அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jan 18, 2026
அருட்சுடரோன்
அருட்சுடரா லாவன செய்வான் பொருட்பொதி
பூவுலகை அன்பிற் புணர்ந்து
கதிர்வரவைக் காண விழையும் எதிர்வரவை
ஏற்று வழிசெ யுலகு
அறம் வளரட்டும்
கைகளை நம்பிக் களங்காண்க பொய்களைப்
போக்கி நிலைக்கும் வழிக்கு 1
செய்கை சிறந்தன வாகுக பொய்வழிப்
புல்லர்ப் புலமோடச் செய்து 2
மெய்வழியோர் மேன்மை பெருகட்டும் உய்வழி
ஓர்ந்து நலஞ்செய்க வே 3
தீமை யெனத்தெரிந்தும் தேர்ந்திழைப்பார் வாய்மை
வழிதேடா மூடர் பிறர்க்கு 4
மதியிலார் மானம் விழையார் விதியென்பார்
வீண்பேச்சு வீரரா வார் 5
Dec 1, 2025
கோபிநாத் - கலைவாணி
கலை:
பெருங்கோபி கையர்தம் பேரன்புக் குரியவனாய்
வருங்கோபி நாதன்பேர் வடிவாக வாய்த்தவரே!
பொருங்கோபி ணைத்திருக்கும் பொறிவில்லின் நாணாக
ஒருங்கோவி யத்தழகாய் உயர்வோடு மனங்கொள்வீர்!
கோபி:
கலைவானில் அழகாகக் கலைந்தோடும் முகிலூடே
கலைகலையாய் நடக்கின்ற கலைகற்ற நிலவாகக்
கலையாத கனவோடு காலமெலாம் சேர்ந்திருப்போம்
கலைவாணி கவினாலே கலையாலே கனிவாலே!
Nov 26, 2025
ஆனந்தி
அன்புச் செல்லம் ஆசை வெல்லம் - ஆனந்தி
இன்பச் சொல்லில் இன்னா இரிக்கும் - ஆனந்தி
என்புக் கென்பாய் என்றோள் பற்றும் - ஆனந்தி
உன்புத் தகத்தே உறைவி டந்தா - ஆனந்தி
Oct 14, 2025
பெருங்கருணை
ஈர்ப்பு விதியென இயற்பியல் உரைக்கினும்
சேர்ப்ப தென்னவோ செயும்பெருங் கருணையே
சீர்த்த மனத்தினர் செம்மையாய் அறிகுவர்
ஆர்த்த அன்பினால் அரும்பெரு வெளியமே
Oct 12, 2025
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
பொழுது சாயுங் காலத்தே
பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
விரையத் துணிவேன் வீட்டுக்கே
Sep 30, 2025
ஆதியே வாழி!
இருள்வெளி எங்கும் எழுகதி ராலே
பொருள்விளங் குறச்செய் பொருளுடைப் பொருளே!
அருள்வெளிக் கடலே! ஆதியே நாளும்
கருத்தினில் இருத்திக் கைதொழு வேனே!
Jul 7, 2025
கருத்து வேறுபாடு
வானம் நீலம் என்றாய்
வானம் நீளம் என்றேன்
தென்றல் போல்வாய் என்றேன்
தென்றலும் ஆகா மெல்லியலாய்
விருது பெருமை என்றாய்
விருதுக்கே பெருமை என்றேன்
கருதும் கருத்து வேறு
காணும் கனவுகள் வேறு
இருந்தும் வாழ்க்கை ஒன்றென்று
இணையாய்த் திரிவோம் இன்று
Jun 2, 2025
உண்மை
தன்னுள்ளம் நன்று பிறனுள்ளம் தீதென
உன்னு மடத்தனத்தார் ஓடாகத் தேய்ந்தாலும்
உன்னா துலகவரை ஒன்றாகக் காணாது
மன்னு மிதுவே மறை
சும்மா இருத்தல் சுகம்
ஆய்ந்த பொருள்கண்டோர் ஆயிரஞ் செய்தாலும்
வாய்ந்த நிறைநிலை வாராதே - வாய்ந்தமையா(து)
உம்மா லியலாத ஒன்றைச் செயப்புகற்குச்
சும்மா இருத்தல் சுகம்
😂
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)