Apr 4, 2021

மணிக்குறள் - 40. நாட்டு மருத்துவத்தை நாடு

நாடுக நாட்டு மருத்துவம் நோயின்றிப்
பாடுக பண்பாட்டைக் காத்து                               391

மூலிகை கண்டாய்ந்து முத்தாகச் சேகரிப்போம்
வேலியாய்க் காக்கும் உயிர்                                  392

புத்துணர்வு பூக்கப்பூ மாதேவி தானீந்த
அத்தனையும் நாடல் அறிவு                                  393

உணவே மருந்தாம் உணரப் பயக்கும்
பணம்வேண்டா வேண்டு நலம்                           394

வருமுன்னர்க் காக்கும் வகைமை வகுத்தார்
அருமை யுணரல் அறிவு                                         395

இயற்கையோ டொன்ற இனிதாக வாழ்வாம்
துயர்நீக்கும் நாட்டு மருந்து                                 396

பச்சிலை நாடிப் பயன்கொள்வோம் ஆய்ந்தீந்தார்
மெச்சுவோம் மேன்மை யறிந்து                       397

நாட்டு மருத்துவம் வீட்டு மருத்துவமாம்
பாட்டியின் கையில் பலன்                                  398

தாவரங்கள் தாமீயும் தாவா வரங்கொள்ளச்
சாவருமோ? வாழ்வாய் தழைத்து.                   399

திருமுருகத் தெய்வம் திருந்தியவாழ் வீயும்
மருத்துவ மாமணியாம் வாழ்த்து.                   400

No comments:

Post a Comment