Mar 29, 2014

அருணா நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

மங்கலச் செல்வி! மரகதக் கல்நீ!
மங்கையர்க் கரசி மதிநிறை வாணி
திங்கள் வதனப் பேரொளிப் பொற்கிழி
சங்கம் நிறைதமிழ் மதுரைப் பைங்கொடி
பொங்கும் உள்ளம் பூரிப் பாலே!
மங்கை உன்மொழி செவிகேட் டாலே!
பேறுகள் பலவும் பெற்று
நூறாண் டுகள்மகிழ் வோடு வாழ்கவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

உணரா மனமே உமராய்!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உணரா மனமே உமராய்!
    உணர்ந்த னைமனத் தமராய்!
கணந்தான் பொருந்து வரமாய்!
    கணத்தில் உணர்ந்த வருமாய்!
குணக்குன் றேகோ மானே!
    குணமே குன்றா மானே!
எணமொன் றிட்ட திடரே
    இலாது யர்வே திடமே!
   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கிளர்ச்சி

கலிவிருத்தம்

நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தை
சுருக்கென் றுரைக்கும் சோம்பல் முறிப்போர்க்குக்
கருக்கென்று பெருகிக் கொட்டும் மழைபோல்
கருக்கொள் மனத்துள்! காலம்நம் கையில்
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நம்பிக்கை

கலிவிருத்தம்

விரலே நீயாய் விரவியே வாயால்
மிரளும் பெண்ணே! முரலும் வண்டே!
கவலை விலக்கிக் கலைத்திறம் பழக்கிக்
கவினால் கலக்க அகிலம் உனக்கே
    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தானறியாது ஆனவள்

தரவு கொச்சகக் கலிப்பா

தானறியா தானவளே தானறியா வாணவனுள்
தானறியச் சொல்வானேன் தானறியா தானதன்பின்
தானறிவன் தன்னுள்ளே தானின்றித் தானொன்றா
தானவனைத் தானவனாய்த் தான்கருதித் தகர்த்தாயோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய :
தான் அறியாது ஆனவளே, தான் அறியா ஆண் அவனுள்.
தான் அறியச் சொல்வான் ஏன், தான்  அறியாது ஆனதன்பின் ?
தான் அறிவன் தன்னுள்ளே தானின்றித் தான் ஒன்றாது ஆனவனைத் 
தானவனாய்த் (அரக்கனாய், பகைவனாய்) தான் கருதித் தகர்த்தாயோ? 

திருச்சிற்றம்பலம்

கலிவிருத்தம்

ஐந்துநி மிடங்கள் அகிலம் மறந்தே
ஐந்தடங் கொருவன் அகிலத் தானை
சிந்தையில் சேர்த்த செம்மை நலமே
அந்தமஃ தில்லா ஆனந் தம்மே!
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வருத்த வெண்பா

குறள் வெண்பா

என்செய வென்செய லென்செய் யதனுளே
புன்செய லென்செயு மா?
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
என்செய - என்ன செய்ய
என்செயல் - என்னுடைய செயல்
என்செய்யதனுள் - வேலை செய்யும் துறையில், அலுவலகத்தில்
புன்செயல் - பயனற்ற செயல்
என்செயுமா? - என்று ஆகுமா?

சுரேஷ் சங்கர் (பிறந்தநாள் வாழ்த்து)

கலிவிருத்தம்

செய்தக செய்துசேர் செம்மைச் செம்மல்!
பெய்தக வன்புளப் பெற்றி பெற்றனை!
உய்தக வழியுரை உயர்வு முற்றினை
எய்தக மொழிசொலி எழுத லாகுமோ?


வழிநேர் தடைகள் தடக்கல் எனவாம்
விழிநேர் துயர்கள் துடைத்தே வழிசெய்
நதிக்கண் பொதிந்துள வினிமை போல
உதித்தவன் வாழிய! சகல வாழிய!

