Oct 7, 2015

வேலனை வேண்டுவோம் - 1

வேண்டியதை வேண்டியும், வேண்டாததை வாய்விட்டுக் கூறியும், வேலனை எண்ணியும் என் பள்ளி நாள்களில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

கலிவிருத்தம்

அடியன் படுதுயர் நொடியில் நீக்கும்
வடிவே லவனே! வரமொன் றருள்வாய்!
முடிவெ டுத்தபின் முயற்சியில் தளராத்
திடமன முடன்றன் னம்பிக்கை தருவாய்!                    1

இடரிழு விசைக்கெதிர் விசைதந் தென்னைத்
திடமன முடையனாய்த் திரும்பிடச் செய்வாய்!
மடமெனும் மாவிருள் மருண்டிடச் செய்து
தடமாய் மாற்றுக தடைகள் எல்லாம்                              2

இன்ன லென்ப தில்லை; இனியுன்
பன்னிரு கையால் பகலென வைப்பாய்
மன்னவ னெஞ்சில்! மீச்சிறு தவறும்
என்னுள் இலதாய் இலங்கிடச் செய்வாய்!                    3

என்றன் இறைவாஎன்னைக் காக்க!
கொண்ட செயலைக் குறைவா ராமல்
அன்பன் யானும் ஆற்றிடச் செய்குவை
அன்புத் தெய்வமேஅருள்புரி வாயே!                              4

எண்ணிய எண்ணம் இடைநிற் காமல்
தண்ணீ ராகத் தவழ்ந்தோ டிடவே
பண்ணியல் பேச்சைப் பழகச் செய்வாய்!
தண்ணிய தாகத் தருவாய் நெஞ்சம்!                                  5

எண்ணிய தியற்றினைஎன்மன துரைத்தனை;
தண்ணிய நெஞ்சினைத் தாங்கிட வருளினை;
பண்ணிடும் செயலின் பக்குவ முணர்த்தினை;
எண்ணருஞ் செய்தனைஎன்சொலி மகிழ்வேன்?          6

எண்ணெழுத் திரண்டும் எழில்நிறை பிழையற!
கண்செவி இரண்டும் கவனம் விழிப்பாய்!
திண்மனம் தெள்ளறி விலங்கிக் குறிக்கோள்
கொண்டிடச் செய்வாய் குமரவேல் நாதா!                         7

சுந்தர மணியாய்சுகந்தந் திடுவாய்!
எந்தத் துயரமும் எனையணு காமல்
உந்தன் திருவடி சரணடை கின்றேன்
கந்தா என்னைக் காத்திடு வாயே!                                          8

செய்யுஞ் செயல்களைத் தீதற உணர்வேன்!
செய்யுஞ் செயல்சேர்ந் தாவியாய்ப் புணர்வேன்!
மெய்யு ணர்ந்து மேற்புணர் உயிர்போல்
எய்யும் கணைகள் எய்திடப் புரிவாய்!                                  9

நினைத்தவை நிறைவுற நின்னருள் தருவாய்!
அனைத்திலும் முழுமை அடைந்திடச் செய்வாய்!
வினைதீ யனவாம் எனைவிட் டகலவும்
உனையனு தினமும் உள்ளவும் செய்வாய்!                    10

நுண்ணறி விலங்கி நன்னெறி செல்லப்
பண்ணிசை யறிவு பழகிடச் செய்வாய்!
எண்ணிய வேலை இடைநிற் காமல்
திண்ணியத் துடனே தீர்வழி தருவாய்!                                11

மந்த புத்தியன்மறுமொழி பேசிலேன்;
சிந்தனை செய்கிலேன்சீக்கிரம் உணர்ந்திலேன்;
நிந்தனை என்னை யானே செய்குவேன்;
எந்தையே முருகாஎமக்கருள் புரிவாய்!                           12

முறையல் லாதன நிறைந்திடு மெனின்மனக்
குறையால் நோவேன் குமரவேல் நாதா!
இறையேவேண்டும் இன்பொருள் தருவாய்!
முறையே உறுதியாய் வளர்ந்திடச் செய்வாய்!                 13

திணிப்பால் என்னைத் திணற வைக்கிறாய்
பிணியால் என்னைப் பிறழ வைக்கிறாய்
கணித்தும் என்னைக் கலங்க வைக்கிறாய்
அணித்த மிழ்தனின் அறுமுக வேலனே!                              14

விழைந்தவை தருவாய் விநோத நாதா!
கழையு மாகி யளியினி நீராய்த்
தழைத்திடச் செய்வாய் தனியற மாக
உழைப்பை நம்புவோர்க் குறையில் தருவாய்!                 15
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment