Apr 25, 2021

மணிக்குறள் - 43. கீழ்மையகற்று

பொய்யுங் களவும் பொறாமையும் காமமும்
எய்யா நிலைக்கும் இடன்                                     421                              

எதுவோ எதுவோ எதுவு மிழைக்கும்?
மதுவே மதுவே யது                                                  422

குணங்குன்றி நிற்கக் குறையாற்றும் நெஞ்சு
குணங்குன்றக் குன்றலுங் குன்று                      423

ஒழுக்கம் இலாத ஒருசெயலும் ஒன்றா(து)
இழுக்கத்(து) இருத்தி விடும்                                 424

கீழ்மைக் குணமெலாம் கேடுறச் செய்தலான்
வீழ்வதற்கு வாழ்வாம் விதி                                   425

கோடியாய் நிற்கக் கொடிகட்டி யாண்டாலும்
கோடுளத்துக் கீழ்மை கொடிது                          426

வாழ்வுக் கணியாய் வகையா யமைந்தாலும்
தாழ்வுக் கிழுக்கும் தவறு                                      427

பிறன்பொருள் வௌவீஇப் பேராக்கங் கொள்ளல்
அறனன்(று) அழிவினுக்(கு) ஆறு                        428

வாழ்முறை யல்லன வாழ்வளித்தல் போலாகிப்
பாழ்முறைக்(கு) ஆக்கும் படி                               429

கீழ்மைக் குணமகற்றிக் கொள்க அருளுள்ளம்
வாழ்வாங்கு வாழும் வழி                                       430

Apr 23, 2021

முருகாதலம் - காரிகை - பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!

விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!

அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து 

செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே!             11


சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்

திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்

வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!

திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே!             12


சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி

உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!

உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)

அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே!             13


மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே

கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்

அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!

கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன்             14


கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்

வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ

கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்

தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே             15


தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!

இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்

நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த

பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே             16


பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை

அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்

பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்

வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே!             17


பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்

விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்

ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த

அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே      18


அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே

தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!

உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்

எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே!             19


எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே

பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்

இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்

தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20

(தொடரும்)

Apr 18, 2021

பைந்தமிழ்ச்செம்மல் 'ஆதிகவி' சாமி.சுரேஷ் அவர்கள்


கவிஞன் என்பவன் யாவன்? கவிதை என்பது யாது? எனும் வினாக்களை எப்போதும் நெஞ்சில் இருத்தித் தம் கவிதைகளை இணைவைத்துப் பார்க்க இயலாத மிக்க சொல்லாட்சியோடும், பசுமரத்து ஆணி போலப் பதிய வைக்கும் பொருளாழத் தோடும் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்ட கவிஞர்களுள் இவரும் ஒருவர். ஆதிகவி எனும் பெயருக்குப் பொருத்தமானவர்.

மின்னார் சிவனாரின் மென்றமிழின் வாணாளாய்ச்
சின்னவனே வாழ்வாய் சிறந்தோங்கி - நண்ணாரும்
சொல்லோடு வாழ்த்தட்டும் தூய நறுங்கவியே
பல்லாண்டு வாழ்க பணைத்து.!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர் உயர்திருவாளர் சாமி.சுரேஷ் அவர்கள்.

அவர் விழுப்புரத்தில் 1978-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் ந.சாமிக்கண்ணு - இராணி அவர்கள். அவருடன் பிறந்தோர் இரு தங்கைகள், ஒரு தம்பி ஆவர்.

அவர் தொழிற்கல்வியும் முதுகலை வரலாறும் படித்தவர். நடுவணரசின் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

அவருடைய துணைவியார் திருமதி மஞ்சு அவர்கள். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். மூத்தவன் சு.நதின் ஆதித்யா. இளையோன் சு.கவின் கிருஷ்ணா. திருக்குறள் பயிற்சியிலும் சிலம்பாட்டக் கலையிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகளின் பெயரிலிருந்தே ஆதிகவி எனும் புனைபெயருக்கு உரியவரானார்.