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 25, 2014

நாயகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

நாய்காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
       நாயகனோ மும்முரமாய் வேலையிலே
தோய்மனதாய்த் துவண்டிருந்து முடிந்தபினே
      துரிதமுடன் அடியெடுத்து வைத்தாரே
வாயிற்படி கடந்தபினே நினைவுக்கு
     வசப்பட்ட பகலுணவுப் பாத்திரத்தைப்
போயெடுத்துப் பின்சென்றார் ஆனாலும்
      நாயினினை வெப்போதும் மறக்கவில்லை
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Joao Lima Neto (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை வெண்பா

ஜாஅஓ லீமாநீட் டோ!ஜெயம் கொள்மின்!வாழ்
காஅ வளத்துடன் எந்நாளும் - மாஅ
மனித! நிரல்நிறை பேரறி வாள!
தனித்துவ! வாழிய வே!

                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Hi Joao!
Wish you all success in your life!
Live a healthy & wealthy life!
Live like a king!
Live happy with your great knowledge!
Live great!

Mar 24, 2014

தமிழ்ப்பண்

குறள் வெண்பா
பொருட்பின்வருநிலையணி

இசைவேய் கழையோ? கவிதோய் கவினோ?
நசையார் நயத்தமிழ்ப் பண்.

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தமிழ்

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணமெலாம் நீயே! என்னருமைத் தமிழ்க்குழவீ!
வண்ணமெலாம் பாடுதிறம் வாய்க்கவில்லை என்றாலும்
கொண்டவரை நானுனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
அண்டமள வென்னெஞ்சை ஆட்கொண்டாய்! நீவாழ்க!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கண்மணி

தரவு கொச்சகக் கலிப்பா

நென்னலே நானுணர்ந்தேன் நற்றமிழின் அரும்பாவாய்!
சின்னதொரு விளையாட்டாய்ச் சினங்கொண்டீர் எனநினைந்தேன்.
இன்னலிலை தப்பில்லை 'சரிசாரி அந்தாதி'
உன்றனுடை மறுமொழியும் வியக்குநயம் வாய்த்ததுவே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நான்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னைப் பற்றி யானென்ன சொல்ல?
எனக்கிடம் தமிழுக்குள் புன்னுனி போதும்
எனக்குள் தமிழுக் கிடமிஞ்சும் இமயம்
பள்ளிப் பருவ நாட்களில் தமிழே
துள்ளிவிளை யாடத் துணைவந்த நண்பன்
அவனுள் விளைந்த கலிப்பாத் துள்ளலால்
கவனம் முழுதும் கவர்ந்தவ னானான்
எனக்கென் னிறைவன் புரிய வைத்தான்
'மனத்திற் கினிமை தனித்தமிழ் சேர்க்கும்'
கல்லூரி சென்றதும் பிரிவு கொண்டேன்
அல்லல் கொண்டேன் அருந்தமிழ் நண்பன்
பிரிந்துவிட் டானே என்றே அரற்றினேன்
உரிமை எனக்கிலை உறவை அறுத்ததே
இளந்தொழில் நுட்ப வியலில் மூழ்கினேன்
இவ்வாண் டில்லது இறுதி பெற்றது
கலையும் தொழிலும் கந்தன் அருளினான்
கலக்கம் தவிர்த்துக் களிப்பு கொண்டேன்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரியாவிடை

வேகமாய் ஓடிய காலங்கள்
வேதனை நெஞ்சில் கோலங்கள்               1

கொடுமை வார்த்தைச் சிதறல்கள்
கொண்டவன் நெஞ்சப் பதறல்கள்             2


இல்லை இனியே என்றாலும்
வாரா இனியும் அந்நாளும்                           3

ஒருவனை ஒருவன் ஓட்டுதலும்
கோபம் மகிழ்ச்சி காட்டுதலும்                   4

நெஞ்சம் தொட்ட பேச்சுகள்
நேயம் வைத்த மூச்சுகள்                             5

நேரில் காணல் இனியரிது
பாரில் இக்கொடு மைபெரிது                     6

உணர்வுப் பூர்வச் சிந்தனைகள்
உடனே அவற்றின் நிந்தனைகள்            7

களிக்கும் வகுப்பு இனியமைதி
கண்களில் நீரின் நினைவிறுதி               8

கூடி வாழ்ந்த பறவைகள்
தேடிச் செல்லுதே பலதிசைகள்              9

குன்றின் தீபச் சுடரொளிகள்
குவலயம் எங்கும் படரொளிகள்            10

கூட்டச் செறிவு மேகங்கள்
குளிர்ந்த மழைத்துளித் தூறல்கள்         11

வேடிக்கை நிந்தனை விளையாட்டு
வீரியப் படிப்பு இனியில்லை                    12

கண்களைத் திறந்தே உறங்குதலும்
உறங்காக் கனவும் இனியில்லை            13

எல்லாம் எல்லாம் முடிந்ததுவே
இன்னொரு பொழுதும் விடிந்ததுவே    14
          - தமிகழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பாரதியார்

பாரு தம்பி பாரப்பா
    பாரதி யாரைப் பாரப்பா
கேளு தம்பி கேளப்பா
    பாரதி சொல்லைக் கேளப்பா

பாரதி யாரோ?  அருந்தமிழர்
    பாரத விடுத லைக்கவிஞர்
சாரதி என்றால் மிகையாகா;
    தமிழ்த்தேர் ஓட்டும் பெருந்தமிழர்

இளமை வயதே கவித்தமிழை
    இனிமை என்று கருதியவர்
இளமை யில்பா ரதியானார்
    இவர்பார் அதிசின் னப்பயலோ?          

பாப்பா பாட்டு பாடினார்
    பாழும் அடிமை சாடினார்
பாரத விடுதலை நாடினார்
    பெண்ணின் விடுதலை தேடினார்           

விடுதலை அவர்தம் உயிர்மூச்சாம்
    உயர்ந்த தமிழே அவர்பேச்சாம்
கொடுந்தளை அடிமைத் தனமெல்லாம்
    கும்பிட்டு விட்டோ டிப்போச்சே                

கண்ணன் பாட்டும் குயில்பாட்டும்
    கவித்தமிழ்ச் சோலையின் எழில்பாட்டாம்
பண்ணெனும் இசைப்பா வல்லவராம்
    பறவைகள் பாசமும் சொன்னவராம்

சிந்துப் பாவில் புதியதமிழ்
    சாதனை படைத்த புதியதமிழ்
அந்தம் இல்லா அழகுதமிழ்
    அவரால் பிறந்த அழகுதமிழ்             

பாரத வளர்ச்சி பலதொழில்கள்
    வளம்பெற வேண்டுவ(து) அவர்கனவு
பாரதி யாரைப் போற்றுவோம்
    பண்ணரும் செயல்களும் ஆற்றுவோம்

நுதற்காதலம்

உன்னால் எப்படி முடிகிறது?
உன்மனம் உன்னிடம்
ஒன்றும் உரைக்கவில்லையா?
என்மனம் பலவீனம்...
ஆட்பட்டபின்
அதிலிருந்து மீளமுடிவதில்லை
ஏற்கனவே எண்ணற்றவை
எண்ணிச் சொல்ல முடியவில்லை
இன்னும் ஏன் ஏமாற்றம்?
ஏன் இந்த மாற்றம்?
புரியாமல் பிதற்றுகிறேன் - விதி
அறியாமல் கதறுகிறேன்.
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தெளிவு

இழந்தவற்றின் ஏக்கங்களுக்கும்
இன்னல்களின் தாக்கங்களுக்கும்
இனி இங்கே இடமில்லை.
ஆற்றும் முறையில்
ஆற்றத்தக்கவற்றின்
ஆக்கங்களுக்கே
அகமும் அறிவும்
ஆழட்டும் ஆராயட்டும்.

          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொட்டு (ஹைக்கூ)

தொட்டிப் பெண்ணிற்கு
எத்தனை நெற்றிகள்
...?
தொட்டியில் ஒட்டிய பொட்டுகள்...

       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 23, 2014

Phani sir (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எல்லா நலமும் பெற்றிணை இல்லாத்
தலைவன் எனவே திகழ்பரம் பொருளே!
பலநூ றாண்டுகள் பாரினில் பெருமை

பொங்கிட வாழ்குவை! பொடியன் வாழ்த்துவன்!
தங்களின் மொழியெமைத் தலைநிமி ரச்செயும்
!
இந்நாள் போல எந்நாளும்

செந்நாள் ஆக செழிக்கட் டும்மே!

