Showing posts with label கவிதை - மணிக்குறள். Show all posts
Showing posts with label கவிதை - மணிக்குறள். Show all posts

Jun 13, 2021

மணிக்குறள் - 50. முப்பாலைப் போற்று

அருந்தமிழ் சொன்ன இலக்கணங் கட்குப்
பொருந்துநற் காட்டாங் குறள்                                 491

வாழ்க்கை முறையை வளமாய் நிறுத்தலான்
தாழ்வைத் தடுக்கும் மருந்து                                    492

நிலைதவறிப் போனாரை நின்றுதடுத் தாண்டு
மலையாக்கும் மாண்பை உடைத்து                     493

குறளடி யாலே குவலயம் ஆண்ட
அறம்பொருள் இன்பம் அது                                      494

ஒருபொருண்மேற் பத்தடுக்கி ஒவ்வொன்றும் முத்தாய்ப்
பொருள்பொதிந் தாக்கினார் போற்று                 495

எக்காலத் திற்கும் இனிதாய்ப் பொருந்துவழி
அக்காலத் தேவகுத்தார் ஆண்டு                             496

காலங் கருதி இடத்தாற் செயச்சொல்லிப்
பாலம் அமைத்தார் படிக்கு                                       497

ஐயனே! ஆற்றல் அளிக்கும் திருக்குறளை
உய்யவே தந்தாய் உலகு                                             498

துணைநின்று தாங்கும் சுடர்விளக்கின் கோலாய்
இணைத்தாய் இனியமுப் பால்                               499

சொல்லாக் கருத்துண்டோ? சொல்லிற் சுடரேற்றி
வெல்லக் கொடுத்தாய் விருந்து                              500

Jun 6, 2021

மணிக்குறள் - 49. வணிகத்தமிழ் வளர்ப்போம்

எண்ணம் சிறக்க எழிற்றாய் மொழிக்கல்வி
வண்ணம் பலவாக்கத் தேர்                              481

தமிழ்வழிக் கல்வி தகுவழி ஆற்றும்
அமிழ்தாய் இனிக்கும் அறிவு                          482

கல்வி யிலாது வணிகம் சிறக்காது
நல்வித் ததற்குத் தமிழ்                                       483

முத்தமி ழோடு முனைந்து வணிகமெனும்
அத்தமிழை ஆக்குவோம் ஆய்ந்து                 484

அறிவியலை ஆக்குக அந்தமிழில் சிந்தை
செறிவாய் வளரும் சிறந்து                                485

நிறுவனம் எல்லாம் நிலைகொள வேண்டும்
உறுதல் தமிழ்வழி என்று                                    486

அலுவல் மொழியாய் அருந்தமிழ் ஆக்கு
நிலைநன் னிறுவனம் நின்று                           487

கலைகள் அறிவியல் காலக் கணினி
நிலைகொள் தமிழில் நிறுத்து                         488

விண்ணொளிர் சோதிட வித்தைத் தமிழ்வழிக்
கண்ணொளியாய்க் கூட்டக் கனி                  489

மென்பொருள் வன்பொருள் மேதினி காண்கின்ற
நுண்பொருள் நந்தமிழில் நூல்                         490

May 30, 2021

மணிக்குறள் - 48. கூற்றங் கண்டு குலையாதே

உடலோம்ப நாளும் உயிரச்சம் இல்லாத்
திடவாழ்வு வாழ்வோம் திளைத்து                471

சரிவிகித மாயுணவு சார்ந்திருக்குங் காலை
வருங்காலன் கண்டஞ்சல் இல்                       472

உணவும் உடலின் இயக்கமும் ஓர்ந்தாய்ந்(து)
இணைப்போம் இயல்பு வழி                            473

உடம்பின்றி ஏதுமிலை உற்ற உயிர்க்கஃ(து)
இடமாதல் கண்டு தெளி                                    474

உடலியக்கம் ஊணுறக்கம் உற்றுணரல் நான்கும்
கடனாகக் காக்கும் கனிந்து                            475

இன்றுணர்ந்தார் நாளை இலையெனும் உண்மையை
நின்றுணர்ந்தார்க் கில்லை துயர்                 476

கொடுங்கூற்றம் என்று குலையா திருப்பாய்
தொடுமொருநாள் அஃதென்று உணர்        477

நம்பிக்கை யாலே நலம்வாழ்வோம் நம்பாமல்
ஏதும் நடப்ப திலை                                              478