ஒரு முறை பைந்தமிழ்ச் சோலையின் சிந்துபாடுக பயிற்சியில் இவர் இயற்றிய

“பன்னிரு கைகள்கொண் டே - இங்குப்
பற்பல தெய்வத்தின் சிற்பமுண் டாம்
என்னிரு கைகளைத் தான் - நான்
எப்போதும் போற்றுவேன் தப்பில்லை காண்”

என்னும் கவிதையைக் கண்ட பாவலர் மா.வரதராசன் அவர்கள் மெய்சிலிர்த்துப் பின்வருமாறு பாராட்டினார்.

“பொறிதட்டும் ஒரு கவிதை; உசுப்பிவிடும் வீச்சு; கிளர்ச்சியைச் சொடுக்கும் புரட்சி; ஏனோ தாராபாரதி ஒரு நொடி மூளையில் பளிச்சிட்டார்.

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற தாராபாரதியின் வரிகளை நினைவூட்டியது இந்தக் கவிதை”

ஆம். இவரது கவிதைகள் மின்னல் கீற்றைப்போல் பளிச்சிடும். இசையோடு பாடல்களைப் பாடுவார். இவரது கவிதைகள் உள்ளத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வல்லமை உடையன. இதோ என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வரிகள்.

வானத்தி ருச்சுடர் முன்னே - மண்ணில்
வந்ததி ருத்தமிழ்ப் பெண்ணே - உன்னின்
வளமானவள் நிலமீதினில்
இலையேபுகழ் நனிமேவிய
வனப்பே - உயிர் - கனப்பே

தெளிவான அரசியல் பார்வையும் உண்மையும் பொய்ம்மையும் கலந்த ஊடகத்துறையினூடே உண்மையைத் தேடித் தொடரும் ஒரு தொலைநோக்குப் பார்வையும் உடையவர். இவரது பாடல்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் தொடர்முயற்சியன.

காட்டில்வாழு மிருகமெலாம்
காவலனாய் வந்து-நம்
கழுத்தறுத்துக் கொன்று-உடல்
காயவைத்துத் தின்று-அடக்
காவலாளி நானென்கும்
கனைத்தபடி நின்று

ஓட்டைவிற்றுத் தின்றதுதான்
உலகமகாக் கேடு - பின்
உருப்படுமா நாடு - நாம்
உணராவரை பேடு - பலர்
ஓலமிட்டும் உறங்குவதே
ஒண்டமிழர் பீடு

இவரது பாடல்கள் உள்ளெழுச்சி ஊட்டுபவை. செயல்படத் தூண்டுபவை. இதோ ஒரு சான்று:

உன்போல வேறாரும் இல்லை-நீயும்
ஒப்பிட்டுப் பார்த்தாலே ஓயாது தொல்லை
மின்மினி பூச்சிக்கு ஈடா-அந்த
விண்ணிலா சூரியன் நேரில்லை போடா.

‘உண்மைக் கவிஞர் உண்டோ?’ எனும் தலைப்பிலான இவரது எண்ணங்கள், கவிஞர்கள் தம்மையே ஆராய்ந்து பார்த்துக் கொள்ளத் தக்கதாகச் செவியறிவுறூஉவாக இடித்துரைப்பன.