             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஜீவா (பிறந்தநாள் வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னுள் உறையும் இனிய நண்ப!
இன்சொல் லுரைப்பவ! ஈகையிற் சிறந்தவ!
கண்ணுள் ஜீவனாய்க் காண்கிறேன் ஜீவா!
மண்ணுல கத்தே நான்காண் தேவா!
காலம் செய்தவத் துதித்த கண்ணா!
ஞாலம் போற்ற நற்புகழ் பெற்று
வாழ்கபல் லாண்டு இன்றுபோல் என்றும்
வாழ்கபல் லாண்டு! வாழ்கபல் லாண்டு!!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நான் ஆசிரியரானால்...

நாளைய நாட்டின் தூண்களுக்கு
  நன்னெறி ஒழுக்கம் நற்பண்பு
நாளும் கற்றுக் கொடுப்பதிலே
  நானுளம் மகிழ்வேன் ஆசிரியர்         1

ஆசெனும் குற்றம் அறியாமை
  அனைத்தையும் நீக்கித் தன்னைத்தான்
அறிந்திடச் சிறந்த வழிகாட்டி
  அதனை நானும் நன்குணர்ந்தே 2


புத்தகப் பாடம் மட்டுமின்றி
  புலமை வளரும் அளவிற்கு
வித்தகம் விதைத்துப் பண்படுத்தி
  வியக்கும் உலகம் எனச்செய்வேன்     3

பொறுமை யுடனே மாணவர்க்குப்
  புரியும் வண்ணம் எடுத்துரைப்பேன்
திறமை தன்னை வெளிக்கொணர்ந்து
  சிந்தை வளம்பெற வழிசெய்வேன்      4


பிறரை மதித்து நலம்போற்றும்
  பண்பா டுடைமை புலப்படுத்தி 
அறவழி நின்று வாழ்வினிலே
  அகிலம் போற்ற வழிசெய்வேன் 5


உலகில் உன்னதப் பணியிதுவே
  உயர்சமு தாயம் நிலைபெறவே
கலைகள் யாவும் வளம்பெறவே
  கருவாய் இருப்ப திப்பணியே          6


கல்விச் செல்வம் கனிச்செல்வம்
  கல்வி ஒன்றே உலகத்தை
நல்வழிப் படுத்தும் என்பதனை
  நாளும் மகிழ்வுடன் எடுத்துரைப்பேன்   7
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரியாமணி (திருமண வாழ்த்து)

கலிவிருத்தம்

பிரிய தர்ஷினி பிரியா மணியாக
பிரிய முள்ளோர் யாவரும் புடைசூழ
பிரியம் சேர்ந்து புதிய வாழ்வமைய
பிரிய முள்ள தம்பியின் வாழ்த்துகள்
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 22, 2014

உடைத்திடுமின் கதவு!

நேரிசை வெண்பா
பூட்டுவிற் பொருள்கோள்

உடைத்திடுமின்! வீணாக்கா தீர்கால் ஒருக்கால்
அடைத்திருப்பின் சாளரம் பின்னே - மடைதிறந்த
வெள்ளமென ஓடுமின் மற்றொன்று தேடுமின்
உள்ளதோ? இல்லென்? கதவு

                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Don't waste a minute not being happy.
If one window closes, run to the next window or
Break down the door!!

Mar 16, 2014

உரை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உரைக்கா விட்டால் உறக்கம் வருமோ?
   உளத்தா தங்கம் வெளமா கும்மே!
உரையேன் என்றின் றுறுதி கொண்டேன்
   உரையேன் வாயால் உளம்நேர் வரியாய்
உரைக்கும் இங்கே உயர்வே என்றே
   உரைக்கும் என்றன் உளமே எனக்கு
உரைத்த தெட்கின் றுறக்கம் வருமே!
   உறுகன வெல்லாம் இனிமை தருமே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இரேவதி சேகர் (பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா

திங்களொளிச் செங்கைதனில் மங்கலக லகலவளை
தங்குபதம் கொஞ்சசிறு தஞ்சமடை கொலுசலைகள்
தங்கைதனக் கண்ணனவன் தருஞ்சீத னங்களவை
நங்குகனார் செங்கையருள் நற்பிறந்த நாள்காண்க!

