Dec 31, 2015

வீரன்

வீரன் என்பவன் யாரடா
வினைகள் தீர்ப்பவன் பாரடா
பாரம் என்றும் எனக்கில்லை
பயமோ ஓடும் பார்த்தெல்லை
 
கடலும் மலையும் மடுவாகும்
கடந்திடும் இரும்பு மனமாகும்
கடவுள் அவனைப் படைத்திடவும்
கையில் ஆயுதம் எடுத்திடுவேன்
 
கொண்ட செயலை ஓரெண்ணம்
கொண்டே முடிப்பேன் காரென்னும்
அண்டும் வாழ்க்கை எனக்கில்லை
அகிலம் எனக்கு மேலில்லை.
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Dec 25, 2015

மாரி கழிந்தது

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

மாரி கழிந்தது மாவிமஞ் சூழ்ந்தது
நீரில் உறங்கும் நெடுமாலை நாம்பாடித்
தேரின் மனத்தெண்ணம் தெள்ளியசொல் செந்நாவில்
சேரின் அதன்பொருட்டே செய்செயலும் மாறாமல்
போரில் புனிதமிகு பொன்னுலகை நாம்படைத்(து)
ஓரில் ஒருகுடை ஓருளமென்(று) ஓர்ந்துயர்ந்து
சீரிளமைச் செந்தமிழ்ப்பா தித்திக்கத் தாலாட்டும்
மாரி நனைந்தே மகிழ்வோடு வாழ்குவமே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Dec 19, 2015

கைக்கிளை

தரவு கொச்சகக் கலிப்பா

கலிப்பாதன் பெருந்துள்ளல் கனிந்தமனத் தடங்காத
வலிப்பாவிங் கெழுந்தோடு மழைநீராய் அலைந்தேகிக்
கலிதானுட் புகுந்தவனுங் கலங்காநின் றேநலிந்தான்
நலிந்தானுன் நினைவாலே நலிந்தானே நலிந்தானே
அவனைக்
கள்ளுங் காலம் கொள்ளுங் காலம்
தெள்ளுத மிழ்ச்சுவை போலே
அள்ளுங் காலமெக் காலம் அம்மே?
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Dec 13, 2015

மாமழைத் துயரம்

நேரிசை வெண்பா

(முன்முடுகு)

அக்கத்துப் பக்கத்துச் சிக்கித்தத் தித்தத்தித்
திக்கித்தச் சத்துத்திக் குத்திக்குத் - துக்கித்தித்
தண்ணீர் தனில்யாவும் தானிழந்து செல்கின்றார்
கண்ணீ ரொடுங்கொடுமை காண்
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
அக்கத்துப் பக்கத்துச் சிக்கித் தத்தித் தத்தித் திக்கித்து அச்சத்துத் திக்குத் திக்குத் துக்கித்து இத் தண்ணீர்தனில் யாவும் தான் இழந்து செல்கின்றார் கண்ணீரொடும் கொடுமை காண்.

அன்னை

கலிவிருத்தம்

அரும்பு தொட்டுளம் ஆவியின் மேலதாய்ப்
பெரும்பொ றுப்பொடு பேணிவ ளர்த்திடுங்
கரும்பு கற்பகக் காவென நிற்பவள்
அருந்த வத்தவள் ஆருயிர் அன்னையே! 
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 28, 2015

என்னவள் தன்னுள் யான்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

"புனிதமிகு வெண்ணங் கொண்டேன்
    புரிதலிலே வண்ணங் கண்டேன்
தனித்துவங்கண் டேவி யந்தேன்
    தலையாய மதிப்புங் கொண்டே
மனிதரிலே குருவாய்க் கொண்டேன்
    மகத்துவனீ! துணையாய்க் கொண்டால்
துனியென்றாம்" என்றாள் பாரேன்
    துயரந்தான் வாழ்வில் இங்கே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

துனி - குற்றம்.

என்பே தை - என்பேதை

கலித்தாழிசை

என்பேதை அன்புடையன் இவனென்று ணர்ந்திலங்கா
என்பேதை? அன்புடையள் என்றாலும் மனமில்லாள்
இன்போ?தை இன்னலிதோ? என்றறியேன் மனத்தில்லாள்
எந்நேர முந்தவமாய் இயல்கின்றேன் மனத்தில்லாள்
                                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 23, 2015

முருகா!