உளஞ்சார்ந்த செய்தியால் உண்டாம் விளைவே
உளந்தெளிவோம் ஊக்க மொடு                  479

உடைமை எதுவெனின் உள்ள நலனே
உடைமை யதுவோ உடற்கு                             480

May 23, 2021

மணிக்குறள் - 47. அருவி அழகில் ஆழ்

அருவுதல் என்னும் அருந்தொழி லாலே
அருவியெனப் பட்டாள் அவள்                     461

நீருக்கு வீழ்ச்சியோ நீர்வீழ்ச்சி என்னாது
பேருண்மைப் பேர்கொண்டு போற்று     462

அடடாவோ என்னே அழகாய் அருவி
நடம்போட்(டு) ஒழுகலைப் பார்                  463

உள்ளம் செலுத்தி உயர்ந்த மலைமீது
கொள்ளையிடும் பேரழகைப் பார்           464

ஓங்குமலை மீதிருந்(து) ஓடிவரும் பாடிவரும்
ஆங்குநடம் ஆடிவரும் ஆர்ந்து                    465

மலைக்காட் டருவியின் மாமகிழ்வைப் பாங்காய்
உளங்காட்டக் காட்டும் உயிர்ப்பு              466

அருவி வருநீர் அகவொழுக்(கு) ஆய்ந்து
கருதக் கிடைக்கும் கரு                                  467

காண்டற்குப் பேரின்பம் காணாது போமுன்றன்
நீண்ட துயரமும் நீர்த்து                                  468

அருவி அழகை அகந்தோய்ந்து காண
இருமையும் துன்பம் இரிப்பு                        469

ஆற்றலும் ஆற்றலும் ஆறும் ஒழுக்கமும்
போற்றிக் கொளக்கிடைக்கும் பொன்    470

May 16, 2021

மணிக்குறள் - 46. மருத்துவச் சேவை

நோய்கண்டு நோயின் முதல்கண்(டு) அவையிரண்டும்
காய்வழி காண்பாரே காப்பு                          451

வருமுன்னர்க் காக்கும் வழிசொல்லும் வந்தும்
அருங்காப் பளிக்கும் மருந்து                        452

கொடுநுண்மி யாளக் குறையாத ஊக்கக்
கடுந்தவம் செய்வாரைக் காண்                   453

உடலாய்ந்து கூறி உறுநோயை நீக்கும்
கொடையாளர் தெய்வமே கொள்               454

எதிர்பாராத் தீநேர்ச்சிக்(கு) ஏற்பன செய்யும்
மதியாரைப் போற்றி மதி                               455

மருந்தும் கருவியும் மாறாத நுட்பம்
பொருந்தச்செய் வார்தம்மைப் போற்று 456

உற்றார் உழைச்சென்(று) உரிய மருந்தளிக்கும்
நற்றாய்க் கடனே கடன்                                 457

பதறி வருவார் பதற்றம் தணிக்கும்
இதமுளார் வாழ்வே இனிது                          458

விரைவூர்தி ஓட்டி உயிர்காக்கும் தோழப்
பெருந்தகை யாரை நினை                          459

ஆருயிர் காக்கும் அரும்பணி யார்தமக்(கு)
ஆரும் இணையில்லை ஆம்                        460

May 9, 2021

மணிக்குறள் - 45. வணிகமில்லாக் கல்வி

அடிப்படைக் கல்விக்கே ஆயிரமாய்க் கேட்பார்
அடிமடியில் கைவைப்பார் ஆண்டு              441

களர்நிலம் போக்குமக் கல்வி பொதுமை
உளதவ் வுரிமை உனக்கு                                   442
 
உலகச் சமநிலைக்(கு) ஒன்றும் படிப்பு
நிலைவரம் நீக்கு பணம்                                    443

நாட்டின் நிலையறிந்து நாணயம் வேண்டாது
கூட்டுக கல்வித் தரம்                                          444

கல்வித் தரமுயர்த்தக் காணா வழிசெய்வார்
சில்லறையால் சீர்குலைந்து போம்             445

கல்விக்குச் செல்வம் கணப்போதும் ஈடில்லை
சொல்லித் தெரிதலோ? சொல்                      446

முன்னேற்றம் காண்டற்கு முட்டாய் நிலைத்திருந்து
பின்னேற்றும் பேதைப் பணம்                      447

