Feb 14, 2016

இசைத்தமிழ்க் கவிதை

தரவு கொச்சகக் கலிப்பா

கவிதைநதி கட்டற்றுக் கானகமெல் லாமோடிப்
புவிதனிலே புனிதருக்குள் புன்னகையைச் சேர்த்திடுமே!
செவியதற்கோர் இன்பூற்றுச் செழுமையினால் இசைத்தமிழை
நவில்நாவின் பெருமையினை நான்பாடி நாடுவனே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடலேறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் மா மா காய் மா மா

மடலேறுந் தேவைக்(கு) ஆக்கி 
        மனமேறு மாம டந்தாய்!
இடரூட வென்னை விட்டிங்(கு) 
       "ஈடல்லள் என்னை விடுக"
தடமேற உன்றன் சொற்கள் 
       தடுமாற்றத் தென்றன் கொள்கை 
மடமேற யான ழிந்தேன் 
        வாய்க்காதான் வாய்க்கால் தானே!
                         -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சச்சிதானந்தத்தை மனத்தில் கொள்

முற்று முடுகு, ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கொத்துதித்துக் கொத்துதித்துக் கொத்துபித்தத் தத்தகத்துத்
துத்ததத்துக் கொத்துகுக்கத் துத்துகுத்துச் - சத்தகத்துத்
தத்தகத்துச் சுத்தசித்துத் தத்திதத்துச் சச்சிதத்துப்
புத்தகத்துக் கத்துதொத்திப் பொத்து.
---------------------------
பிரித்தறிய :
கொத்து உதித்துக் கொத்து உதித்துக் கொத்து பித்தத் தத்து அகத்துத் 
துத்து அதத்துக் கொத்து உகுக்கத் துத்து உகுத்துச் சத்து அகத்துத் 
தத்து அகத்துச் சுத்த சித்துத் தத்து இதத்துச் சச்சிதத்துப் 
புத்தகத்துக்கு அத்து தொத்திப் பொத்து.
---------------------------
பொருள் :
கொத்து உதித்துக் கொத்து உதித்து - கொத்துக் கொத்தாக உதித்து

கொத்து பித்தத் தத்து அகத்து - கொத்துகின்ற (தீமையை உண்டாக்கும்) பைத்தியம் நிறைந்த மனத்தே

துத்து அதத்து - வஞ்சம், பொய்மையின்கண் உண்டாக்கும் அழிவை

கொத்து உகுக்க - முழுமையாக அழியுமாறு

துத்து உகுத்து - அத்தீய குணங்களை அழித்து

சத்து அகத்துத் தத்து - மனத்தில் வலிமை நிறையுமாறு வந்து நிறையும்

(அகத்து - மனத்தில்)

சுத்த சித்துத் தத்து இதத்துச் சச்சிதத்து - தூய்மையே வடிவான சச்சிதானந்ததின்

புத்தகத்துக்கு அத்து தொத்திப் பொத்து - புதுமையான உள்ளத்தின் கரையைக் கண்டு, (மனத்தில்) கொள்வாயாக.
---------------------------
இலக்கணக் குறிப்பு :

கொத்து பித்தம், தத்து அகம், தத்து இதம் - வினைத்தொகை

துத்து உகு, அத்து தொத்தி - இரண்டாம் வேற்றுமைத் தொகை

சுத்த - பெயரெச்சம்

புத்தகம் - பண்புத்தொகை

தொத்தி - வினையெச்சம்.
---------------------------

Feb 12, 2016

தமிழ்க்கோள்


தரவு கொச்சகக் கலிப்பா

வஞ்சியவள் உணராத வாஞ்சையினால் உறவாகா
நெஞ்சுதனி யாய்நின்று நேர்வதனைத் தணிக்காது

துஞ்சிடுதல் தனைத்தடுத்துத் தூவாஅம் எக்கோள்கொல்?
செஞ்சொல்லில் தேற்றுதலைச் சேர்தமிழ்க்கோள் கொள்நெஞ்சே!
                                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்னாம் யானிங்கு இருந்தினியே?

வஞ்சி விருத்தம்

நின்றாய் நில்லா நிலையின்று
சென்றா யுள்ளஞ் சீர்குலையக்
கொன்றா யன்பே! கொள்ளாமல்
என்னா மியானிங் கிருந்தினியே?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்