பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
1. தமிழ்ப்பெயரிட விரும்பாத தமிழர்கள்
அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை யன்றி ஒன்றும் அறியேன்!
வடசொற் கலப்பின்றி அழகான தமிழ்ப்பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க, இக்காலத் தமிழர்களுக்குத் துணிவில்லை.
அழகாய்த் தமிழில் பெயர்வைத்தல்
ஆகா(து) என்றே திரிகின்ற
பழகாத் தமிழன் பெருமையெலாம்
பாருக்(கு) உரைக்க நான்வருவேன்
அழகே தமிழாம் அதைவிட்டெங்(கு)
அழகைத் தேடிச் செல்கின்றீர்
பழகப் பழகத் தான்தெரியும்
பழமும் பாலும் தமிழென்றே
முதலில் 'நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்கள்' என்பார்கள். ‘இரண்டு, மூன்று எழுத்துகளில் வருமாறு சிறிய பெயராக இருக்க வேண்டும்’ என்பார்கள். மூன்று எழுத்துகளுக்கு மேலுள்ள பெயர்களை வைத்தால் அவர்களது வாயில் நுழையாமல் போய்விடுமா? பெயர் புதுமையாக இருக்க வேண்டும் என்பார்கள். என்ன பெயர் சொன்னாலும் அது பழையதாக இருக்கிறதே என்பார்கள். தமிழ்மொழி பழைமையானதே என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் புதுமை என்று, பெயரில் எதிர்பார்ப்பதெல்லாம் ஷ, ஹ, ஜ, ஸ, க்ஷ, ஶ்ரீ என்ற ஆறில் ஓரெழுத்தாவது இருக்க வேண்டும் என்பதே. அப்படி அமைந்தாலும் அமையாவிட்டாலும், இணையத்தில் தேடி எப்படியாவது ஒரு வடசொல்லையே தேர்ந்தெடுப் பார்கள். மக்களுக்குப் புரிகின்ற எளிய தமிழ்ச் சொற்கள் எல்லாம் பழையதாய்ப் போய்விட்டன. புரியாத சமற்கிருதச் சொற்களெல்லாம் புதியதாய்த் தென்படுகின்றன. இப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழ்நாட்டின் நிலை.
"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று பேசுபவரை, 'நடைமுறைக்கு ஒத்துவராத ஏதோ செயலைச் செய்கின்றார்' என்னும் நோக்கில் நோக்கு கின்றனரோ? அந்நியத் தாக்கத்தால் அந்த அளவுக்கா வழக்கொழிந்து போய்விட்டது தமிழ்? பேச்சளவில் நின்றுவிடாமல், செயலில் காட்டுவோர் எத்தனை பேர்? தமிழா! எப்போது விழிக்கப் போகிறாய்?
தொல்காப்பியரும், நன்னூலாரும் சொல்லும் மொழிமுதல் எழுத்துகளை மதியாமல், சோதிடம் கூறுகின்ற மொழிமுதல் எழுத்துகளை ஏற்றுக் கொள்ளும் அந்த நொடியில், நீங்கள் தமிழர் என்பதை மறந்துவிடுகின்றீர்.
அங்ஙனம் மொழிமுதல் எழுத்துகளை மறந்து, சோதிடம் குறிப்பிடும் பெயருக்கான முதல் எழுத்துகளைக் கொண்டே பெயர்வைக்கும் பழக்கம் தோன்றியதும், அந்நிய ஆதிக்கம் மேலோங்கியதற்குக் காரணம் ஆகும். இப்போது தமிழில் பெயர் வைப்பது எப்படி எனக் கட்டுரை எழுதும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.
2. தமிழில் பெயர் வைப்பது எப்படி?
தமிழில் பெயரிட விரும்புவோர் பின்வருவன வற்றைக் கருத்தில் கொள்ளலாம்.
தமிழ்ச் சொல்தானா என்பதை உறுதி செய்ய, சொல்லின் வேர்ச்சொல்லைத் தேடிப் பாருங்கள்.
பெயர்ச்சொற்களுக்கான விகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழிலக்கியங்களில் இடம்பெற்ற பெயர்களின் அமைப்பையும் அழகையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மொழிமுதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், மெய்ம்மயக்கம் போன்ற விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
இவ்விதிகளை அடிப்படையாய்க் கொண்டு நன்னூலார் செய்த வடமொழியாக்கப் பகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஆகாரத்தில் பெயர் முடிவது, தமிழ்ப்பெயர் முறைமையாக இருக்காது என்பது என் எண்ணம். தமிழ்ச்சொற்கள் பலவற்றை வடமொழிப் படுத்த, இந்த ஆகார நீட்சி பயன்பட் டிருக்கிறது. இகரம், ஐகாரத்தில் முடிவது போலப் பெண்களுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம். எழிலி (இகர இறுதி); ஆதிரை, மேகலை (ஐகார இறுதி) என்பன போல.
3. 27 விண்மீன்களுக்கும் வரையறுக்கப் பட்டுள்ள தமிழ் எழுத்துகள்
தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டுச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது. சோதிடத்தில் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக்கொள்வது வழக்கம். அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலை இந்நூல் பரிந்துரைக்கிறது. சோதிட முறைப்படித்தான் பெயர்வைக்க வேண்டுமென்று எண்ணுவோர் இந்தப் பட்டியலைக் கருத்தில் கொள்ளலாம்.
கார்த்திகை | அ, ஆ, இ, ஈ |
உரோகிணி | வ, வா, வி, வீ |
மிருகசீரிடம் | வெ, வே, வை, வௌ |
திருவாதிரை | கு, கூ |
புனர்பூசம் | கெ, கே, கை |
பூசம் | கொ, கோ, கௌ |
ஆயிலியம் | மெ, மே, மை |
மகம் | ம, மா, மி, மீ, மு, மூ |
பூரம் | மொ, மோ, மௌ |
உத்திரம் | ப, பா, பி, பீ |
அத்தம் | பு, பூ |
சித்திரை | பெ, பே, பை, பொ, போ, பௌ |
சுவாதி | த, தா |
விசாகம் | தி, தீ, து, தூ, தெ, தே, தை |
அனுடம் | ந, நா, நி, நீ, நு, நூ |
கேட்டை | நெ, நே, நை |
மூலம் | யு, யூ |
பூராடம் | உ, ஊ, எ, ஏ, ஐ |
உத்திராடம் | ஒ, ஓ, ஔ |
திருவோணம் | க, கா, கி, கீ |
அவிட்டம் | ஞ, ஞா, ஞி |
சதயம் | தொ, தோ, தௌ |
பூரட்டாதி | நொ, நோ, நௌ |
உத்திரட்டாதி | யா |
இரேவதி | ச, சா, சி, சீ |
அச்சுவினி | சி, சூ, செ, சே, சை |
பரணி | சொ, சோ, சௌ |