'கொய்யால' என்றேதான் கொடுஞ்சொல்லைச் சொன்னாலும்
மெய்யாக வன்புடைமை செவ்வாயால் புலப்படுதே!
"அய்யய்யோ அபச்சாரம் ஆத்துக்கா ரர்தம்மை
ஐயாவே என்பேனே" என்றாளே தமிழச்சி!
--------------------------------------
சந்தக் கலிவிருத்தம்

செந்தாமரை மலரே!வதி யறிவாளினி! யகிலம்
அந்தார்மழை பொழிவாரக மகிழ்வாலதில் வியப்போ?
செந்தேன்மொழித் தமிழாலுளம் கனிந்தேமொழி பகர்வோர்
செந்தூரெழிற் செங்கோவருள் பெறுவாருயர் வாழ்வார்
----------------------------------------
நேரிசை வெண்பா

உன்னேர் இலாத மலருண் டுலகெலாம்
உன்னேர் இலாத மலருண்டு - பொன்னேர்
இலாத மலரே இனும்பல வாண்டு
நலாஅத் தொடுவாழ்க வே!
-----------------------------------------

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆவதன் பாலைப் போல வகமது தூய்மை; செய்யும்
பாவதைப் போலச் சிறப்புப் பெற்றிடும் செயல்கள் யாவும்
காவதன் தண்மை போலக் கனிமொழி நவிலும் தங்கை
ரேவதி வாழ்க நாளும் நலத்தொடு வளத்தி னோடே         1

வீரமி குந்த கண்கள் வீரிய மிக்க வெண்ணப்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணென வாழி தங்காய்
சீரதில் சேரும் சந்தம் சிறப்பினைத் தரூஉம் அதுபோல்
நீரதி வாழ்க வாழ்க நித்தமும் மகிழ்ச்சி யோடே                2

---------------------------------------------
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தளிர்நெஞ்சத் தங்கைநீ தண்ணு ளத்தில்
  தனித்தன்மை எண்ணங்கள் தழைத்தே ஓங்க
வெளியீட்டு மேலாண்மைத் துறையி னின்று
  மேன்மையுள தகவல்சேர் கிடங்கு சென்று
களிப்போடு பணியாற்றிக் கற்றுத் தேர்ந்து
  களமிறங்கி யுனைநிறுத்தி நலமாய் வாழ்க!
உளிசெய்யும் சிற்பத்தின் எழிலே போல
  உலகமுனைப் போற்றட்டும் நலமாய் வாழ்க!

------------------------------------------------------
கலிவிருத்தம்

ரேவதிசே கரரே ரேரகமே விவரே  
ரேவவிலை துயரே ரேயதுணை யவரே
ரேவயமே வதிரே ரேதிவர ரவரே
ரேவரர மலரே ரேலமஃ திவரே

                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பாடலைப் பிரித்தறிய:
ரேவதி சேகரர் ஏர் ஏரகமே இவர்
ஏர் ஏவ இலை துயர் ஏர் ஏய துணை யவர்
ஏர் ஏ வயமே அதிர் ஏர் ஏது இவர் அரவர்
ஏர் ஏவ வர மலர் ஏர் ஏலம் அஃது இவரே

சொற்பொருள்:
ரேவதி சேகர் - தோழியின் பெயர் ( முன்னிலையாய்க் கொண்டு முருகனைப் பற்றி எடுத்துச் சொல்லும் பொருளில்)
ஏர் ஏரகமே - அழகிய சுவாமிமலை
ஏர் ஏவ - நன்மையின்பொருட்டு ஆணையிட
இலை துயர் - துன்பம் இல்லை
ஏர் ஏய துணையவர் - கருத்து ஒருமித்த துணைவன்
ஏர் ஏ வயமே - ஊக்கமும் பெருமையும் வயப்படும்
அதிர் ஏர் ஏது - முழங்கும் ஊக்கமுடையவன் அவனைப் போல யாரும் இல்லை
இவர் அரவர் - முழங்கும் ஓசையை எழுப்பும் படையைக் கொண்டவன்
ஏர் ஏ வரர் அமலர் - நன்மை பெருகும் வரந்தருபவன், தூயவன்
ஏர் ஏல் அம் - வளர்ச்சியைக் கூட்டும் அழகு


