உரத்தீசன் என்ன உளனேர்பு கொள்ளும்
வரத்தீச னாவொளிர வாழ்க - இரத்தீச
அங்குமர! ஆற்றல்வேல் அங்கைதனில் தாங்கியுல(கு)
எங்குமறத் தான்றழைக்க என்று.
பிரித்தறிய:
உரத்து ஈசன்
என்ன உளன் ஏர்பு கொள்ளும் வரத்து ஈசனாய் ஒளிர வாழ்க! இரத்தீச அம் குமர! ஆற்றல் வேல்
அம் கைதனில் தாங்கி உலகு எங்கும் அறத்தால் தழைக்க என்று.
சொற்பொருள்:
உரம் – ஊக்கம்,
உரத்து ஈசன் - ஊக்கமுள்ள ஈசன், என்ன – போல, உளன் – உள்ளம், ஏர்பு கொள்ளும் - எழுந்து
பெறும், வரத்து ஈசன் - வரம்பெற்ற ஈசனாக (ஈசுவரப் பட்டம் பெற்றவனாக), ஒளிர வாழ்க - பெருமை,
புகழ் ஒளிர வாழ்க; அம் – அழகு, இரத்தீச அம் குமர - அழகு பொருந்தும் மனம்கொண்ட இரத்தீசு
குமர!, ஆற்றல்வேல் - எதனையும் ஆற்றும் ஆற்றலுடைய வேல், அம் கைதனில் தாங்கி - அழகிய
கைகளில் தாங்கி, உலகு எங்கும் - இவ்வுலகம் எல்லாம், அறத்தால் தழைக்க என்று - அறச்செயல்களால்
தழைக்க வேண்டுமாறு
விளக்கம்:
இவ்வுலகம்
எல்லாம் அறச்செயல்களால் தழைக்க வேண்டுமாறு, எதனையும் ஆற்றும் ஆற்றலுடைய வேலை அழகிய
கைகளில் தாங்கி, ஊக்கமுள்ள ஈசனைப்போலவே உள்ளம் மகிழ்ந்துபெறும் வரத்தால் (ஈசுவரப்பட்டம்
பெற்றவர்களைப் போல்) இரத்தீசு குமரா! பெருமையோடு வாழ்க!
பாவகை: நேரிசை வெண்பா
No comments:
Post a Comment