Dec 8, 2017

உள்ளத் தூக்கம் (உள்ளத்து ஊக்கம்)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குழப்பங்கள் ஒன்றாக வந்து சேரக்
 குன்றேறி நின்றானும் இறங்கி வந்து
பிழைத்ததெது? பிழையின்றி இருப்ப தேது?
 பின்னின்று பற்றியொரு கடிவா ளந்தான்
வழிநடத்த வேறுவழி யேதும் இன்றி
 வழிவழியே வந்தவர்தம் வழியை யெல்லாம்
பழியென்று தூற்றிடுவார்ப் பாதை கண்டு
 பழகுதமிழ் தான்மறந்து தயங்கி நின்றேன்

படிக்கின்ற படிப்பெல்லாம் பாழாய்ப் போமோ?
 படிப்படியாய்ச் செல்வழியில் சரிவும் உண்டு
நடிப்பறியாப் பிள்ளையினால் நானி லத்தில்
 நகர்கின்ற வாழ்வுக்கும் துன்பம் உண்டு
துடிப்பறிந்து வெல்வழியைத் தேடிச் சென்று
 துயர்களைந்து நல்வழியை நாடி நின்று
வெடித்திடுவோம் உலகுக்கு நன்மை சேர்க்க
 வெற்றிவெற்றி எண்டிசையும் வெற்றி தானே!

                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்