கட்டளைக் கலித்துறை

அருவாய் உருவாய் அருளாய் ஒளியாய் அகத்துறையும்
பொருளாய்ப் பொருள்தன் பொருளாய்ப் பொலியும் பொழில்விருப்பக்
கருவாய்க் குருவாய்க் கனியாய்க் கனிவாய்க் கனிந்தவனே!
திருவாய்த் திறமாய்த் திருவாய் மொழியாய்த் திகழ்குகனே!
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 22, 2015

வான மழையும் வாழ்க்கையும்

காப்பியக் கலித்துறை

தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா

வான மழைக்குங் கடல்நீர்தனை மாற்றி வைத்துத்
தான மெனவிவ் வுலகேபெறு மாற ளிக்குங்
கான லெனமுன் கரைந்தேகிடுங் கால வாழ்க்கை
வான மெனச்சேர்த் தளித்தேகளித் தேகு வோமே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 8, 2015

பொருள் விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருவிளங்கு முருண்டையது மொழிவ ழக்கில்
   பொருவிளங்கா வுருண்டையென மாற்றங் கொண்டு
பொருள்மயக்கம் தந்தென்னை யலைக்க ழிக்கப்
   பொருளுணர்த்தி யருள்தந்தார் பெருந்த கைமைத்
திருவரதப் பெருங்கோவும் அழகுக் கோவும்
  சிறந்தபொருள் சொல்வழக்கைத் தெரிந்து கொள்வோம்
பொருள்விளங்கா மற்போதல் புரிந்து கொள்ளாப்
  பொருள்நிலையாப் பொருளென்று பொருள்த ரும்மே 
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மொழிவழக்கு - வினைத்தொகையாகப் பேச்சு வழக்கு எனும் பொருளில்.

திருவரதப் பெருங்கோ - மரபுமாமணி மா.வரதராசனார்
அழகுக் கோ - சுந்தரராசனார்

பொருள்விளங்காமற் போதல் என்பது  1. புரிந்துகொள்ளாப் பொருள், 
2. நிலையாப் பொருள் எனும் இருபொருள்களைத் தரும்.

Oct 31, 2015

இதழகல் வெண்பா

இதழகல் குறள்வெண்பா

எந்தாய்! எழிலாய்! எனைக்காத் தகலச்செய்!
கந்தா!நின் கையால் கலி

இதழகல் நேரிசை வெண்பா

ஐய!நின் ஆக்கச் செயல்திறத் தையெண்ணிச்
செய்யச்சீர் எண்ணத்தார் சேர்ந்திடச் - செய்யிதனை
யென்றாண் டதனைச் செழிக்கச்செய் யாற்றலை
நன்றாய்நான் சாற்றலெந் நாள்?

இதழகல் இன்னிசை வெண்பா

கண்ணா யெனநான் அழைத்தேன்நின் கண்காணா
தெண்ணாதே யென்றறைந்தாய்! என்செய்கேன்? ஏந்திழையே!
எண்ணத்தே நீநிறைந்தாய் எங்கே தனித்தியங்க?
தண்ணிய நெஞ்சத்தைத் தா

                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 30, 2015

சுபாஷினி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மேன்மையும் மென்மை யுஞ்சேர்
  மொழிதனை யணியாய்க் கொண்ட
தேன்மொழிச் செல்வி வாழி!
  திகழொளி யோவி யஞ்செய்
வான்சிறப் பெய்தும் எண்ண
  வண்ணமும் வாழி! வாழி!
கான்கொளும் ஆற்றைப் போலக்
  கவிசெயும் தோழி வாழி!
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 23, 2015

கால ஓட்டக் காட்டாற்று வெள்ளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய்-காய்-காய்-காய்-மா-தேமா

காலோட்டக் காட்டாற்று வெள்ளமது கரைகளையும் கரைத்துக் காட்டும்
மேலோட்ட மாய்க்காணச் 'செருக்குற்ற வாழ்வுனது மெலியார் தம்மைக்
கோலோச்சும் அதிகாரம் கொண்டாய்நீ' எனச்சொல்லும் குறைகா ணுள்ளத்
தாலோட்டம் நிற்காது தடைகளெலாம் கடந்துசெலும் தனித்தன் மையே!
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 22, 2015

சிவன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விளம்-மா-விளம்-மா-விளம்-காய்

கங்கையும் பிறைகொள் திங்களும் சென்னி; கண்ணுதல் அறுபொறியும்; 
மங்கையும் பாகம் மறைந்தவன் கோலம் மண்சுமந் திடுவடிவாய் 
அங்கெழுந் தருளு மடியவர்க் கடியன் ஆயினும் முடியடியும் 
பங்கய னும்பாற் கடல்வசிப் பவனும் பார்த்திலன் அதிசயனே! 
                                                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 10, 2015

முருகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (விளம்-மா-மா)

முருகனே! கந்த னே!கார்
  முகில்வணன் மருக னே!செந்
திருக்கரத் தால ருள்சேர்
  திருப்பரங் குன்றக் கோனே!
செருப்புகு செவ்வேல் வீர!
  சீரலை வாயிற் கோவே!
திருப்புகழ் நாளும் ஓத
  திருவருள் மோதும் அன்றே!                          1