வளர்ந்தமையின் கல்வி வணிகமே நோக்காய்
வளர்ந்தமையல் இன்றுநல் வாழ்வு            448

வணிகமென வைக்காதீர் வாழ்வுரிமை யென்று
துணிந்துரைப்பீர் நேர்மை துணை            449

வணிகமாய் மாறாத வான்புகழ் கல்வி
துணிந்து பெறுதலே தூண்                             450

May 2, 2021

மணிக்குறள் - 44. தமிழ்நாடு தமிழருக்கே

மொழியாய்ப் பிரிந்தநா ளன்றே உரிமை
மொழியாருக் கென்றே மொழி                             431

ஒரேநா(டு) ஒரேமொழி யென்றுகொண் டாடல்
அரே!தர மின்றஃ(து) அழுக்கு                                 432

மொழிகாக்க வேண்டும் முதலான தேவை
அழிவில்லா வாழ்வுரிமை யே                                433

தன்னிலத்து வாழ்வுரிமை காக்கா(து) அயலானை
இந்நிலத்(து) ஆளவிடல் ஏன்?                                  434

தன்னிறைவு கொண்டுதான் தான்வழங்கல் வேண்டுமெனல்
பொன்னென் மொழியன்றோ? போற்று            435

தன்மக்கள் வாழ்வொழித்துத் தானளிப்பான் மற்றவர்க்கு
மன்னவனோ? மாற்றான் மகன்                            436

தமிழ்நாட்(டு) உரிமை தமிழர்க்(கு) உரித்தே
தமிழ்நாட்(டு) உரிமை தமிழ்க்கு                           437

தமிழ்நாட்ட வேண்டாது தானடிமை யாகல்
தமிழ்நாடும் வேண்டாது காண்                             438

அயலார்க் களித்தல் அயல்மொழி நாட்டல்
செயலார்க்கு? நில்லாதே! செல்!                           439

காவாதான் காவல் கடுந்துன்பம் உண்டாக்கும்
தாவாதான் கொண்டு தடு                                        440

Apr 25, 2021

மணிக்குறள் - 43. கீழ்மையகற்று

பொய்யுங் களவும் பொறாமையும் காமமும்
எய்யா நிலைக்கும் இடன்                                     421                              

எதுவோ எதுவோ எதுவு மிழைக்கும்?
மதுவே மதுவே யது                                                  422

குணங்குன்றி நிற்கக் குறையாற்றும் நெஞ்சு
குணங்குன்றக் குன்றலுங் குன்று                      423

ஒழுக்கம் இலாத ஒருசெயலும் ஒன்றா(து)
இழுக்கத்(து) இருத்தி விடும்                                 424

கீழ்மைக் குணமெலாம் கேடுறச் செய்தலான்
வீழ்வதற்கு வாழ்வாம் விதி                                   425

கோடியாய் நிற்கக் கொடிகட்டி யாண்டாலும்
கோடுளத்துக் கீழ்மை கொடிது                          426

வாழ்வுக் கணியாய் வகையா யமைந்தாலும்
தாழ்வுக் கிழுக்கும் தவறு                                      427

பிறன்பொருள் வௌவீஇப் பேராக்கங் கொள்ளல்
அறனன்(று) அழிவினுக்(கு) ஆறு                        428

வாழ்முறை யல்லன வாழ்வளித்தல் போலாகிப்
பாழ்முறைக்(கு) ஆக்கும் படி                               429

கீழ்மைக் குணமகற்றிக் கொள்க அருளுள்ளம்
வாழ்வாங்கு வாழும் வழி                                       430

Apr 18, 2021

மணிக்குறள் - 42. ஆற்றுவளமே சோற்றுவளம்

உயர்மலையில் ஊற்றாய் உருக்கொண்(டு) அருவிப்
பெயர்விளங்கிச் சீர்நிறுத்தும் நீர்                      411

ஓடும் வழியில் உயர்செல்வம் தேடிக்கொண்(டு)
ஆடும் அரவமொ(டு) ஆங்கு                                 412

ஆறமைத்துச் செல்லும் அழகிய பண்பினால்
ஆறெனவே ஆனாள் அவள்                                  413

ஆற்றின் அருநீரால் ஆயது நாகரிக
மாற்றம் மனிதனின் வாழ்வு                                414

