Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10 (ஏருக்குச் சீர் செய்வோம்)

கவிஞர் அழைப்பு

கணினிப் பணியில் இருந்தாலும்
   கன்னல் மொழியில் பாவனையத்
தணியா ஆர்வத் துடன்கற்றுத்
   சந்தங் கொஞ்சும் மரபினிலே
மணியாய்ப் பாக்கள் தீட்டுமன்ப!
   மன்றம் நின்று கவிபாட
வணக்கம் சொல்லி அழைக்கின்றேன்
  வருக வெங்கள் தமிழ்மகனே!!

அரங்க மதிர அருங்கவி தருக!!

தமிழ் வாழ்த்து

எண்ணும் போதே என்னுள்ளம்
   ஏற்கும் இன்பம் இன்றமிழே!
பண்ணும் போதே பாதைகளைப்
  பரப்பி நிரப்பும் பைந்தமிழே!
கண்ணும் கருத்தும் உன்மீதே
  கவிதை செய்யப் பணிக்கிறதே!
மண்ணும் விண்ணும் நீயென்பேன்
  வளர்க்கும் தமிழே வாழியவே!

தலைவர் வணக்கம், அவையடக்கம்

செவியரங்கை மகிழ்விக்கும் செந்தமிழைப் பாடுகின்ற
கவியரங்கத் தலைமைக்குக் கனிவான வணக்கங்கள்!
புவியரங்கம் முழுதுள்ள பொற்கவிஞர் தாள்போற்றிக்
கவியரங்கம் வந்துள்ளேன் கருணையோடு வாழ்த்துகவே!

ஏருக்குச் சீர் செய்வோம்

கார்தூக்கி வளம்பரப்பக் காணரிய நிலையினிலும்
ஏர்தூக்கிப் பார்தூக்கும் எழிலாளன் ஏழையெனல்
வேர்தூக்க நீரூற்றா வெங்கொடுமை யாமன்றோ?
சீர்துக்கிப் பார்ப்பதற்காய்ச் சீர்துக்கிப் பாடுவமே!1

பாடுபடும் உழவனுக்குப் பருவங்க ளேமுதலாம்
ஊடுபனி எந்நாளோ? உயந்தகதிர் எந்நாளோ?
நாடுங்கண் நாள்பார்க்கும் நல்லமழைக் காலமெது?
தேடுவது கிடைப்பதற்குத் தெளிவான மனம்வேண்டும் 2

வேண்டுமவன் உள்ளத்தில் விலகாத உறுதி;மழை
வேண்டுமள விருக்கவேண்டும் விழியாகக் காத்திருக்க
வேண்டுமவன் விழிப்போடு காத்திருக்க வேண்டுமன்றோ?
தூண்டுமுளத் தெண்ணத்தாற் றுளியேனும் சுரக்காதா? 3

சுரக்காதா அமுதமெனச் சோர்ந்திருத்தல் சரியாமோ?
கரவாது கலப்பையினைக் கைப்பிடித்து நேர்நிறுத்திப்
பரப்புக!மண் படரட்டும் பலப்பலவாய் விளைச்சலினை
வரமாக வழங்கட்டும் வையத்தார் வாழ்வதற்கே! 4

வாழ்வின்றி அழிவதுவோ? வளமாக்க வேண்டியன
தாழ்வின்றிச் செயல்வேண்டும் தடையாக வந்தபெரும்
பாழ்படுத்தும் செயற்கையினைப் பதரெனவே துணிந்தெறிவோம்
வீழ்த்துகின்ற வீண்செயலர் வினையொடித்து நாம்நடுவோம்! 5

நடுவதியார் நடுவதியார் நாளெல்லலாம் திரிந்தலைந்து
கெடுவதியார் எனும்நிலைமை கெட்டழிந்து போகட்டும்
தொடுவதியார் சேற்றினையே தொடத்தயங்கு வோர்தம்மைத்
தொடுவதியார் சோற்றினையே எனத்தடுத்துப் புரியவைப்போம் 6

புரியவைக்கச் சிறுவயதே புதையலென வயல்வெளியில்
திரியவைக்க வேண்டுவது தேவையெனக் குரல்கொடுப்போம்
அரியவகை எனவாக ஆகுமுனே உணவெதுவென்(று)
உரியவகை எடுத்துரைப்போம் உழுவதுவே உயர்வென்போம் 7

உயரத்தில் இருந்(து)ஆளும் ஒண்கதிரோன் வாழியவே!
இயற்றுங்கை ஏற்கின்ற ஏர்க்கலப்பை வாழியவே!
உயர்வடைந்த உள்ளத்தான் உழவன்தாள் வாழியவே!
துயர்தீர்க்க வருகின்ற தூநீர்கார் வாழியவே! 8

வாழ்த்துப்பா !

ஏர்தூக்கும் எழிலோனைச் சீர்தூக்கிப் பாவடித்த
இக்கவிக்கு நன்றிசொல்வோம் வாங்க வாங்க !
ஊரறிய உறவறிய பாரறிய இவ்வரங்கில்
உள்ளன்பாய் வாழ்த்துகளைத் தாங்க தாங்க !!