சேவலுஞ் செவ்வே லுங்கை
   சேர்ந்தொரு தீரம் காட்டும்
காவலுக் கும்ப ழத்தால்
   காவலுக் கங்கு பாகு
நாவலை உலுக்கிப் பாட்டி
   நாவளம் நாணச் செய்தே
ஆவலைப் பெருக்கி ஆங்கே
   அருந்தமிழ் பருகி னானே!                              2
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 7, 2015

தமிழில் பெயரிடுக

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அழகாய்த் தமிழில் பெயர்வைத்தல்
   ஆகா தென்றே திரிகின்ற 
பழகாத் தமிழன் பெருமையெலாம்
    பாருக் குரைக்க நான்வருவேன் 
அழகே தமிழாம் அதைவிட்டெங்(கு)
    அழகைத் தேடிச் செல்கின்றீர் 
பழகப் பழகத் தான்றெரியும்
    பழமும் பாலும் தமிழென்றே 
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வேலனை வேண்டுவோம் - 2

வேண்டியதை வேண்டியும், வேண்டாததை வாய்விட்டுக் கூறியும், வேலனை எண்ணியும் என் பள்ளி நாள்களில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தரவு கொச்சகக் கலிப்பா

அழகுத்
தேவனே!உன் அடியன் படுதுயரம்
அழகென இரசித்தாயோ? அக்கறை விடுத்தாயோ?
பிழைகள் செய்திடூஉம் பேதை நெஞ்சமதை
வழங்கி வருத்துகிறாய்! வேறென யான்சொல்வேன்?           1

உறுதியஃ துடனிருக்கச் செயலதனைச் சிறப்பாக
இறுதியடைந் திடச்செய்வாய் இறையே!என் ஐயாவே!
பெறுதியெனத் தருவதெலாம் பெற்றிடவும் அருள்வாயே!
அறுமுகனே ஆற்றலுடன் ஆற்றிடவே ஆற்றிடுவாய்!           2

எந்நன்மை எமக்கருள இத்துயரைத் தந்திட்டாய்?
வந்தருள்வாய்! வளமெல்லாம் தந்தருள்வாய்! வடிவேலா!
சிந்தனையை ஒன்றாக்கிச் சிறந்திடவே செய்திடுவாய்!
அந்தவொரு பெருஞ்செல்வம் குலையாமல் காத்திடுவாய்!             3

கலங்கிடூஉம் நெஞ்சமிதைக் காணத்தான் பொறுக்குமோ?உன்
உலகம்சுற் றிட்டவலை வாழ்க்கையத னைப்போல
அலைகின்ற மனத்துடனே அறிவுதனைப் புகட்டிடவே
நிலையில்லா யென்முன்னே நினைத்தாயே நிலைகொளுமோ?       4

செயல்சீர்மை யுற்றிடவும் சேர்கிளர்ச்சி யற்றிடவும்
கயமையது பற்றலதும் காரெண்ணம் சிற்றலதும்
முயற்சியிலே தயக்கிலதும் முன்செல்லப் பயக்குவதும்
மயிலேறும் மன்னவனே! முன்னின்ற ருள்வாயே!                 5

தானுண்டு தன்வேலை யுண்டென்றி ருந்தேனை
ஏனின்றிவ் வாட்டமது மாட்டுவித்தாய் ஆறுமுக!
நானின்று ணர்ந்தனனே! நன்மையதுந் தின்மையதுந்
தான்வாரா முன்செய்த புண்ணியமும் பாவமுமே!                 6

நாளும் தமிழ்ப்பணி நான்செய்ய வேண்டும்
நாவில்நின் திருநாமம் நான்சொல்ல வேண்டும்
நானில நன்மைக்கே நானெண்ண வேண்டும்
நாளும்நின் னருளாளே நிறைவேற்ற வேண்டும்                      7

மனிதமன முடைத்தான திண்மைக்கென் னளவதனை
நனிசிறப்பாய் உரைப்பாயே! நாயகனே! நல்லவனே!
கனிகின்ற மனதளித்தாய்! பின்னுமதைக் காயாக்கித்
துனிகிளர்வைத் தாராதே! தனித்தமிழுக் குருகுமனாய்!         8

வலியிலா நெஞ்சருளிக் கலிதரு கின்றாயேன்?
மலிதொல்லை யாகத்தான் மனமென்றும் வேதனையில்
வலிந்தெமக்கு வந்ததுவோ? வாழ்வதனில் சோதனையும்
வலிசெயலில் இன்றித்தான் கிலிபடுத்து கின்றாயே!             9

நின்றே மகிழ்ந்ததுவும் நீங்கா நெகிழ்ந்ததுவும்
நன்றென நினைந்ததுவும் நான்சரி யின்றெனவும்
இன்று வருந்துவதும் ஈந்ததி யேனையா?
குன்றம் அமர்ந்தவனே! குமர! கூறையா!                                  10