ஆற்றுநீ ரில்லையேல் ஆகுமோ மாமருதம்?
வேற்றுமை யின்றி விரும்பு                                  415

இயற்கையின் சீர்நிலைக்(கு) இன்றி யமையா
முயற்சி யுடையாள் அவள்                                   416

ஆற்றுவளங் காத்தல் அழிவில்லா வாழ்வீயும்
சோற்று வளத்திற்குத் தூண்                                417

ஆறின்றிச் சோறில்லை ஆக்கங்கள் ஏதுமிலை
ஊறின்றிக் காத்தல் உறவு                                   418

பல்வகைத் தாவரம் பல்லாண்டு வாழ்ந்திருக்கும்
நல்வரம் ஈயும் நமக்கு                                            419

ஆற்றுநீர் தேக்கி அணைத்துப் பயன்கொள்வோம்
போற்றுவோம் பொன்னி புணர்ந்து                420

Apr 11, 2021

மணிக்குறள் - 41. நாமிருவர் நமக்கிருவர்

வளமான வாழ்வுக்(கு) அடிப்படை யாவ(து)
அளவான நற்குடும்ப மே                                     401

பன்னிரண்டு பெற்ற தலைமுறை செல்வமின்றி
இன்னலில் வாழ்ந்தது காண்                              402

மக்கள் தொகைபெருக மாவளங்கள் போமிங்குத்
தக்கவாழ் வில்லை தடு                                        403

நமக்கிருவர் போதுமென நாம்கட்டுக் கொள்வோம்
நமக்கதுவே நன்மையாம் நாடு                        404

பொறுப்பின்றிப் பெற்றுப் பொருளின்றி வாழ்தல்
வெறுப்புக் கிடனாம் விலக்கு                             405

நற்குடும்பக் கட்டுப்பா(டு) ஓர்ந்து நலங்கொள்க
பொற்குடும்ப மாய்வாழ்க பூத்து                     406

பெருகிய மக்கள் தொகையால் வளமும்
பொருளும் சுருங்குதல் காண்                            407

இன்பமிகு வாழ்வுக்(கு) இரண்டே பெறல்நன்று
துன்பம் விடாமுயற்சி இங்கு                               408

அளவின்றிப் பெற்றெடுத்தல் ஆய வளமன்(று)
உளத்திருத்தி வாழ்க உயர்ந்து                           409

ஆண்டாண்டு கூட்டுவார் ஆண்வேண்டும் என்றிருப்பார்
ஆண்டவா அவ்வுளத்தை மாற்று                       410

Apr 4, 2021

மணிக்குறள் - 40. நாட்டு மருத்துவத்தை நாடு

நாடுக நாட்டு மருத்துவம் நோயின்றிப்
பாடுக பண்பாட்டைக் காத்து                               391

மூலிகை கண்டாய்ந்து முத்தாகச் சேகரிப்போம்
வேலியாய்க் காக்கும் உயிர்                                  392

புத்துணர்வு பூக்கப்பூ மாதேவி தானீந்த
அத்தனையும் நாடல் அறிவு                                  393

உணவே மருந்தாம் உணரப் பயக்கும்
பணம்வேண்டா வேண்டு நலம்                           394

வருமுன்னர்க் காக்கும் வகைமை வகுத்தார்
அருமை யுணரல் அறிவு                                         395

இயற்கையோ டொன்ற இனிதாக வாழ்வாம்
துயர்நீக்கும் நாட்டு மருந்து                                 396

பச்சிலை நாடிப் பயன்கொள்வோம் ஆய்ந்தீந்தார்
மெச்சுவோம் மேன்மை யறிந்து                       397

நாட்டு மருத்துவம் வீட்டு மருத்துவமாம்
பாட்டியின் கையில் பலன்                                  398

தாவரங்கள் தாமீயும் தாவா வரங்கொள்ளச்
சாவருமோ? வாழ்வாய் தழைத்து.                   399

திருமுருகத் தெய்வம் திருந்தியவாழ் வீயும்
மருத்துவ மாமணியாம் வாழ்த்து.                   400

Mar 28, 2021

மணிக்குறள் - 39. மூடப் பழக்கம் முடக்கு

உண்மை யுணரா உயரறி வில்லாரைக்
கண்கட்டி ஏமாற்று வார்                             381

அச்சங் கொளச்செய்வார் ஆயிரந் தான்செய்வார்
நச்சரவம் போல்வார் நசுக்கு                    382

