Aug 21, 2022

செருவெல்க செந்தமிழே!

தமிழ்வாழ்த்து

தகவற் றொழினுட்பக் காலத்துத் தகவமைந்(து)
அகவும் அருந்தமிழே! ஆற்றலைக் காட்டிப்
பகலாய் விளங்குவாய் பார்வென்(று) ஆளுவாய்
மகக்கடன் வேறென்ன காப்போம் மனமார்ந்தே

பாவலர் மா. வரதராசனார்க்கு வாழ்த்து

வரத ராசர் மனங்கொள் நேசர்
வரமாய் வந்து மரபைக் காக்கும்
பரந்த மனத்தார் பண்பிற் சிறந்தார்
தரமாய்த் தமிழைத் தருவார் போற்றி

அவையடக்கம்

எவையடங்குங் காலத்தும் சுவையடங்காச் செந்தமிழின்
பகையடங்கச் செய்தற்குப் பாட்டாலே பரவுவோம்
அவையடங்கிக் கருத்துரைப்போம் ஆன்றோர் குறைபொறுப்பீர்
கவைத்தறிவு பெருகற்குக் கரையில்லா விளக்காவீர்

செருவெல்க செந்தமிழே!

எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பேரிடர்கள்
சத்தான செந்தமிழைத் தகர்த்தெறிய நின்றெதிர்த்தும்
அத்தனையும் பொடியாகி அகமழிந்து நிற்பதுகாண்
முத்தான செந்தமிழே முக்காலும் உலகாளும்                       1

கலந்தாலும் கலந்துகலந் தேபிரிந்தும் தனித்தமிழின்
குலந்தழைக்கும் குவலயத்தில் முன்னிற்கும் எழில்காணீர்
மலடில்லை மகப்பேறு பெற்றவளைத் தாயவளைத்
தலைதூக்கிக் கொண்டாடும் தமிழ்க்குலமே தமிழ்க்குலமே 2

தமிழன்றன் மறையெல்லாம் தான்மறைத்து வளர்ந்தாலும்
தமிழோசை யால்கெட்டுத் தவிக்கின்ற நிலைக்காகும்
அமிழ்தாகும் அவளுக்கு வேறேதும் இணையில்லை
தமிழோடு விளையாடத் தனித்திறமை வேண்டுமன்றோ 3

பாமரனின் நாக்கினிலே படியாவே பிறமொழிகள்
நாமறுக்க மாட்டாமல் நலம்விளைக்கும் தமிழ்மொழியே
ஏமமென எப்போதும் இருப்பதுவே இயற்கைமொழி
தீமையுற்றுப் பிறமொழிகள் செயற்கையினால் அழியும்மே 4

பலவாறாய்க் கிளைத்திருக்கும் மொழிக்கெல்லாம் தாயாகி
நிலையாக வீற்றிருப்பாள் நெஞ்சினிலே முக்காலும்
தலையிருக்க வாலாடும் தனித்திறமைக் கதையெல்லாம்
தலையிழந்து தரமிழந்து தாயின்றாள் தாம்பணியும் 5

செருவென்று வந்துவிட்டால் செருவென்று காட்டுபவர்
பொருவென்று பகைவர்தமைப் போயழிக்கும் வீரமிகு
திருச்செல்வர் பலவுண்டு திகைப்பேதும் தேவையில்லை
உருவழிக்க வியலாதே உண்மையென்றும் நிலைத்திருக்கும் 6

பல்குகின்ற துறையாவும் பாதையிடும் பெருந்திறமை
நல்குகின்ற தமிழ்த்தாயே! நானிலத்தை ஆள்பவளே!
செல்வமெலாம் நீயன்றித் தேர்வதிலை என்மனத்துள்
தொல்குடியன் எனப்பெருமை கொள்வேனே தொடர்ந்தகழ்ந்தே! 7


ஆரியமும் மகமதுவும் ஆங்கிலமும் ஆகிவரும்
பேரியக்கம் எல்லாஅம் பெரும்படையைக் கொண்டுவந்தும்
நீரியல்பைப் போன்ற நிலையான செந்தமிழின்
பேரிலக்க முத்தாழி முன்னிற்க முடியாதே!                                            8