இடைவந்த துயரிதுவோ? என்றுவளர் அயர்விதுவோ?
நடைநின்ற நல்வழியை நான்மீண்டும் அடையாமல்
தடையென்று தந்தமையால் தவித்திடவும் விதியாமோ?
மடையுடைந்த தமிழ்வெள்ள! மன்னவனே! பகர்வாயே!   11

பகர்ந்தனை நன்றெனவே! பாசம் மிகுந்தவனே!
அகந்தை அழிந்ததுவே! அறிவு நிலைத்திடவே
மகிழ்ந்துனைத் துதித்திடவே வரமும் அருள்வாயே!
பகரும் தந்திடுவேன்பகர்ந்த பெருமாளே!                               12

உன்னுடைவை வேலாலென் வினையெல்லாந் தீர்த்திடுவாய்!
புன்செய்கை யனைத்தினையும் புரண்டோடச் செய்திடுவாய்!
என்கைகள் செய்கின்ற எச்செயலும் நின்னருளே
முன்னியவை முருகா!உன் அருள்தன்னால் முடியுமாறே! 13

மனமாகி அதுசெய்யும் மதியாகு பவனே!
மனம்பொருந்த உனைப்பாடி ஒருநாளு மறவேனே!
மனமுணர்ந்த மறைபொருளாய் உறைந்தபதி யோனே!
மனக்கலக்கம் முற்றிலுமே மறைந்திடவே அருள்வாயே!   14

ஏங்காநில் புத்தியிலே என்னெஞ்சம் தோய்கிறதேன்?
தாங்காமல் உழன்றிடுதல் துயர்துடிப்புச் செய்கையெலாம்
நீங்காமல் நினைவிற்கு நித்திரையைத் தாராமல்
தாங்காவல் தனித்தலைவ! தீர்ப்பாயே! தீர்ப்பாயே!                    15
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வேலனை வேண்டுவோம் - 1

வேண்டியதை வேண்டியும், வேண்டாததை வாய்விட்டுக் கூறியும், வேலனை எண்ணியும் என் பள்ளி நாள்களில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

கலிவிருத்தம்

அடியன் படுதுயர் நொடியில் நீக்கும்
வடிவே லவனே! வரமொன் றருள்வாய்!
முடிவெ டுத்தபின் முயற்சியில் தளராத்
திடமன முடன்றன் னம்பிக்கை தருவாய்!                    1

இடரிழு விசைக்கெதிர் விசைதந் தென்னைத்
திடமன முடையனாய்த் திரும்பிடச் செய்வாய்!
மடமெனும் மாவிருள் மருண்டிடச் செய்து
தடமாய் மாற்றுக தடைகள் எல்லாம்                              2

இன்ன லென்ப தில்லை; இனியுன்
பன்னிரு கையால் பகலென வைப்பாய்
மன்னவ னெஞ்சில்! மீச்சிறு தவறும்
என்னுள் இலதாய் இலங்கிடச் செய்வாய்!                    3

என்றன் இறைவாஎன்னைக் காக்க!
கொண்ட செயலைக் குறைவா ராமல்
அன்பன் யானும் ஆற்றிடச் செய்குவை
அன்புத் தெய்வமேஅருள்புரி வாயே!                              4

எண்ணிய எண்ணம் இடைநிற் காமல்
தண்ணீ ராகத் தவழ்ந்தோ டிடவே
பண்ணியல் பேச்சைப் பழகச் செய்வாய்!
தண்ணிய தாகத் தருவாய் நெஞ்சம்!                                  5

எண்ணிய தியற்றினைஎன்மன துரைத்தனை;
தண்ணிய நெஞ்சினைத் தாங்கிட வருளினை;
பண்ணிடும் செயலின் பக்குவ முணர்த்தினை;
எண்ணருஞ் செய்தனைஎன்சொலி மகிழ்வேன்?          6

எண்ணெழுத் திரண்டும் எழில்நிறை பிழையற!
கண்செவி இரண்டும் கவனம் விழிப்பாய்!
திண்மனம் தெள்ளறி விலங்கிக் குறிக்கோள்
கொண்டிடச் செய்வாய் குமரவேல் நாதா!                         7

சுந்தர மணியாய்சுகந்தந் திடுவாய்!
எந்தத் துயரமும் எனையணு காமல்
உந்தன் திருவடி சரணடை கின்றேன்
கந்தா என்னைக் காத்திடு வாயே!                                          8

செய்யுஞ் செயல்களைத் தீதற உணர்வேன்!
செய்யுஞ் செயல்சேர்ந் தாவியாய்ப் புணர்வேன்!
மெய்யு ணர்ந்து மேற்புணர் உயிர்போல்
எய்யும் கணைகள் எய்திடப் புரிவாய்!                                  9