மந்திரங் காலாம் மதிமுக்கா லாமென்று
தந்திரம் செய்வாரைத் தாக்கு                 383

ஒன்றுமிலா ஒன்றனுக்(கு) ஒன்றென்று தான்கூட்டும்
ஒன்றாத வாழ்வை ஒழி                              384

பொச்சாப் புடைமை பயன்படுத்தி நந்தலையில்
பச்சையங் குத்துவார் பார்                      385

கேடழிக்கும் கேள்வி யறிவால் வினாவெழுப்பி
மூடப் பழக்கம் முடக்கு                              386

வாடச் செயுமந்த வாழ்வுக் குதவாத
மூடப் பழக்கம் முடக்கு                              387

செறிப்பச் செயுமறிவால் செவ்வினை ஆற்றி
முறிப்பாயம் மூடத் தனம்                        388

காலத்திற் கேற்ற கருத்தாய்ந்து கட்போமே
ஆலமெனும் மூடத் தனம்                         389

நலனில்லா மூடப் பழக்கம் நசுக்கப்
புலன்றெளிந்து வாழும் புவி                   390

Mar 21, 2021

மணிக்குறள் - 38. உன்னை உணர்

உன்னையே நீயறிவாய் உண்மையறி வாயென்று
சொன்னாரே சாக்கிரட் டீசு                                371

உன்னை உணர்வாய் உயர்ந்த அறிவாகும்
பொன்னாய் உரைத்தாரைப் போற்று           372

என்ன செயவேண்டும் என்னும் தெளிவெல்லாம்
உன்னை உணர வரும்                                          373

கடுஞ்சினத்தாற் காயாது காக்கும் வழிசெய்
விடுந்துன்பம் உன்னை உணர்ந்து                 374

கண்ணாடி முன்னின்று காணும் புறம்போல
எண்ணத்தால் ஆடும் அகம்                               375

அகக்கண்ணால் நோக்கி அழகுசெய் ஆற்றல்
தகவமைந்து நன்மை தரும்                              376

ஆற்றல் பிறக்கும் அகத்தை அறிந்தாற்ற
ஆற்றல் அமைதி தரும்                                        377

ஊரும் உறவும் உணர்ந்து பயன்செய்க
பேரும் புகழும் பிறப்பு                                         378

எல்லா உயிருமிங்(கு) இன்புற்று வாழற்காய்
எல்லாம் இயற்றுக ஈந்து                                     379

மனிதனாய் வாழ மனம்வைக்க மண்ணில்
புனிதனாய்ப் பூப்பாய் பொலிந்து                  380

Mar 14, 2021

மணிக்குறள் - 37. பகுத்தறிவு கொள்

உண்மை யெதுவென ஓர்ந்தபின் திண்மைகொள்
ஓரா திலையே உயர்வு                                        361

பகுத்தறியு முன்னே பயனிலை யென்னல்
நகுதற் குடையது நன்கு                                     362

பகுத்தறி யென்றுவாய்ப் பக்கம் கிழிப்பார்
பகுத்தறிய மாட்டா தவர்                                  363

எல்லாம் பொதுவென்க ஏமாற்றந் தாராது
நல்லாராய் வாழ்வித்தல் நாடு                      364

மூடப் பழங்கதையை முன்னின்ற காரணத்தால்
நாடத் தெரியும் நடப்பு                                      365

ஆதியி னின்றே அறிவியல் உண்டென
ஓதி விளங்கிக் கொளல்                                   366

வாழ்விய லுக்கு வகுத்த வழிகளைப்
பாழ்வழி யாக்கல் பகை                                  367

இல்லாத காரணம் இன்னு முரைப்பார்தம்
பொல்லாங்கைத் தூற்றிப் பொசுக்கு        368

பெரியார்தம் கொள்கை பெரிததனைப் பாராச்
சிறியார்க் கறிவாவ தேது?                             369

அறிவினுக் கெட்டாத ஆக்கங்கள் உண்டு
செறிவறி வோடுசீர் தூக்கு                             370

Mar 7, 2021

மணிக்குறள் - 36. ஏறு தழுவுதல்

ஆண்மகன் வீரம் அதிலறிவோம் காக்கின்ற
மாண்புடையன் என்பாள் மகிழ்ந்து                     351