Aug 16, 2022

சங்கத் தமிழ்வேள் - சங்கர சத்யா

சங்கத் தமிழ்வேட்குச் சத்தியநா ராயண
சங்கரர்க்குப் பாமாலை சாற்றுவோம் - பொங்கும்
உளம்நிறை செந்தமிழ் ஓட்டம் கவிதைக்
களம்நிறையக் காக்குந் தலை

Aug 13, 2022

முந்தைப் பிறந்தவள்யான் - ஒருபா ஒருபஃது

இயற்கையாய் நின்றேன் எடுத்தாண்ட வேந்தர்
முயற்சியால் மூன்றாய் வளர்ந்தேன் - செயற்கை
பலவாறாய் என்னைப் பதம்பார்க்க எண்ணித்
தலைவேறாய்ப் போனது காண்                                                      1

இயற்கை சிதைக்கும் செயற்கை வழக்கம்
இயற்கையே என்றும் இருக்கும் - அயர்ந்திந்த
பூமி அழிந்து புதுப்பிறவி கொண்டாலும்
ஆமிமிழ்ந்து தோன்றுவன் யான்.                                                    2

இயல்பின ளாய எனையழிக்க நின்றார்
முயற்சியெலாம் பாழாய் முடியும் - அயற்சியிலா(து)
ஆழ்ந்தகழ்ந் தாய்வார்க்(கு) அமிழ்த சுரபியாம்
வாழ்ந்தார் எனைக்கூறு வார்                                                           3

இயற்கையி னின்று செயற்கையை நாடி
முயற்சிகள் நீளல் முடிபோ - பெயர்ச்சிகள்
மேன்மேலும் வந்தென்னை வீழ்த்த நினைத்தாலும்
யான்மேலே நிற்பேன் இனிது                                                           4

உயர்ந்த பொருளாய் உணர்வார்க்(கு) உணர்வாய்ப்
பெயர்ந்து வளர்வார்க்கும் பேறாய் - அயராத
நல்லுள்ளந் தந்து நயத்தகு பாவடிக்கச்
சொல்லுள்ளம் சேர்ப்பேன் சுரந்து                                                   5

எனக்கென்ன போட்டி எடுத்தாளு வார்தம்
மனக்கவலை மாற்றும் மருந்து - தனக்குவமை
இல்லாத என்னை இனியவளைக் கையாண்டு
சொல்லாத தெல்லாமே சொல்                                                         6

என்னின் இளையார்க்கும் ஏற்ற இடந்தருவேன்
பொன்னின் பொலிவோ பொசுங்காது - மன்னும்
நிலைப்பே றுடையவள் நீண்டு தொடரும்
கலைவேறு யான்வேறோ காண்?                                                    7

வருமொழி யாவும் வளரும் தளரும்
ஒருமொழி யுண்டென்பார் ஓர்ந்தார் - அருமொழி
நிற்கும் பிறமொழி நீத்து விடுமியல்பே
பொற்குவையே காக்கப் படும்.                                                         8

முத்தமிழாய் முத்துதிர்க்கும் முந்தைப் பிறந்தவள்யான்
சொத்தாய்ப் பலர்க்குச் சுரந்தமுத - வித்தாய்த்
திகழும் விளக்கம் தெரிந்தவள் என்னை
இகழ்வார் இகழ்ந்தழி வார்                                                                   9

மொழிவார் மொழியாவேன் முத்தாய் முனைவார்
எழிலாவேன் இன்பம் இயற்றிப் - பொழிலாவேன்
காலத்(து) அழியாத காவியம் தந்துயர்ந்து
ஞாலத் திருப்பேன்யான் நன்று                                                          10

முத்துமணி அம்மா

முத்திரண்டு பெற்றவராம் முற்றறிவு தந்தவராம்
முத்துமணி அம்மா முகமலர்ந்து - முத்தியுற்றார்
வைகுண்டம் வந்தடைந்தார் வாழ்த்துவார் எந்நாளும்
செய்தவத்தால் செம்மையுறச் செய்து.

வெண்ணிலாவே!

வெண்ணிலாவே உன்னொளி அன்ன
என்னிலாவைக் கண்டென சொல்வாய்?
கண்ணிலாதான் கலங்குதற் போலே
மண்ணில்யானும் உழலுகின் றேனே