Sep 10, 2023

நான் ஏணி பேசுகிறேன்

கவியரங்கத் தலைவர் வணக்கம்

யாப்புக் கென்ன குறையிங்கு?
   யாரும் கவிஞர் ஆகிடலாம்
தோப்புக் குள்ளே பலகுயில்கள்
   தோன்றும் வண்ணம் ஊக்கிடலாம்
காப்புக் காடாய் விளங்குகின்றார்
   கலைகள் வளர்க்க முனைப்புடனே
சேர்ப்புச் செய்வார் செம்மலவர்
   சேலம் பாலன் வாழ்கவையா!

அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏற்றி விட்ட ஏணியினை
   இனியும் வேண்டா என்றுரைப்பார்
எட்டி உதைப்பார் உதைத்தாலும்
   என்றன் மக்கள் இவரன்றோ?
காற்றில் விட்ட பட்டமது
   கயிற்றை அறுத்துப் பறக்குமன்றோ?
கண்கள் தூசு பட்டதுமே
   கண்ணீர்க் குளத்தில் தவிக்குமன்றோ?
மாற்றம் வாழ்வைப் புரட்டிவிடின்
   மக்கள் மனங்கள் திருந்துமன்றோ?
மற்றும் ஓர்வாழ் உள்ளதென்று
   மானம் துறந்து வழிசேரும்
ஊற்றி னைப்போல் பெருக்கெடுக்க
   உடைய இடமே சேருமன்றோ?
உண்மை உடைமை எதுவென்றங்(கு)
   உள்ளம் தெளிவு பெறுமன்றோ?                  1

எண்ணி எண்ணி உளம்நிறைத்தேன்
   ஏணி ஆனேன் ஏற்றிவிட்டே
எனக்கோ இன்னும் ஏமாற்றம்
   ஏனோ இந்தத் தடுமாற்றம்?
நண்ண வேண்டும் நல்வழியை
   நாளும் உணர்ந்து கைக்கொள்ளேன்
நட்டார் நலனே நலனென்று
   நட்ட மரமாய் நான்நின்றேன்
கண்ணே மணியே எனப்போற்றி
   கருத்தை அகத்தே நன்றேற்றிக்
கடலே அன்ன தமிழுணர்த்திக்
   கவிழ்ந்த கலமாய் ஆனேனே
அண்ணற் கெளிதா யகம்விளைத்தும்
   அண்ணல் என்றே பேர்பெற்றும்
அன்பே என்றன் வழியென்றும்
   அற்றேன் வாழ்க்கை பிறர்வாழ!                  2

என்றன் வாழ்க்கை இயல்பறிந்தார்
   என்றன் உள்ளப் பொருளுணர்ந்தார்
இன்றும் இல்லை இனியுமில்லை
   என்னும் நிலைமை வாராது
நன்றே உலக நலன்கருதி
   நலமே விளைக்கும் செவியுள்ளார்
பொன்றும் துணையும் வாழ்ந்திருப்பார்
   புவியில் புனிதர் பேறுபெற்றே
அன்றும் இன்றும் எப்பொழுதும்
   அறமும் பொருளும் நனிவிளக்கி
அகிலம் காக்கும் இலக்கியத்தை
   அள்ளிப் பருகி நலம்வாழ்வோம்
கன்று தாயை மறப்பதில்லை
   கவிதை அறத்தை மறப்பதில்லை
கவிஞன் உலகை வழிநடத்திக்
   கடமை செய்தல் வாழ்வாகும்                     3

Sep 1, 2023

ஓ! ஏணியே!

ஓ! ஏணியே!
ஏன் நீயே
உன்னைக் குறைத்து மதிப்பிட்டு
உடைந்து போகிறாய்?

வாழ்வின் ஏற்றங்கள் எல்லாம்
வகைவகையாய் வந்துசேர
ஊற்றுப் பெருக்காய்
உடையன தருகிறாய்!

ஏணியென வாழ்ந்துவிட
ஏற்றுக்கொண்ட வாழ்விலே
ஆணியெனப் புதைந்துவிட்ட
ஆற்றலை எல்லாம்
வெளிக்கொணர்ந்து
மாற்றங்கள் பலவரினும்
மாறாதது ஏணியென
மார்தட்டுவதில்
மண்ணுக்கும் பயனில்லை

மாற்றத்தை ஏற்காத
வசதியான இடம்
சதியான இடம் என்பதை மறவாதே

எதிர்பார்ப்புகளால்
ஏமாற்றங்கள் ஏற்படுவது
இயற்கைதான்
எதிர்பாராமல்
என்னத்தை மாற்றிவிட முடியும்

மாற்றம் வேண்டுவார் மனத்தில்
குறிக்கோள் எனும் எதிர்பார்ப்பு வேண்டும்.