Oct 1, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 2

பக்கத்து அறையில் தங்கி இருந்த முகுந்தன் உள்ளே நுழைந்தான்.
“வாடா, நல்லவனே!”, தனக்குப் பிடித்தவர்களை, உற்சாகத்தோடு இப்படித்தான் அழைப்பான் சின்னதுரை. “என்ன படிச்சிட்டியா?”
முகுந்தன் சொன்னான், “எங்க படிக்கிறது, ஒன்றும் புரிய மாட்டேங்குது, ஆமா, நீ படிச்சிட்டியா?”
“நானா? எங்க படிக்கிறது? ‘சப்ஜக்ட்’ட தூக்கிப் போட்டுட்டுக் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன்ல...”
“ஆமாம், நேத்து அந்த சீனியர் அண்ணன் கேட்டாரே ஒரு கவிதை, அதை எழுதிட்டியா?”
“ஏதோ எழுதியிருக்கேன், படிச்சுப் பாரு”. கவிதையைக் கொடுத்தான் சின்னதுரை.

“காற்றினிலே
பூங்காற்றினிலே
வரும் பாட்டினிலே
.............................
............................”.

முழுவதையும் படித்துவிட்டு, “அடேயப்பா! எப்படிடா இப்படியெல்லாம் எழுதறீங்க? செம ‘ரைமிங்’கா இருக்கு. ரொம்ப ஃபீல் பண்ணி எழுதி இருக்க போல!”, என்றான் முகுந்தன்.
“ஒரு இலக்கணங்கூட இல்லாம எழுதி இருக்கேன். இதப்போய் இவ்வளவு பெரிசா பேசறியே?”, என்றான் சின்னதுரை.
“இந்தக் காலத்துல இப்படி எழுதனாலே போதும்டா”
“முகுந்தா, இந்தக் கதையைக் கேட்டியா?”, என்றான் ஸ்னோவின் முகத்தைத் துடைத்துக் கொண்டே.
“எந்தக் கதை?”, என்றான் முகுந்தன்.
“ஒன்னுமில்ல, துரை எனக்கு ஒரு பேரு வச்சிருக்கிறாராம்...”
“அப்படியா, துரை? என்ன பேரு?”
“வெண்பனி வெற்றியன்!”, என்றான் சின்னதுரை.
“என்னாது...? வெண்பனி வெற்றியனா...?” சிரித்தான் முகுந்தன். ஸ்னோவினும் தான்.
படிப்பு நேர மணி அடித்தது. “ஸ்டடி பெல் அடிச்சிட்டாங்க... நான் கிளம்பறேன்”, கிளம்பினான் முகுந்தன்.
மறுநாளைய சிறுதேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார்கள். ஆங்கிலம் அவ்வளவாய்ப் புரிந்துகொள்ள முடியாத சின்னதுரை, அகராதியைப் புரட்டிப் புரட்டி, ஏதோ புரிந்துகொண்டு படித்தான். படிப்பு நேரம் முடிந்து, இரவு உணவிற்கு மணி அடித்தார்கள்.
“படிச்சிட்டியா துரை?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஏதோ கொஞ்சம் புரிஞ்சது. இன்னும் முடிக்கலைடா”, என்றான் சின்னதுரை.
“சரி, சாப்பிட்டுட்டு வந்த பிறகு, நானே மீதியைச் சொல்லிக் குடுக்கறேன்”, என்றான் ஸ்னோவின்.
மறுநாள், தேர்வை முடிந்தவரை எழுதிவிட்டு, விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்தான் சின்னதுரை. “இன்னும் அரைமணி நேரம் இருக்கு, அப்புறந்தான் போக முடியும். அப்படியே உட்கார்”, என்றார் ஆசிரியர்.
அப்படியே அமர்ந்தான் சின்னதுரை. அவனது எண்ணங்கள் சும்மா இருக்குமா? கவிதைத் தாளம் போட ஆரம்பித்தன. எழுதுவதற்குத் தாள் இல்லையே... என்ன செய்வது? வினாத்தாளின் பின்புறம் காலியாக இருந்தது. அது போதுமே! எழுத ஆரம்பித்தான் மனதைத் தோண்டி...

“தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
...........................................
...........................................”

                                                      (தொடரும்)

No comments:

Post a Comment