கன்னியர்க்கும் காளையர்க்கும் காதல் மணங்கூட
முன்னி முனைவாரிவ் வாட்டு                                352

வேலையே செய்வார்க்கு வேண்டிய ஊக்கமிந்த
காளை விளையாட்டால் காண்                             353

காளை சுறுசுறுப்பாய்க் காட்டும் விளையாட்டால்
காளையரும் காண்பார் நலம்                               354

முல்லை நிலத்தில் முதன்மை பெறுமாட்டம்
இல்லை யெனிலெங்கே இன்பு?                            355

சல்லிக்கட்(டு) ஆட்டம் தமிழரின் பண்பாடு
சொல்லிக்கட்(டு) என்றும் துணிந்து                    356

மஞ்சு விரட்டை மகிழ்வோடு கொண்டாட
நெஞ்சில் நிலைக்கும் நிறைவு                              357

விலங்கு வதையில்லை வீட்டுக்குப் பிள்ளை
துலங்கிக் களங்காண் துணிவு                              358

நங்காளை யோடுநாம் நாடியோ(டு) ஆட்டமிது
பொங்கும் இனிமையொடு போற்று                  359

நலவாழ்வின் தூணாகும் நம்நாட்டு மாடு
கலங்காது காத்தல் கடன்                                        360

Feb 28, 2021

மணிக்குறள் - 35. மீத்தேன் திட்டம்

மீத்தேன் எரிவாயு மீட்கும் எனச்சொல்லிப்
பாத்தேன் புகட்டுவார் பார்                                   341

மீத்தேன் எடுக்கின்ற மீட்சியிலாச் சூழ்ச்சியை
நீர்த்துவிடச் செய்தல் நலம்                                  342

மீத்தேன் எடுப்பதால் மீளா நிலமாகும்
காத்தல் நமது கடன்                                                343

ஈத்துவக்கும் ஈடில்லா இந்நாட்டை மீத்தேனால்
பேர்த்தெடுத்தால் பேரழிவு பார்                        344

கேடாள மண்ணைக் கெடுக்கின்றார் அந்தோஒ
நாடாள வந்த நமன்                                                 345

யாரோ பிழைப்பதற்காய் இந்நாட்டார் வாழ்வினை
வேரோ டழிக்கும் வினை                                      346

பரிசாம் இயற்கைப் படைப்பைத் தடுத்துத்
தரிசாக்கல் மூடத் தனம்                                       347

நெல்விளை நாடு நிலைகுலைந்து போவதோ?
கொல்கின்ற கொள்ளை வழி                             348

பணமாக்கும் எண்ணம் படுதோல்வி யுற்றுப்
பிணமாக்கும் பேரழிவு நேர்ந்து                        349

மூத்தோர் வழியில் முறையாய் விளைத்தலைக்
காத்தலே வாழ்வுக்குக் கண்                               350

Feb 21, 2021

மணிக்குறள் - 34. உழைத்து உயர்

உழைப்பினால் உண்டாகும் உள்ள நிறைவு
பிழைப்பினால் குற்ற உணர்வு                          331

உழைப்பினால் ஈட்டும் உயர்செல்வம் என்றும்
தழைத்தோங்கும் மேன்மேலும் சார்ந்து       332

உழைப்பால் உயர்ந்தார்க்(கு) உறுதுயர் இல்லை
மழையெனச் சேரும் வளம்                                 333

உண்மை உளத்தோ(டு) உழைக்கப் பெருஞ்செல்வம்
வண்மை வழங்கும் வளர்ந்து                             334

அறவழி ஓடி அரும்பணி யாற்றும்
நிறைவாளர் நீடுவாழ் வார்                                335

உடலுழைப்பும் உள்ளத் துழைப்பும் விளையக்
கடன்படா வாழ்வமையுங் காண்                    336

உழைக்கான் உடைமை உடைந்தழியும் காக்க
உழைப்பே உயர்ந்த உரம்                                  337

பிழைபடு நெஞ்சன் பிறன்பொருள் வௌவன்
தழைக்கா தழிவான் தளர்ந்து                          338

பிழைப்பென்று சொல்லிப் பிழைசெய்யும் நெஞ்சன்
சிறப்பழிந்து செல்வான் சிறை                        339

கையூட்டுப் பெற்றுக் கணக்கழிப் பாருக்கு
மெய்யூட்டும் காலம் வரும்                                340