பாம்பன் சுவாமிகளின் கமலபந்தப் பாடலொன்றைப் படித்து, அதைப்போலவே எழுத முயன்றதன் விளைவு இது. என்னுடைய அலுவலகத் தோழியின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாக இப்பாடலைப் படைக்க எண்ணித் தொடங்கினேன்.. ஆனால், முருகாற்றுப்படையாய்த் தோழியிடம் உரைப்பதுபோல் முடிந்துவிட்டது. இப்பாடலில் 'ர'கரத்தை மொழிமுதலாய்ப் பயன்படுத்த நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.
--------------------------------------------------

அரே அரே அரே
வதி வதி வதி

ரேவதி ரேவதி ரேவதி

ரங்கம்மா - மழைக்
கங்கம்மா - பெரும்
தங்கம்மா - சொக்கத்
தங்கம்மா - என்
தங்கையம்மா 

பிறந்து சிறந்த நாளது 
பத்தோ டொன்று வேறெது
நாளும் திங்களும் நேருது
நலமும் வளமும் சேருது

அறிவு கல்வி சேகரம்
அன்பும் பண்பும் மேகலை
அள்ளித் தந்த ஓர்வரம்
ஆற்றல் உள்ளம் நேர்தவம்

தருணம் நன்று நல்கியே
தழைக்கும் அறங்கள் பல்கியே
கருணை பொழியும் கார்முகில்
கருத்தும் கனிவும் சேர்முகில்

அறிவீர் அறிவன் தன்மீனே
வளப்பம் பொருந்திய நன்மீனே
பிறந்த நாணல் வாழ்த்துகள்
சிறந்து வாழ்க பல்லாண்டே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

செல்லக் கிளி

இன்னிசை வெண்பா

நல்லதமிழ்ப் பாமாலை நாவினிக்கப் பாடுகின்ற
செல்லக் கிளியேயென் சிங்காரப் புன்னகையே!
வெள்ளம் வருமுன் னணைபோட லாந்துள்ளும்
உள்ளம் பெறுமென் தடை?
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 15, 2014

மணிகண்டன் கண்ணன் (பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பாக்கள்

அணிகொண்ட  செங்காந்தள்  அச்செவ்வி  ளங்குமர!
துணிகிளர்வுச்  சாதனைகள்  செய்திடவா  செந்தமிழ
!
கணிகண்ணன்  பெறுமருளாய்  மணிவண்ணன்  பேரருளை

மணிகண்ட!  நீர்பெறுக!  மகிழ்சிக்கண்  ணீர்பெருக              1


ஒளியம்பு  லித்தோழ!  உயர்பண்பு  கூரறிவ!
களிப்புடனே  கருதரிய  செயல்யாவும்  புரிந்திடுக
!
கிளிபேசும்  மழலைச்சொல்  உளங்குளிர  உதிர்த்திடுக!

மிளிர்பொன்மு  கத்தழக!  வளம் யாவும்  பெற்றிடுக!            2


தேமாந்தண் பூத்தமிழாய் வாழியவே எந்நாளும்
தேமாந்தன் உலகிற்கென் றினியவனாய் வலம்வருக!
தேமார்ந்து பல்லாண்டு நலம்வாழ்க! குலம்வாழ்க!
தேமாரம் சூடியுல காண்டிடுக இளந்தளிரே!                  3

                          -    தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஆரோன் வசந்த் (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

ஆரோன் நெஞ்சில் ஆர்ந்தோன்! செஞ்சொல்
வீரன்! தேர்செயல் விளக்கம் தெளிந்த 
பொருளன்! நெஞ்சுரம் மிக்கன்! பொன்னிகர்
அருளன்! அவற்கிங் கில்லை தன்னிகர்
'என்செய லாகா? எல்லாம் இயலும்'
பொன்சொல் உதிர்த்துப் பொன்செயும் மருந்தன்!
ஈரெட் டெனும்பே றெல்லாம் பெற்றுப்
பார்போற் றிடக்காண் பிறந்த நன்னாள்
வாழிய பண்படு பேறுள்ளம்
வாழிய வளம்நலம் உளம்நிறைந் தற்றே!

