May 31, 2023

வெங்கடேசன் மாமாவின் பணி ஓய்வுப் பாராட்டு விழாவில் வாசித்த கவிதை

இன்னிசை மொழிபேசி
என்றென்றும் வாழ்த்தும்
மாணிக்க மாமணியே!
எங்கள் மாமா மணியே

மின்னியல் வளத்துறையில்
மின்னும் பணிசெய்த
மாணிக்க மாமணியே!

தொன்னூல் கலைகள்
தொட்டுத் தெளிந்து
தெருக்கூத்தும் சோதிடமும்
மின்னச் செய்கின்ற
மாணிக்க மாமணியே!

பன்னூ றாண்டுகள்
வையம் வாழ்த்த வாழியவே!
வேங்கடத்து ஈசனாய்
எங்கள் வெங்கடேசனார்
வளம்பல பெற்று
வாழிய வாழியவே!

May 2, 2023

விழியால் தென்றலை முத்தமிட்டவள்

கட்டுக் கடங்காத கன்னியே என்னுள்ளம்
மெட்டுக் கடங்காது வேவதேன் - பட்டுத்
தெறித்தநின் சேல்விழி தென்றற்கு முத்துப்
பொறித்ததோ மையிட்ட போது.

யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காத கன்னியே!

நீ உன்னுடைய மீன்போன்ற வடிவுடைய கண்களுக்கு மை தீட்டிக் கொண்டிருந்த போது, வந்து மோதிய தென்றலை உன் கண்கள் முத்தமிட்டனவோ?

என் உள்ளம் உன்னை நினைத்து இசைப் பாட்டின் மெட்டுக்கும் மயங்காது வெந்து தவிப்பதேன்?