Feb 14, 2021

மணிக்குறள் - 33. நட்பாய்ந்து நாடு

குறைவிலா நட்பைக் குணம்நாடிக் கொள்க
மறைவிலா வாழ்வுக்(கு) அணி                   321

துன்பத்(து) உதவிய தூய மனத்தானின்
அன்பை அறிதல் அறிவு                                     322

தேர்ந்து தெளியும் திறனுடை நெஞ்சினை
ஆர்ந்தேற்றுக் கொள்ளல் அறிவு                    323

நாடுவான் நாட்டத்தை நன்காய்ந்(து) அறிந்துபின்
கூடுவான் கோட லிலான்                                      324

செயலும் குணமும் தெளிவுற வாய்ந்து
நயக்க நனிவிருந்தாம் நட்பு                             325

துணையென நில்லான் துணைநா டுவதோ
இணையிலாத் துன்புக்(கு) இடம்                    326

இல்லாத துன்பம் இருப்ப தெனவாக்கும்
பொல்லானைத் தள்ளு புறம்                            327

பொறாஅ தவனைப் புறந்தள்ளி நிற்பான்
உறாஅன் துயர உலை                                             328

கொள்ளற்க கோடுவான் நட்பினை எஞ்ஞான்றும்
உள்ளற்க ஊக்கமிலான் சொல்                       329

உடன்பா டிலாத உளமுடை யாரைக்
கடந்து விடுதல் கடன்                                          330

Feb 7, 2021

மணிக்குறள் - 32. இன்சொல் உரை

வன்சொல் வழங்க வருந்துன்பம் யாவர்க்கும்
இன்சொல்லே இன்பம் தரும்                           311

நயம்படப் பேச நலனாகும் நாடான்
இயம்புவ தெல்லாம் இழிவு                              312

இன்சொலால் அன்றி இதயம் இணையாது
வன்சொலால் இல்லை வனப்பு                      313

வன்சொல் லுரைப்பார்க்கு வாழ்வில்லை தாழ்வில்லை
இன்சொல் லுரைப்பார்க்குத் தான்              314

வெல்வது போல்தோன்றி வேட்ட பொருளீந்து
கொல்வது வன்சொல் கொடை                     315

உடனிருந்து கொல்லும் உயர்விலா வன்சொல்
மடநெஞ்சே வேண்டாதே மாற்று                  316

நாவினிக்கப் பேசும் நலனுடை நெஞ்சினைப்
பாவினிக்கப் பாராட்டும் பார்                       317

என்செய லாயினும் என்றும் நலம்பெற
இன்சொல் லுரைத்தலே ஈர்ப்பு                     318

அன்புடையார் வாயமிழ்தம் ஆகுவ(து) இன்சொல்லே
நண்புடையார் நாட்டமும் அஃது                  319

சொல்லும் முறைமையால் சோர்வகற்றி எஞ்ஞான்றும்
வெல்லும் வழியளிப்பால் வேள்                    320

Jan 31, 2021

மணிக்குறள் - 31. நிலையாமை நெறிநில்

என்றும் பதினா(று) எனவியங் காதுடலம்
சென்று விடுமிளமை தேய்ந்து                          301

வளர்சிதை மாற்றம் வழிவழியாய் வந்து
தளர்ந்து விடுவ(து) உடல்                                    302

மெய்யென்பார் மெய்யென் றிராதே மெதுவாகப்
பொய்யாகிப் போவ(து) உடல்                          303

உடல்நலம் இல்லாயின் உள்ளபொருள் எல்லாம்
கடந்தேகும் சேரும் கடன்                                   304

பொன்னும் பொருளும் புதைப்பினும் நில்லாது
மன்னுமெனல் மண்ணாகிப் போம்               305

பொருள்தேடி ஓடிப் புதைப்பாரே வாழ்வை
இருள்தேடற்(கு) ஈடாம் இது                               306

ஏழ்வண்டிச் செல்வம் இருந்தாலும் நில்லாது
பாழ்வந்து போகுமே பார்                                   307

நேற்றிருந்த வாறு நிலைக்காத திவ்வுலகு
மாற்றமே மாறாத ஒன்று                                    308

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்துங்
கலந்தியக்கும் வாழ்விது காண்                      309

நிலையாமை யொன்றே நிலையான தென்றும்
நிலையறிந்(து) ஆணவம் நீக்கு                       310