நினைத்தவை நிறைவுற நின்னருள் தருவாய்!
அனைத்திலும் முழுமை அடைந்திடச் செய்வாய்!
வினைதீ யனவாம் எனைவிட் டகலவும்
உனையனு தினமும் உள்ளவும் செய்வாய்!                    10

நுண்ணறி விலங்கி நன்னெறி செல்லப்
பண்ணிசை யறிவு பழகிடச் செய்வாய்!
எண்ணிய வேலை இடைநிற் காமல்
திண்ணியத் துடனே தீர்வழி தருவாய்!                                11

மந்த புத்தியன்மறுமொழி பேசிலேன்;
சிந்தனை செய்கிலேன்சீக்கிரம் உணர்ந்திலேன்;
நிந்தனை என்னை யானே செய்குவேன்;
எந்தையே முருகாஎமக்கருள் புரிவாய்!                           12

முறையல் லாதன நிறைந்திடு மெனின்மனக்
குறையால் நோவேன் குமரவேல் நாதா!
இறையேவேண்டும் இன்பொருள் தருவாய்!
முறையே உறுதியாய் வளர்ந்திடச் செய்வாய்!                 13

திணிப்பால் என்னைத் திணற வைக்கிறாய்
பிணியால் என்னைப் பிறழ வைக்கிறாய்
கணித்தும் என்னைக் கலங்க வைக்கிறாய்
அணித்த மிழ்தனின் அறுமுக வேலனே!                              14

விழைந்தவை தருவாய் விநோத நாதா!
கழையு மாகி யளியினி நீராய்த்
தழைத்திடச் செய்வாய் தனியற மாக
உழைப்பை நம்புவோர்க் குறையில் தருவாய்!                 15
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 30, 2015

நதியா - பிறந்தநாள் வாழ்த்து

ஆசிரியத் தாழிசை

கனியுளந் தேன்மொழி கவினொளி மதிமுகம்
நனிசிறந் திலங்கிடும் நற்பண்(பு) அரசி
இனிமையுற் றென்றும் இசைபெற வாழிய!

ஆற்றுப் படுத்தும் ஆற்ற லுடைய
ஆற்றுப் பெயர்கொள் அன்புத் தோழி
ஏற்றமுற் றென்றும் இசைபெற வாழிய!

பொறுமை அரும்பெரு பொற்குணம் இயல்பாய்
உறுந்தகை மையினால் உயர்செவி லியரெனப்
பெறும்பே றிதுவே புகழொடு வாழிய!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 27, 2015

வாணிகமும் இயற்கைச் சீரழிவும்

நேரிசை ஆசிரியப்பா

நானில நன்மை சிறிதுங் கருதா
மானிடர் சிலர்தம் மாவிடர் சேர்க்கும்
வாணிக நெஞ்சுதன் வளத்தைப் பெருக்கிக்
காணலுங் கருமங் காத்தலுங் கோளெனக்
காணா திருத்தல் கவினியற் கைதன்
அழிவுக்(கு) ஆக்கம் ஆக்கும் அஞ்சாப்
பழிசேர் மூடர் பண்பிலார்
விழியொளி பெறாஅர் வீணே வீணே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 18, 2015

மொழிக்குப் பழிநேர்ந்தால்? (வெளிவிருத்தம்)

மொழிப்போ ரைத்தொ டங்குந் தலைவ - மடமோடி
மொழியென் றாலென்? மொழிவா யறியா - மடமோடி
விழியாய் விளங்கு வைநீ என்றார் - மடமோடி
விழியைப் பிடுங்கு மிழிசெய் கையேன்? - மடமோடி
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடமோடி - மடம் ஓடி - மடமை ஊடுருவி.
மொழிவாய் - மொழியின் மூலம்

Sep 9, 2015

கடலும் உள்ளமும் (வெள்ளொத்தாழிசை)

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; நிலையின்றிக்
கத்து தலைக்கொண்டு காவல்கை யற்றன;வ
கத்துத் தளைகொண்டு கா

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; பொதியுள்சங்

கத்தமிழ் பேரொலி கட்பொருள் கொள்க;வ
கத்தமிழ் பேரொளி காண்

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; உளதன்ன

கத்தெண்  ணிலாத வளங்கள்; வளங்களுள
கத்தென் னிலாத வளம்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:


ஆழிசை கடல் உள்ளம் ஒத்த - பெரும் சத்தத்தை ஏற்படுத்தும் கடலும் உள்ளமும் ஒத்த தன்மையன.

