Sep 17, 2017

பிறந்தநாள் வாழ்த்து - தேஜீஸ்வர்

அ) தரவு கொச்சகக் கலிப்பா

தச்சகரம் தனஞ்செழியன் சந்தியா செய்யுள்தன்
மெச்சுமொரு தன்மையது மேன்மையுள இனமென்றென்
உச்சிதனில் யானுணர்ந்தே உள்ளின்பம் பகர்கின்றேன்
சச்சிதனை உளங்கொண்டு தகவமைந்து வாழ்கவென்று

ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா

ஒளிரா தவனென உலகம் மகிழ
ஒளிதிகழ் விழியால் உலகை ஆளும்
ஒருபரம் பொருள்தன் திருவருள் பொழிய
ஒருதனிச் சிறப்பின் ஓங்கிய தலைவன்
ஒண்டளிர் உள்ளத் தனஞ்செழியன் கொண்ட
ஒண்சொல் சந்தியா உளமகிழ் மகவென
ஒளிநித் திலமென மழலை மொழியான்
ஒளிரீசன் தேஜீஸ்வர் உலகம் போற்ற
ஒருதனிக் குடையின் பெருங்கொற் றவனிலை
ஒருவா தவனென ஓங்குக ஓங்குக!

இ) சில்தாழிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)
அறந்தழைக்க அம்மையே அப்பனே!என்(று) உளம்நிறையப்
பிறந்தழைக்க வந்தவனே! பெருமழலைத் திருச்செல்வ!
திறங்காட்டு திருவடியால் உலகளந்து பேரறிவு
மறங்காட்டு மறக்கவொணா மகிழ்வதனை நீகூட்டு

(தாழிசை)
பச்சைக் கிள்ளை இச்சை கொண்டுன்
மெச்சும் மழலை அச்சுக் கேங்கும்!

மஞ்ஞை யுன்றன் செஞ்சொல் கேட்டுத்
தஞ்சம் புகவே கெஞ்சும் கொஞ்சும்

அண்டங் காக்கை தொண்டை வற்ற
உண்ட சோற்றுக்(கு) அண்டும் மண்டும்

(தனிச்சொல்)
இன்னும்

(தாழிசை)
குருவி நெல்லை அருவிக் கேட்கும்
மருவிப் பாலுக்(கு) உருகும் பூனை

கொக்க ரக்கோ கூவும் சேவல்
மிக்கோர் ஆவல் புக்கப் பேசும்

கூவுங் குயிலும் தாவும் மரையும்
ஆவும் ஆடும் மாவும் பேசும்

(தனிச்சொல்)
அவற்றோடு

(ஆசிரியச் சுரிதகம்)
அன்புளம் ஆர்ந்த அருஞ்சொல் தேர்க!
நின்குலம் வாழ்க! நிமல வெல்க!
பிறந்த நாணல் வாழ்த்துகள் என்று
வாழ்த்து கின்றோம் வாயார
ஏழ்கடல் வெல்லும் எழில்மா மகனே!

No comments:

Post a Comment