 10, 2016

அன்புச் சகோதர! - அப்பு கார்த்திகேயன்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்றன்  நண்ப!  என்றன் சகோதர! 
என்னுளங் கொண்ட இனியசொல் லாள! 
என்னுளம் நிறையும் இன்பத் தாலே
உன்சொல் கேட்க உன்முகம் பார்க்க! 
பன்னெடுங் காலம் பாருனைப் போற்ற 
கன்னல் கொஞ்சும் கவிச்சொல் மொழியொடு
நன்னலம் பொருந்து மனமெய் கொண்டு
அன்புச் சகோதர வாழ்க! வாழ்க!!  

              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

24/11/2009

Jan 7, 2016

இரவி காந்த்

நிலைமண்டில ஆசிரியப்பா

'தலைவன்'  என்றனை!  எண்ணிப்  பார்க்கின் 
தலைவன்  நீதான்!  தனித்திறம்  பெற்ற 
உயர்பண்  பாளா!  உணர்வுக்குள்  உறைபவா!
துயரெலாம்  தொலையும்  துணைவந்  தால்நீ!  
சூரிய  னைக்கவர்  சுந்தர  மணியே! 
காரியம்  கண்ணெனக்  கொண்டவன்  நீயே!
எத்தகு  சூழலும்   இனிமைய  தாக
வித்தகா!  உன்னால்  மாற்றம்  பெறுமே!
உன்றன்  ஒருமொழி  விளைக்கும்  புதுமை 
நன்றென  நானே  உணர்ந்துள்  ளேனதை
உன்நா  உதிர்த்த  ஒவ்வொரு  மொழியும் 
என்னுள்  ஊக்கம்  விளைத்ததும்  உண்மை 
எண்ணங்கள்  இன்னும்  வளரவும்  அவைபல
எண்ணங்கள்  வளர்க்கவும்  வாழ்த்துகின்  றேனே!    

                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

12/03/2009

பிரியா விடை - வெங்கடேசன் தமிழ்வாணன்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தமிழாளும் ஒருவீரன் தனைச்சந் தித்தேன்
   தம்முணர்வுள் கலந்தோடும் தமிழ்வந் தித்தேன்
தமிழ்வாணன் எனவேதான் எண்ணிக் கொண்டேன்
   தமிழூற்றை உன்மொழியில் மகிழ்ந்து கண்டேன்
உமியாக என்னுள்ளம் கொண்ட யாவும்
   உதறிடவே நிந்திப்பாய் என்றன் நண்பா!
கமிப்பேனோ எனைவிட்டு நீங்கு கின்றாய்!
   காண்பதினி எப்போது நவிலு வாயே!

உள்ளத்துள் உயரெண்ணம் பலவா றாக
    உயர்த்திடவே நடைபோடு கிறத வற்றைத்
தெள்ளறிவால் முறைப்படுத்தித் தேர்க; செய்து
     சாதிக்க வாழ்த்துகிறேன் வாணாள் எல்லாம்
வெள்ளம்போல் பேரின்பம் பெற்றி ருக்க
     உளமாற வாழ்த்துகிறேன் எந்நா ளும்மென்
உள்ளத்தில் பச்சைமரத் தாணி போன்றே
     ஊடுருவி உள்ளாயை நீங்கு வேனோ?
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தீபாவளி நல்வாழ்த்துகள்

கலிவிருத்தம்

தின்மைகள் நீக்கிடுந் தீபா வளியில்
புன்மைகள் அகன்று புதுப்பொலி வுறவும்
நன்மைகள் நாளும் நாடி வரவும் 
தென்னவன் இவனின் திருநாள் வாழ்த்துகள்!
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

17/10/2009

இராஜகுரு - பிறந்தநாள் வாழ்த்துகள்

நேரிசை வெண்பா

ஏழெட்டு நாட்டவரும் ஏற்றம்பெற் றாட்சிசெய
ஊழொட்டு வல்வினைகள் ஓடிடுமே - ஏழெட்டில் 
தோன்றியவா! தென்னவனே! நின்னெண்ணஞ்  சொற்செயலால்
சான்றெனவே வாழ்கபல் லாண்டு!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

22/08/2009