ஏனெனில்,
1. நிலையின்றிக் கத்துதலைக் கொண்டு காவல் கையற்றன
2. பொதியுள் சங்கத்து அமிழ் பேரொலி கட்பொருள் கொள்க (சங்கினின்று எழும் பேரொலி, சங்கத்தினின்று எழும் பெருமுழக்கம் - எழுதலுக்குக் காரணம் அமிழ்ந்திருத்தல் எனக் கொண்டு) 
3. உள தன்னகத்து எண்ணிலாத வளங்கள்

1. அகத்துத் தளைகொண்டு கா - மனத்தைக் கட்டுப்படுத்திக் காக்க

2. அகத்து அமிழ் பேரொளி காண் - மனத்தில் இருக்கும் பேரொளியை அறிந்துகொள்க
3. வளங்களுள் அகத்து இலாத வளம் என்? (என்று அறிக) - அவ்வளங்களுள் மனத்தில் இல்லாத வளம் என்ன என்று ஆய்க.

Sep 5, 2015

வீர இராகவன் (பிறந்தநாள் வாழ்த்து)

கலிவிருத்தம்

வாச மந்தா தித்திருப் பாற்கடல்
ஆச னந்தா னென்னர வாமுயர்
நேச மந்தா சின்மலர் இலக்குமி
மாச னந்தம் போக்கிடும் இராகவன்        1

வீசு தென்றற் போல்விளங் கிடவருள்
ஆசி பெற்று வாழிய வளத்தொடு!
ஆசு கர்வ மேதுமி லாதவன்
நேசன் நேர்நில் நெஞ்சுரன் வாழிய!        2

நேச முற்றன நேர்ந்திட வாழிய!
மீசை மாகவி போற்றுவன் வாழிய!
பேசி டாவுயிர் பாசமுற் றியவன்
ஈசன் மைந்தனின் பங்கொள வாழிய!    3
                 தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 1, 2015

ஒன்றிய ஒருநான்கு வெண்பா

நேரிசை வெண்பா
----------------------------
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா; - வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

இன்னிசை வெண்பா
--------------------------------
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா ; வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

சிந்தியல் வெண்பா
------------------------------
ஒன்றாகா உள்ளம் ஒளிபெறா வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

குறள் வெண்பா
------------------------
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 29, 2015

சிவன்

நேரிசை வெண்பா

ஆஅ டரவாஅ ஆஅ பரணமுனக்
காஅ டுவதோஒ காஅட்டி - லாஅ
லகாஅல நஞ்சுண் டதேஎன் பிழைப்பு
தகாஅத மைந்தோய் தணி  
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய: 
ஆடுஅரவா ஆபரணம் உனக்கு? ஆடுவதோ காட்டில்
ஆலகால நஞ்சுண்டது ஏன்? பிழைப்பு தகாது அமைந்தோய்! தணி!

Aug 18, 2015

கண்ணா

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்னபெய ரிடலாமென் றெண்ணி இருக்க
  என்னுளத்தே எழுந்ததுவோ கண்ணா என்ப
நின்றோழி தனைநீய ழைத்த பேரோ
  கண்ணம்மா வாய்நிறைய அழைத்து மகிழ்ந்தாய்
என்றாலும் நின்கண்ணைக் காணு முன்னே
  இட்டபெயர் இங்ஙனம்பொ ருத்த மாகும்
என்றெண்ண விலையுன்றன் கண்ணை இன்று
  ஏரெடுத்துப் பார்த்துவியந் தேனே என்னே!

கண்ணாளன் என்றாகேன் ஆனா லுன்றன்
  கண்ணாள முனைந்தேநான் இன்று மகிழ்ந்தேன்
கண்ணால்நான் உனையென்று காண்பேன் அறியேன்
  கண்ணாள வென்னுளத்தைக் கொன்றாய் பின்னும்
கண்ணுக்குள் கண்ணாகி நின்றாய் நன்றாய்
  கண்டவனாய்க் காணாத தவனாய்க் கண்டேன்
கண்ணாடி குவித்துன்னை எட்டா தாகக்
  கண்ணுக்குக் குழிந்தெடுத்துக் காட்டும் அன்றோ!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2015

காரிகை

கட்டளைக் கலித்துறை

காரிகை கற்றுக் கவிபா  டுவனெனின் காதலியக்
காரிகை தானெனைக் காணாள் எனயான் வருந்தினனே !
காரிகை யாளெனைச் சேர்ந்திடு நாளொன் றுளதறியேன்!
காரிகை யேயுல கென்றென வெண்ணி வருந்துவனே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


Jul 31, 2015

கைக்கிளை யேதங் கைக்கிலை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)
நாவளன்தன் நெஞ்சதனில் நேர்ந்திடூஉம் நற்றலைவி!
ஆவலன்தன் மொழிக்கேங்கி யனுதினமும் காத்திருக்கும்
காவலன்தன் காவளம்சேர் காலமுந்தான் வந்ததெனத்
தாவலனென் றுள்ளத்தைத் தாங்கியெழு தும்மொழிகேள்!