ஈனக் கவலைகள் இறக்கி வைத்து
மானக் கவிஞ னென்பா ரிங்கே
ஈயச் சொல்லில் பொன்முலா மிட்டு
மாயச் சொல்லென் றுரைப்பா ருண்டு
கிழட்டுச் சொல்லில் உவமை கோத்து
முழக்குங் கவிஞர் முக்கா லிங்கே
காமப் புலம்பலைக் கவிதை யென்று
தேமச் சீரில் குழைப்பவ ருண்டு
கள்ளைக் குடித்துப் பெருத்த தொந்திபோல்
வெள்ளைக் காகித வெற்றுப் புலம்பலை
அள்ளக் குறைவிலா வட்சய மென்று
கள்ளச் சிரிப்புடன் கதைப்பவ ருண்டு
தொந்திப் பெரியவர் தோழமை யெண்ணி
சந்தி சிரிக்கிற சந்தங்கள் பாடும்
எந்த வறிவு மில்லாப் பேதையர்
இந்த மண்ணிடை எண்ணில வுண்டு
சாலை வழிகிற செந்நீர் தள்ளி
மாலை நிலவுக்கு மாலைக ளுண்டு
வட்டித் தொழிலுக்கு வந்தவர் போலும்
புட்டிப் பொருளுடன் பொருந்துவ ருண்டே
ஆளுங் காலைக் கழுவிக் குடித்து
நாளுங் கவிதைகள் நெய்பவ ருண்டு
சாதிச் சங்கத்தின் தாதிகள் வந்து
நீதிக் கவிதை நீட்டுவ துண்டு
பொய்யை மட்டுமே பொருளெனக் கொண்டு
மெய்யை விற்பவர் மெத்த வுண்டே
உண்மை மட்டும் உரைக்கும்
திண்மைக் கவிஞர் தரணியி லுண்டோ?

சிறப்பாகக் கவி புனைதலோடு சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவருடைய ‘முகிலில்லா வானம்’, ‘மொழியின் இடைவெளி’, ‘தீதும் நன்றும்’ ஆகிய சிறுகதைகள் தமிழ்க்குதிரில் வெளிவந்துள்ளன. கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ்களில் அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைப் பல்வேறு புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

மேலும், தமிழருவி மணியன் அவர்களின் காந்திய மக்கள் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பல்வேறு களப்போராட்டங்களில் முனைப்புடன் பங்கு பெற்று வருகிறார். சமூக நீதிக்கான போராட்டங்களில் கருத்து வேறுபாடு பார்க்காமல் மற்ற இயக்கங்களிலும் கலந்து கொள்கிறார். அரசியலில் காந்தியும் ஆன்மீகத்தில் ஓஷோவும் இரு கண்கள் என்னும் கருத்துடையவர் இவர். "நீ விரும்பும் மாற்றம் முதலில் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்" என்னும் மகாத்மா காந்தியடிகளின் மேற்கோள் இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

தொழிற்சங்கப் பணியோடு ஆவடி திண்ணூர்தித் தொழிலக முத்தமிழ் மன்றத்தின் மேனாள் இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். பைந்தமிழ்ச்சோலையோடு இணைந்து பயணிக்கும் அவர் கடந்த இரண்டாண்டுகளாகப் பைந்தமிழ்ச் சோலையில் பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் பெற்றுள்ள பட்டங்கள்:

• கவியருவி (தடாகம் இலக்கிய வட்டம், இலங்கை)
• பைந்தமிழ்ப்பாமணி (பைந்தமிழ்ச்சோலை)
• பைந்தமிழ்ச்செம்மல் (பைந்தமிழ்ச்சோலை)
• விரைகவிவாணர் (பைந்தமிழ்ச்சோலை)
• ஆசுகவி (பைந்தமிழ்ச்சோலை)
• காரைக்குடி வீறுகவியரசர் முடியரசனார் விருது,
• ஈரோடு தமிழ்ச்சங்க விருது- கவியொளி
• வானவில் பண்பாட்டு மையம் நடத்திய 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கவிதைப் போட்டியில் (சுமார் 700 கவிஞர்களில்) முதற்பரிசு.
• பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளை நடத்திய ஆண்டுவிழாச் சிறப்பு மரபு கவிதைப் போட்டியில் முதற்பரிசு.

இவர் தனது முதல் நூலான ‘தலைநிமிர்காலம்’ எனும் நூலை மார்ச்சு 21, 2021 அன்று வெளியிட்டார். இந்நூலை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி தங்கராஜ் அவர்கள் வெளியிட முதல் பிரதியை மதிப்பிற்குரிய நண்பர் திரு.அரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மரபு மாமணி பாவலர் வரதராசன் அவர்களும் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.ஹாஜா கனி அவர்களும் காந்திய மக்கள் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.பா.குமரய்யா அவர்களும், ஆவடி தமிழ்ச்சைவப் பேரவைத் தலைவர் திருமதி கலையரசி நடராசன் அவர்களும் ஆவடி எழில் இலக்கியப் பேரவைத் தலைவர் திரு.எழில்.சோம.பொன்னுசாமி உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.