                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இராவண பாரதி - சரவணன் (பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை வெண்பா

வெண்பா ரதியாய் உயர்தமிழ் போற்றிடும்
நண்பாநீ வாழ்கபல் லாண்டகிலம் - கொண்ட
செயலால் பெருமை யுறவே பெரும்பே
றியல்பா யணிக மகிழ்ந்து.

              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஹரிஷ் காதர் (திருமண வாழ்த்து)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஒன்றுள்ளும் ஒன்றுள்ளம் என்ற றிந்தே
   உயர்மொழியும் வழிச்செயலும் உணர்வும் ஓங்க
நன்றென்றும் நின்றகைமை நானி லந்தான்
   நலம்வாழக் குலம்வாழ நற்பே றுற்றுச்
சென்றவிட மெல்லாஞ்சி றப்பே யெய்திச்
   செயலாற்றல் கொண்டேத்தும் ஆற்றில் ஆற்றிக்
கன்றுள்ளத் தன்புற்றுக் கவின்மே லோங்கக்
   காதரரிஷ் யாஸ்மின்வாழ் மின்வாழ் மின்னே!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

தேன்

குறள் வெண்பா

நாடிய நின்னொடு நில்லாத போழ்துளம்
தேடியே செல்குவை தேன்

                                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தேங்காய்

தரவு கொச்சகக் கலிப்பா

கொண்டைப் பூவுடையாய்! குளிர்வெண் மையகத்தாய்!
தண்ணீர் மைகுன்றாத் தனியறத் தோடுயர்ந்தாய்!
கண்ணும் மூன்றுடையாய்! காணும் விழாவெல்லாம்
பண்டை முதலிருந்து பார்க்கும் தேங்காயே!

                                                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பேரன்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிங்காரச் சென்னையிலே சாயுங் காலம்
    சுறுசுறுப்புச் சாலையிலே சிறுவர்க் கூட்டம்
அங்குமிங்கும் விழிவைத்துக் கடந்து செல்ல
   அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தி ருக்கும்
தங்கையினைத் தன்கையால் தாங்கி நின்று
    தன்பொறுப்பை உணர்ந்திழுத்தே ஏகும் அண்ணன்
தங்கையினைத் தன்கையாய்த் தன்ம னத்தில்
    தானிறுத்திப் பேரன்பை உணர்த்தி னானே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

செந்தமிழ்ப் பாகர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

யார்வரு வாரிங் கெல்லாரும்
    யென்றெதிர் பார்த்தல் நன்றலவே!
கார்பொழி கவின்ற மிழ்மொழியே!
    காலமும் நின்றன் கணக்கறியா!

ஆர்வலர் அவனி யெங்குமுண்டு
    அந்தமிழ் பசுமை ஆர்தமிழே!
தேர்வலம் தேரகம் மண்டலமே!
     செந்தமிழ்ப் பாகர் பலருண்டே!

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வீரப்பன் சுப்பிரமணியன் & PDC

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

வீறுகொண் டெழுந்த வீர
   மக்களைக் கொண்ட வீர!
ஆறது சரியாய்க் கொண்டே
   அடுத்தடி தொடர்ந்தே ஏகும்
மாறிலாத் திண்ம னத்த!
   வாழ்கவெந் நாளும் நன்றாய்!
ஏறனை மட்டைப் பந்து
   எம்மணி வீரர் வாழ்க!   
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பரமும் வரமும்

