May 23, 2021

மணிக்குறள் - 47. அருவி அழகில் ஆழ்

அருவுதல் என்னும் அருந்தொழி லாலே
அருவியெனப் பட்டாள் அவள்                     461

நீருக்கு வீழ்ச்சியோ நீர்வீழ்ச்சி என்னாது
பேருண்மைப் பேர்கொண்டு போற்று     462

அடடாவோ என்னே அழகாய் அருவி
நடம்போட்(டு) ஒழுகலைப் பார்                  463

உள்ளம் செலுத்தி உயர்ந்த மலைமீது
கொள்ளையிடும் பேரழகைப் பார்           464

ஓங்குமலை மீதிருந்(து) ஓடிவரும் பாடிவரும்
ஆங்குநடம் ஆடிவரும் ஆர்ந்து                    465

மலைக்காட் டருவியின் மாமகிழ்வைப் பாங்காய்
உளங்காட்டக் காட்டும் உயிர்ப்பு              466

அருவி வருநீர் அகவொழுக்(கு) ஆய்ந்து
கருதக் கிடைக்கும் கரு                                  467

காண்டற்குப் பேரின்பம் காணாது போமுன்றன்
நீண்ட துயரமும் நீர்த்து                                  468

அருவி அழகை அகந்தோய்ந்து காண
இருமையும் துன்பம் இரிப்பு                        469

ஆற்றலும் ஆற்றலும் ஆறும் ஒழுக்கமும்
போற்றிக் கொளக்கிடைக்கும் பொன்    470

No comments:

Post a Comment