'நண்பர் சாமி சுரேஷ், பாவேந்தர் பாரதிதாசன் பாசறை தந்த சிந்தனைகளால் செதுக்கப்பட்டவர் என்பதை அவருடைய பல்வேறு கவிதைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றன, தமிழ் வளர்த்தெடுத்த பாவினங்கள் அனைத்தையும் இவர் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் வியப்பு மேலிடுகிறது' என்று தமிழருவி மணியன் அவர்கள் வாழ்த்துகிறார்.

பேச்சில் சுவைகூட்டி இனிக்க இனிக்கப் பேசும் பேராண்மை கொண்டவரான தமிழறிஞர் பைந்தமிழ்ச்செம்மல் “ஆதிகவி” சாமி.சுரேஷ் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய உவகையுடன் வாழ்த்துவோம்.

நீதியொளிர் செங்கோலைக் கையில் தாங்கி
   நெறிசொல்லி ஆள்கின்ற மன்ன னாக
மேதினியை மேன்மைமிகப் படைக்க வேண்டி
   வெல்கின்ற ஆற்றலொடு வெல்லம் போன்ற
சேதிசொல்லிச் செம்மைசெயும் எழுது கோலைத்
   தன்கையில் தாங்கியவர் நயமாய்ப் பாடும்
ஆதிகவி சாமிசுரே(சு) ஐயா வாழ்க!
   அவையதிரும் கவிசொல்லும் அனலே வாழ்க!
                                                - தமிழகழ்வன் சுப்பிரமணி

மணிக்குறள் - 42. ஆற்றுவளமே சோற்றுவளம்

உயர்மலையில் ஊற்றாய் உருக்கொண்(டு) அருவிப்
பெயர்விளங்கிச் சீர்நிறுத்தும் நீர்                      411

ஓடும் வழியில் உயர்செல்வம் தேடிக்கொண்(டு)
ஆடும் அரவமொ(டு) ஆங்கு                                 412

ஆறமைத்துச் செல்லும் அழகிய பண்பினால்
ஆறெனவே ஆனாள் அவள்                                  413

ஆற்றின் அருநீரால் ஆயது நாகரிக
மாற்றம் மனிதனின் வாழ்வு                                414

ஆற்றுநீ ரில்லையேல் ஆகுமோ மாமருதம்?
வேற்றுமை யின்றி விரும்பு                                  415

இயற்கையின் சீர்நிலைக்(கு) இன்றி யமையா
முயற்சி யுடையாள் அவள்                                   416

ஆற்றுவளங் காத்தல் அழிவில்லா வாழ்வீயும்
சோற்று வளத்திற்குத் தூண்                                417

ஆறின்றிச் சோறில்லை ஆக்கங்கள் ஏதுமிலை
ஊறின்றிக் காத்தல் உறவு                                   418

பல்வகைத் தாவரம் பல்லாண்டு வாழ்ந்திருக்கும்
நல்வரம் ஈயும் நமக்கு                                            419

ஆற்றுநீர் தேக்கி அணைத்துப் பயன்கொள்வோம்
போற்றுவோம் பொன்னி புணர்ந்து                420

Apr 17, 2021

சின்ன கலைவாணர் விவேக்

மீட்சி யொளியாய் விவேக மனங்கொண்டார்
மாட்சிமை போற்றும் உலகு                                    1

சின்ன கலைவாணர் சிந்திக்க வைத்தினிக்கும்
கன்னலாய்ச் சேர்த்தார் சிரிப்பு                             2

சான்றாய்த் திகழ்ந்தார் சமுதாயம் முன்னேறத்
தோன்றுகோள் கொண்டார் தொடர்ந்து            3

பொதுநோக்கு நோக்கிப் புதையலைத் தோண்டி
இதுநோக்கென்(று) இட்டார் மரம்                         4