புளிபோட்டு விளக்கியவள் மொழிகேட்டு நகைத்தவன்தன்
களிப்புக்கா தாரமும்நீ கண்ணுள்ளே நிற்கின்றாய்!
ஒளித்தலறி யாதிவன்தன் உணர்வுகளைச் சிறுகணமும்
அளித்தருள்நின் னெஞ்செனக்க டங்காத வுளமொழிகேள்!

(தாழிசை)
நினைவகற்ற வியலாது நினைதினமும் நெஞ்சுறைத்துக்
கனவினிலே காண்கின்ற கள்வனைநீ உணர்வாயோ?

நினைப்பிரிய மனமில்லா நேயத்தன் வன்சிறைதான்
எனைக்கொல்ல ஏங்கவிட்டு விட்டதனை உணர்வாயோ?

கண்சிமிட்டும் நொடிப்பொழுதில் கணக்கறியாச் செயல்புரியும்
கண்களைநே சிப்பவனின் கனியுள்ளம் உணர்வாயோ?

என்சிறையீ தென்றறிய வியலாதும்; அறிந்தும்பின்
தன்சிறையீ தென்றுணர்ந்தான் அவனைநீ உணர்ந்தாயோ?

தன்செய்த னக்கோர்பொன் செயவிழைந்தான் அப்பொன்னேர்
பொன்னித்தாய் தன்னில்தான் போற்றுவள்நெஞ் சுணர்ந்தாயோ?

பாவினனி யல்பாம்தன் பொருந்துள்ளப் பெருந்தகையாள்
நாவினளைத் தான்தேடி நலமுறுதல் உணர்ந்தாயோ?

(தனிச்சொல்)
ஆம்பின்,

(அராகம்)
அவனுளங் கருமுகி லெனவெளி யடைந்திடுந்
தவனுளம் வருந்தியு ழல்கிற தென்னை?

பொருளெது வவனெதிர் படினுனின் நினைவுகள்
அருள்வது வெனவுளம் மருள்கிற தென்னை?

களவுடை யவனெனக் கருதினை அதுவுளக்
களமெனக் கருதினன் தவறிலை என்னை?

சிவனென வளப்பரும் பருவதன் மகளெனத்
தவமொழிந் தவடனை நெருங்கின னென்னை?

(தனிச்சொல்)
ஆதலின்,

(தாழிசை)
தோழீஇ யேபின்தோள் கொடுத்தென்றன் உளமாற்று;
நாழீஇ யும்பிரிய மனமில்லேன் எனைத்தேற்று;
ஆழீஇ வேறென்னுள் ளந்தானஃ  திரங்காற்று;
கேழீஇல் பெருந்துணையாய் உளக்களத்தே வுனையேற்று;
ஏழீஇ சைமீட்டி எல்லையிலா உளத்தாற்று;
வாழீஇ யெனப்பரந்தென் னுளஞ்சேரு மொழியாற்று;

(தனிச்சொல்)
உரைப்பாய்

(நாற்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
என்செய் கின்றனை? என்சொல் கின்றனை?
புன்செய லோவென்? நன்செய லோவென்?
சிந்திக் கின்றனை? அதுவன் றென்னின்
நிந்திக் கின்றனை? பிழைப்பைப் பாரும்!
எனவுரைக் கின்றனை? அதுவன் றென்னின்
நன்றூஉ நன்றென் அன்புடை நெஞ்ச!
எனவுரைக் கின்றனை? என்சொல் வேனியான்?
அன்பே நண்பே உள்ளம் பகர்வாய்!

(தனிச்சொல்)
இன்னுமியான்

(சுரிதகம்)
தூது யாதெனத் தேர்ந்திடு வேனோ?
யாதென் னுளத்தை உனக்குரைத் திடுமோ?
ஏது யென்னென் றறிகிலேன்
போதே தேனே உள்ளம் பகர்வாய்!
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 27, 2015

திரு ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

நேரிசை ஆசிரியப்பா

என்செய் திடூஉம் உலகினி உன்றன்
பொன்சொல் மொழிக்கேங் கிடுமென் றறிவையோ?
இளந்தலை முறைக்கோர் அறிவியல் தந்தை
வளந்தலை முறைக்கும் வாய்த்திட வாய்த்தனை
அறிவியல் தாய்தன் அருங்குழந் தைமுகம்
அறிவித் தனளுல கினுக்கே அப்துல்
கலாஅம் இனியே எலாஅம் என்றாள்
நெஞ்சம் வானியல் அதனுள் தஞ்சம்
நுண்ணிய அணுவும் நின்பெயர் சொல்லும்
இனிய சொல்லினை; மென்மை பொருந்தினை;
பாரதம் தனதெதிர் காலம் பற்றி
நீருரைத் தவைநன வாகிடும் நாளை
அதுகா ணாததற் குள்ளே
வான்றோய்ந் தனையே வையம் விட்டே!
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 16, 2015

