Jul 19, 2014

என்ன சொல்ல வந்தாய்?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்ன சொல்ல வந்தாயென்
  நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
   ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
    சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
    யானுறக் கந்தான் கொள்வதுவே?

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 17, 2014

மனப்போக்கு

      எனக்கென்ன பாட்டெழுதத் தோன்றிடினு மாங்குமுன் வந்தமையு மருஞ்சந்தமு மதற்கேற்றாற்போ லமையுஞ் சொற்களு மச்சொற்களின் பிரிதன்மைப் பொருளுஞ் சேர்தன்மைப் பொருளு மாங்காங்கே விரவி யகத்தின்மகிழ்வைச் சேர்த்தழகு பார்க்கு மருந்தமிழே வுனையல்லால் வேறுயாரை யென்னுள்ளே யெப்போது மெண்ணிக் கொண்டிருப்பேன்?
    எக்காலு முன்னையே யெண்ணி யெண்ணி மகிழ்வுகொண்டிருக்கு மிவ்வுயிர் செய்த தவப்பயன்றா னென்ன? ஏதுமிவ்வுலகில் வேண்டாமென யெண்ணு மளவுக்கென் னுள்ளத்தை வயப்படுத்தி யேதோ வுளறுகிறே னென்றுபிற ரெண்ணு மளவுக்காளாக்கி விட்டனை. இதற்கியா னின்பங் கொளவா துயர்கொளவா யென்பதைப் பற்றியு மெண்ணுதற் கென்மன மொப்பவில்லை.

Jul 15, 2014

சீர்குலைவு

முதல்வரி மட்டுமே நினைவில் நிற்க, மற்ற வரிகளையும்தேடி மகிழ்வோம் என்று இணையத்தளத்தில் தேடிக் கடுப்பாகிவிட்டேன்.

ஒருபாடலைத் தேவைக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் மாற்றி எழுதிக் கொள்(ல்)கிறார்கள். இன்னும் விரிவாக அதனை எழுதி, அதைப் பெருமைப்படுத்துகிறார்களாம். ஒருபாடலை, அதனுடைய சந்தத்திலேயே எழுதுதலும் படித்தலும் எவ்வளவு இனிமை என்று அறியாத அறிவுக்கொழுந்துகளின் கண்ணியமான செயல் இது. ஒருபாடலை - அதனுடைய கட்டமை
ப்பை - அதனுடைய இலக்கணத்தைக் குலைக்காமல் இருப்பதற்குச் சீரும் தளையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவுச்சுடர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை இது.

பாரதியின் பாட்டையே கொஞ்சம் மாற்றி எழுதி, அவருக்கே வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.

போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!

பாரதி உயிரோடு இருந்தால் மீண்டும் இறந்திருப்பார். என்னடா இது, சீர்களும் அவற்றோடு ஒட்டி உறவாடும் சந்தமும் சரியாக இல்லையே எனத் தோன்றியது. மீண்டும் மீண்டும் படித்துச் சந்தத்தில் கொண்டுவர முயன்று கடுப்பாகிவிட்டேன்.

சரியான பாடல் எது என்பதில் எனக்கு இப்போது ஐயம் தோன்றுகிறது.

போற்றி போற்றியோ ராயிரம் போற்றிநின்
   பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
   செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
   துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதர சேயெங்கள்
   சாதி செய்த தவப்பயன் வாழிநீ!

இந்த வரிகளும் சரிதானா?

இன்னொரு பாடலும் இங்ஙனம் சீர்குலைந்தது எனக்கு நினைவிலிருக்கிறது.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஒருவெண்பாவின் ஈற்றடியில் எத்தனை சீர்கள் இருக்கவேண்டும் என்பதைக்கூட உணராமல், எப்படி மாற்றி இருக்கிறார்கள்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

Jul 10, 2014

சேர்த்தெழுதுதலி னினிமை

நீடாழி யுலகத்து மறைநாலோ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன்
கோடாக யெழுதும்பி ரானைப்ப ணிந்தன்பு கூர்வாமரோ

                                                  - மகாபாரதம்

இங்ஙனஞ் செய்யுற்றமிழிலு முரைநடையிலுஞ் சேர்த்தெழுதிப் பழகுதல் மனத்திற் கெவ்வள வினிமை நல்குகிறதென்பதை யாரிடம்போய் யான்சொல்வேன்.

என்றோழி யெனக்கென்றன் பிள்ளைக்கால் பயில்தமிழை
நன்றாக நினைவுறுத்தி நலமின்பங் கொளச்செய்தா - ளவள்
நன்றாக யிவ்வுலகம் போற்றிடவே வாழ்கவென
நெஞ்சார வாழ்த்துகிறேன் வேறென்ன யினிதுலகில்

                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 5, 2014

என் புதிய தோழமைக்கு ஒரு சிறுபரிசு

நேரிசை வெண்பா

உள்ளத்தேன் மாமொழியை யோரா வளவிற்குக்
கொள்ளத்தேன் சொற்பேச்சுத் தோழமையே - வெள்ளத்தேன்
உள்ளத்தான் வெண்பாவை வெண்பாவைக் கேயளித்தே
கொள்ளுவன் கொள்ளாவின் பம். 
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 3, 2014

செய்யுள் உணருரை

செய்யுளாய் இருந்த என்னை
உரைநடையாய் உருமாற்றி
உன்னளவுக்கு இறங்கிவிட்டேன்
என்னளவுக்கு இரங்காமல்
செய்யுளாகவே இரு
வேண்டாம் இந்த உரைநடை என்று
ஏன் என்னைக் கொல்கின்றாய்?

உனக்கும் எனக்குமான தொலைவு
சீர்மிகுந்த செய்யுளுக்கும்

சீர்மைதேடிப் பெயரும் உரைநடைக்கும்
இடைப்பட்டதாகக்

கணத்திற்குக் கணம் கூடிக்கொண்டே போகிறது

நான்
மனிதக் கணத்திற்கு உட்பட்டவன்தான்
எங்கிருந்தும் அருள்புரியும் மாதேவன் அல்லன்
நான் எங்கிருந்தும்
எங்கும் நிறைந்தவளாய்

உன்னைக் காண்பதே
என் பொழுதுபோக்காகிப் போனதன்பின்

அடங்கிய மனத்தான்
தொடங்கிய தவத்தான்
அத்தவம்
உன்னைப்பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது
உன்னை என்மனம் பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது

எந்த ஆணியும் வேணாம்
என்னும் உன்னெண்ணம்
இந்த ஆணும் வேணாம்

என்றும் சொல்கிறது

வந்துவிடப் போகிறது
வாயில் ஏதேனும்
என்றவளே
வெந்துவிடப் போகிறது

என்மனம் என்று
ஏன் உனக்குப் புரியவில்லை

அகந்தைக் கிழங்கு
அகழ்ந்தாகி விட்டது
ஆனால்
அகம் தைகிழங்கு

ஆழத்தில் புதைந்துகொண்டே போகிறது

அகச்செய்யுள் ஆழ்ந்து அமர்ந்தவளே!
அதனுரையை உணர்வாயோ?
 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 1, 2014

வரலாறு பேசணும்ல...

தரவு கொச்சகக் கலிப்பா

என்வீட்டுச் சிறுபூட்டே ஏனுடைந்தாய் எதிர்பாரா
தின்றென்னைச் செலவிட்டே இன்னுயிர்நீத் தனையெனக்குச்
சொன்னிறையாச் செலவீட்டு வஃதெவ்வா றுணர்ந்தாயோ?
என்றாலும் இத்தனைநாள் எனைக்காத்தாய் நீவாழ்க!
                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்