சிந்திக்க வைத்துச் சிரிக்கவும் வைத்தார்நம்
சிந்தைக்குத் தந்தார் வரம்                                       5

நகைவகை நான்கும் நயமாய் நிறுத்தித்
திகைக்கச் செயல்பட்ட தேன்                                6

காட்சியின் மாட்சியில் மீட்சிகொள் நெஞ்சமே
ஆட்சியில் நின்றார் அணைத்து                            7

அடாதன பேச அடாதன ஆகும்
விடாதெடுத்துக் காட்டி யவர்                                  8

உள்ள மிருந்தால் உயர்ந்தன செய்யலாம்
தெள்ளத் தெளிவாக்கி னார்                                    9

பொன்னுடல் நீங்கிப் புகழுடல் தாங்கினார்
தன்னுட லாய்மரங்கள் சான்று                                10

Apr 11, 2021

மணிக்குறள் - 41. நாமிருவர் நமக்கிருவர்

வளமான வாழ்வுக்(கு) அடிப்படை யாவ(து)
அளவான நற்குடும்ப மே                                     401

பன்னிரண்டு பெற்ற தலைமுறை செல்வமின்றி
இன்னலில் வாழ்ந்தது காண்                              402

மக்கள் தொகைபெருக மாவளங்கள் போமிங்குத்
தக்கவாழ் வில்லை தடு                                        403

நமக்கிருவர் போதுமென நாம்கட்டுக் கொள்வோம்
நமக்கதுவே நன்மையாம் நாடு                        404

பொறுப்பின்றிப் பெற்றுப் பொருளின்றி வாழ்தல்
வெறுப்புக் கிடனாம் விலக்கு                             405

நற்குடும்பக் கட்டுப்பா(டு) ஓர்ந்து நலங்கொள்க
பொற்குடும்ப மாய்வாழ்க பூத்து                     406

பெருகிய மக்கள் தொகையால் வளமும்
பொருளும் சுருங்குதல் காண்                            407

இன்பமிகு வாழ்வுக்(கு) இரண்டே பெறல்நன்று
துன்பம் விடாமுயற்சி இங்கு                               408

அளவின்றிப் பெற்றெடுத்தல் ஆய வளமன்(று)
உளத்திருத்தி வாழ்க உயர்ந்து                           409

ஆண்டாண்டு கூட்டுவார் ஆண்வேண்டும் என்றிருப்பார்
ஆண்டவா அவ்வுளத்தை மாற்று                       410

Apr 4, 2021

மணிக்குறள் - 40. நாட்டு மருத்துவத்தை நாடு

நாடுக நாட்டு மருத்துவம் நோயின்றிப்
பாடுக பண்பாட்டைக் காத்து                               391

மூலிகை கண்டாய்ந்து முத்தாகச் சேகரிப்போம்
வேலியாய்க் காக்கும் உயிர்                                  392

புத்துணர்வு பூக்கப்பூ மாதேவி தானீந்த
அத்தனையும் நாடல் அறிவு                                  393

உணவே மருந்தாம் உணரப் பயக்கும்
பணம்வேண்டா வேண்டு நலம்                           394

வருமுன்னர்க் காக்கும் வகைமை வகுத்தார்
அருமை யுணரல் அறிவு                                         395

இயற்கையோ டொன்ற இனிதாக வாழ்வாம்
துயர்நீக்கும் நாட்டு மருந்து                                 396

பச்சிலை நாடிப் பயன்கொள்வோம் ஆய்ந்தீந்தார்
மெச்சுவோம் மேன்மை யறிந்து                       397

நாட்டு மருத்துவம் வீட்டு மருத்துவமாம்
பாட்டியின் கையில் பலன்                                  398

தாவரங்கள் தாமீயும் தாவா வரங்கொள்ளச்
சாவருமோ? வாழ்வாய் தழைத்து.                   399

திருமுருகத் தெய்வம் திருந்தியவாழ் வீயும்
மருத்துவ மாமணியாம் வாழ்த்து.                   400