கனவும் காதலியும்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னினைப் போடியா னுறங்கி னேனோ?
என்கன வில்நீ! என்சொல் வேனியான்?
நனவைப் போலவே இப்போ தும்நீ 
என்னைப் பார்க்க வந்தனை! என்னே!
உன்னுளம் உரைப்பதி யாஅ தென்னின்                                   5
'யான்வேண் டாமே யுனக்கு'என் பதுவே 
நனவில் காண வியலேன் ஆயின்
கனவி லாவது காண வேண்டும்
என்பதற் காகவே வந்தனை போலும்!
உன்னைப் பார்த்துநான் மொழிந்த தென்னெனின்              10
'இந்தச் சிரிப்பு இந்தச் சிரிப்புதான் 
வேண்டும் நீயழ கோவிலை யோவெனும் 
எந்தவே றுபாடும் என்றனுக் கில்லை
ஏனெனில் அங்ஙனம் நயம்படைத் தவனியான்'
இங்ஙனம் யான்மொழிந்  திடவே தென்னெனின்                 15
ஏதோ யான்சொலக் 'கலகல' வெனநீ
சிந்திய முத்துப் பற்சிரிப் பதுவே!
என்னில் வந்தடைந் தாயை யென்றன்
அன்னையும் அண்ணனும் காண வியந்தனர்
அங்கென் மொழிந்தோம்? அங்கென் செய்தோம்?                 20
ஏதும் என்றன் நினைவில் இல்லை
பின்னர் உணவகம் சென்றுண வருந்த 
விருப்பம் தெரிவித் தனைநீ! ஆயின்
அன்னையும் அண்ணனும் நிறைவிலா மனத்தொடு
என்னையும் உன்னையும் வழிய னுப்பச்                                  25
'சரீஇ' யென்றியா னிழுத்துச் சொன்னேன்
செல்லும் வழியில் பாணிப் பூரிக்
கடையொன் றெதிர்ப்பட வங்குச் சென்று
தேநீ ரோகுளம் பியோவொன் றுனக்கு
வாங்கிடக் கடைக்கா ரரிடம் உத்தர                                            30
வொன்று பிறப்பித் தனையே எனினும்
எனக்கும் சேர்த்து வாங்கிட வில்லை
கடையின் அருகில் நிழலில் அமர்ந்தோம்
ஏதோ கூறினேன் யானதற் குன்மொழி
யாதெனின் 'ஆதலி னாற்றான் உன்னுடன்                               35
பேசவும் விழையேன்' அதனைக் கேட்டுநம்
அருகமர்ந் திருந்த பாட்டியென் னென்று
வினவ வதற்கு 'இவனெனைக் காதலிக்
கின்றா னாமென் செய்ய' வென்றனை
'அவனை மணந்து நிம்மதி யோடு                                                 40
வாழ்ந்திருக் கலாமே' என்றாள் பாட்டி
அதனை எதிர்பா ராநீ வெறுப்புற்
றெழுந்து வந்தனை என்னுள் புன்னகை
பூக்க வந்தப் பாட்டியை நன்றி
யுடனியான் நோக்கிப் பின்னர் உன்னொடு                                45
நடந்தே என்னில் புகுந்தோம் அங்கே 
தடபுடல் எனநமை விருந்தெதிர் கொள்ள
யானுண் டிடத்தொடங் கினேனா யின்நீ
கொண்டு வந்த உணவை உண்ணத்
தொடங்கினாய் பின்னர் நேரமா யிற்று;                                      50
கிளம்ப வேண்டும் என்றனை நான்சரி
யெனமொழிந் துனக்கு விடைய ளித்தேன்
ஆயினும் என்னுளம் எனையங்கு நிற்க
இடந்தர வில்லை உன்னைத் தொடர்ந்தேன்
நடந்து செல்கையில் சாலையின் எதிர்ப்புறம்                          55
பூங்கா வைப்பார்த் தங்கே சென்றனை
சென்றே பூக்களைக் கொஞ்சினை பின்னர்
யோகா சனங்கள் செய்திடத் தொடங்கினை
இத்துணை நேரம் செடிமறை வில்நின்
றுன்னைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன்                       60
நீயெனைக் கண்டு கொள்ளக்கூ டாதென
உள்ளம் பதைத்தேன் ஆயினும் நீயெனைக்
கண்டு கொண்டனை அப்போது தானுனைக்
காண்கின் றேனென் பதுபோல் முகத்துதி 
சொன்னேன் அப்போது கனவு கலைந்து                                   65
விழித்தெழுந் தேனே! விழித்தெழும் தேனே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்