Dec 20, 2022

என்னவெல்லாம்?

எனக்குள்ளே இருக்கும்
கவிதைக் கிறுக்கன்

கணத்திற்குக் கணம்
எட்டிப் பார்த்தவன்

இப்போது
எட்ட முடியா உயரம் சென்று
எல்லாம் தொலைத்துவிட்டான்

என்னவெல்லாம்?

கவிதோய்ந்த நெஞ்சினளின்
கருத்தறியக் காத்திருந்த
காதல் உள்ளம்

மாங்காயும் விளங்காயும்
மனத்தில் ஏற்றிச்
செப்பும்படிச் செய்த
செழிப்பால் கனிந்த உள்ளம்

கனியின்றிக் கனிவேது?
வஞ்சியின் தளையினுள்
வாஞ்சை மிகமிகக்
கருணை பிறந்த உள்ளம்

காட்சிப் படகில்
கருத்துத் துடுப்புடன்
காலக் கடலில்
உல்லாசமாய் இருந்து
உவந்த உள்ளம்

கருத்தில் மூழ்கிக்
கவிதையில் மூழ்கித்
தனிமையியிலும்
தனிமை தொலைத்து
மகிழ்ந்த உள்ளம்

யாப்புக் காட்டில்
ஆரவாரத்தோடு
ஆடிப் பாடித் திரிந்து
ஆனந்தப்பட்ட உள்ளம்

மா மத்தக யானையின்
மலைமீது பட்டுத் தெறிக்கும்
கடாஅம் கடாஅம்
ஓசையில் ஒன்றிய
ஒளிப்பில்லா உள்ளம்

இன்னும் இன்னும்
எத்தனையோ தொலைத்துவிட்ட
ஏதுமில்லா வாழ்க்கை
ஏந்திய செல்வத்தால்
என்ன பயன்?

கவிதை

கவலை தோய்ந்த போதெல்லாம்
   கவிதை வந்து கைகொடுக்கும்
கவரும் சொல்லின் ஆட்சியினால்
   கவலை துன்பம் கழன்றோடும்
துவண்ட நெஞ்சைத் தேற்றிவிட்டுத்
   துணையாய் வந்து நடப்பிக்கும்
உவகை ஊக்கம் உள்மயக்கம்
   உணர்வில் கலந்து நலம்பயக்கும்

Dec 6, 2022

ஆற்றலுடை அண்ணா மலை

காற்றுக்கும் மாரிக்கும் காணாத ஆணவமோ?
வீற்றிருந் தாளும் விமலனோ - தீத்தாளால்
மாற்றம் விளைவிக்கும் மாச்செயலைக் காண்பீர்அவ்
ஆற்றலுடை அண்ணா மலை