கலிவிருத்தம்

விபரம் அறிகிலேன் விவரம் பெறுகிலேன்
வினைகள் பலவுள வியனுல கத்தினில்

தப்பிப் பெருவரம் தானை யானவன்
செப்பிச் சென்றனன் சீர்மை பெற்றிட

                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
மேன்மையான கடவுளை அறிந்திடிலேன்; பெரிய வரங்களையும் பெற்றிடிலேன்; இந்த விந்தையான உலகத்தில் ஆற்ற வேண்டிய செயல்கள் பல உள. படைத்தலைவனாகிய முருகன், இதனை எனக்கு உணர்த்திச் சென்றனன். இதுவே பெருவரம்
வி பரம் - மேன்மையான கடவுள்
வி வரம் - பெரிய வரம்

வெங்காயம் - தேங்காய்

தரவு கொச்சகக் கலிப்பா

வெங்காயம் அரிகையிலே பொங்காயங் கண்ணீரே!
செங்காயத் திங்களவள் எங்காயத் திரியாளே!
பங்காயு ளங்கொண்டு தங்காயு ளத்தொண்டச்
சங்காயச் சங்கத்தாள்! தெங்காயு ளங்கற்றாள்!

                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நின் - நினை - நின்று

தரவு கொச்சகக் கலிப்பா

நின்னைநான் நினையேனோ? நினையாநின் றேநின்றேன்!
நின்றாயை நெஞ்சாகி நினையாநின் றேநின்றால்
நின்றாளும் நின்னினைவால் கொன்றாலும் கன்றாகி
நின்றாய்நன் றன்பால்நின் றருளாய்நின் றுருவாக!

                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இனியா (,பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

சிறுபூங் கனியுன் சிரிப்புண ருங்கால்
சுறுசுறுப் பெறும்பும் சிறிதயர்ந் தெழுமுன்
மழலை மொழியைப் பழகும் கிளியும்
அழ்கிய உன்றன் தத்தை நடைகண்(டு)
ஆடும் பாடும் அகமே மகிழும்
காட்டுச் சிங்கமும் காணத் துடிக்கும்
காட்டுன் முத்துப் பல்லெனக் கேட்கும்
முயலுன் முயற்சி கண்டே இன்னும்
முயன்றிட வாவென் றுன்னைக் கேட்கும்
இனியா நின்ற கவிப்பொழில் போல
இனிமை சேர்ந்து பெரும்பே றெல்லாம்
மனம்பொ ருந்தப் பெற்று வாழ்க!
இனிய பிறந்த நாணல் வாழ்த்து!
கனிமகிழ் நாணல் கவின்மிகு பொழிலாய்ப்
பன்னெடும் புனல்தவழ் நன்னதி யன்ன
இன்னட் போடு சுற்றம் சூழ
பல்லாண் டிவ்வுல காண்டு
எல்லா நலமும் ஏற்று வாழ்க!

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
சிறிய மென்மையான கனியே!
உன்னுடைய சிரிப்பை உணரும்போது, சுறுசுறுப்பாய்ச் சென்று கொண்டிருக்கும் சிற்றெறும்பும் சற்று நின்று எட்டிப் பார்க்கும்.
உன் மழலைப் பேச்சைக் கிளியும் பழகும்; உன்னுடைய கிளியைப்போன்ற நடையைக் கண்டு, அக்கிளியே ஆனந்தத்தில் ஆடிப் பாடும்.
காட்டில் வாழும் சிங்கமும், உன்னுடைய முத்துப் பல் வரிசையக் காணத் துடிக்கும்.
உன்னுடைய சுறுசுறுப்பான செயல்களைக் கண்டு, உன்னோடு விளையாட, முயலே இன்னும்  முயன்றிடவா என்று உன்னைக் கேட்டும்.
இனிமையான கவிச்சோலையப் போல வாழ்வில் எந்நாளும் இனிமை சேர்ந்து, பெரும் செல்வங்களை அடைந்து, மன நிறைவோடு வாழ்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் (நாணல் - நாள் நல் ['ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்' என்னும் புணர்ச்சி விதிப்படி]).
நதியோடையில் தவழும் நாணலும், அந்நாணலை 'நாளும் நலமா?' எனக்கேட்கும் நதியும், ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் நல்ல நண்பர்கள். அத்தகைய நதியும் நாணலும் போல, இனிய நட்பும் உறவும் சூழ, பல்லாண்டு இவ்வுலத்தை ஆண்டு, எல்லா நலங்களும் பெற்று வாழ்க!