தமிழகழ்வன் சுப்பிரமணி
மொழி இறுதி எழுத்துகள்
தமிழார்வலர்களுக்கு வணக்கம்!
சென்ற பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழி இறுதி எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.
சொற்களின் இறுதியில் நிற்கும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும்.
1. உயிரெழுத்துகள்
ஒளகாரம் தவிர மற்ற 11 உயிர்களும் மொழி ஈறாக அமையும். அவற்றுள்
• நெடில் எழுத்துகள் தனித்து (ஓரெழுத்து ஒருமொழியாய்) ஈறாகும். எ.கா: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ.
• குறில் எழுத்துகள் அளபெடையில் ஈறாகும். எ.கா: கடாஅ, குரீஇ, ஆடூஉ, நசைஇ, என்னேஎ, அதோஒ.
ஒளகாரம் பெயராகவும், வினையாகவும் வாராது குறிப்பிடைச் சொல்லாக மொழி ஈறாக அமையும். எ.கா: ஒள.
2. மெய்யெழுத்துகள்
மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொரு எழுத்துகள் மொழி ஈறாய் அமையும். எ.கா: கண், அறம், மன்னன், சேய், சேர், செல், ஆழ், ஆள்.
ஞகரப் புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாக வரும். எ.கா. உரிஞ் (உரியும் தோல்).
நகரப் புள்ளி இரண்டே சொற்களில் ஈறாக வரும். எ.கா. பொருந் (பொருத்திக்காட்டு), வெரிந் (முதுகு).
வகரப் புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும். எ.கா. அவ், இவ், உவ், தெவ் (பகை).
னகரப் புள்ளியை ஈறாக உடைய (ஈரெழுத்தொரு மொழியல்லாத) தொடர் மொழிகளுள், மகர ஈற்றுத் தொடர்மொழிகளாக மயங்குதலினின்று வரையறுக்கப் பெற்றவை அஃறிணைப் பொருள்மேல் கிளக்கப்பெற்ற ஒன்பது சொற்கள் ஆகும். அவை எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என்பன.
மெய்யெழுத்துகளில் க், ச், ட், த், ப், ற், ங் ஆகிய ஏழு எழுத்துகள் சொற்களில் ஈற்றெழுத்தாக அமையா. எனவே இவ்வெழுத்துகளை ஈறாகக் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது திருத்தி எழுத வேண்டும். எ.கா. தீபக் - தீபன், தீபகன்; நாயக் – நாயகன்; மார்க் – மார்க்கு; மார்ச் – மார்ச்சு; ஆகஸ்ட் – ஆகத்து; நாத் – நாதன்; வினோத் - விநோதன்; பிரதீப் – பிரதீபன்.
3. உயிர்மெய்யெழுத்துகள்
ஒளகாரம் ககர, வகர மெய்களோடு மட்டும் கூடி மொழி ஈறாகும். எ.கா: கௌ, வெள.
எகரம், மெய்யுடன் கூடி ஈறாகாது. கன்னடம் தமிழோடு இவ்விதியில் வேறுபடுகிறது எனலாம். கன்னடத்தில் பல சொற்களில் எகரம் மெய்யோடு கூடி மொழி ஈறாய் அமையும். எ.கா: தாவரெ கெரெ (ತಾವರೆ ಕೆರೆ) - தாமரை ஏரி; ஹலெ (ಹಳೆ) - பழைய; ஹொகெ (ಹೊಗೆ) – புகை.
ஒகரம் நகர மெய்யுடன் மட்டும் கூடி மொழி ஈறாகும். எ.கா: நொ, நொக்கொற்றா.
ஏகார ஓகாரங்கள் ஞகர மெய்யோடு கூடி ஈறாதல் இல்லை. எ.கா. உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ - இவை எச்சமும், தொழிற்பெயரும் பற்றி வரும். அஞ்ஞை, மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன. உரிஞோ என்பது 'கடிசொல்லில்லை' என்பதனாற் கொள்க.
உகர ஊகாரங்கள் நகர, வகர மெய்களோடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களோடு கூடி ஈறாகும். எ.கா. நகு, உசு, கடு, அணு, அது, தபு, உருமு, உரு, கமு, உறு, மின்னு. நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ.
எனில் கதவு, வரவு, செலவு என்பவை எவ்வாறு வரும்? அவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். எனில் இவை வகர ஈறா? அன்று. அங்கே நிற்கும் வகரமெய், உகரத்தை ஏற்கவந்த உடம்படுமெய் ஆகும்.
திரிபின்றி முற்றியலுகரமாக வரும் சகர உகரம் (சு) இரண்டு ஆகும். அவை உசு, முசு என்பன. பசு, வசு முதலியவை ஆரியச் சொற்கள். அரசு, முரசு என்றாற்போல வரும் ஏனையவை, புணர்மொழி நோக்கி முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும் நிற்றற் கேற்பன.
முற்றியலுகரமாக வரும் பகர உகரச் சொல் ஒன்றே. அஃது தொழிற்பெயர், ஏவல்வினை ஆகிய இரண்டிடத்தும் நிற்கும் பொருண்மையுடையதாகும். எ.கா:
• தபு - நீதபு! எனவரும். த = கெடுவாயாக!
• பெயராயின் தவறு என்பது பொருளாம். அது இக்காலத்துத் ‘தப்பு’ என வழங்கும்.
இதுகாறும் விதந்து கூறப்பட்ட ஒள, எ, ஓ, ஏ, ஒ, உ, ஊ என்பவை தவிர்ந்த அ, ஆ, இ, ஈ, ஐ ஆகிய ஐந்து உயிர்களும் ஙகரம் தவிர்ந்த எல்லா மெய்களோடும் கூடி ஈறாதற்குக் குறைவில.
மொழிக்கு ஈறாகா உயிர்மெய்களும், ஙகரமும் தம்பெயர் மொழிதற்கண் ஈறாக நின்று புணரும். எ.கா. நுப்பெரிது, வுச்சிறிது, ஙக்களைந்தார்.
சகர உகரச் சொற்கள் இரண்டே, பகர உகரச்சொல் ஒன்றே, நகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் இரண்டே, ஞகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் ஒன்றே, வகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் நான்கே என எண்ணிக்கையோடு காட்டப்பட்டதன் நோக்கம் செய்யுளீட்டச் சொல்லாக வடசொற்கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச்சொற்கள் இவையே என அறிதற் பொருட்டு ஆகும்.
4. குற்றியலுகரம் - குறுகிய உகரம் மொழி இறுதியில் அமையும். எ.கா. பாகு, காசு, பட்டு, பத்து, காப்பு, ஒன்று.
இவ்வாறு பன்னிரு உயிர்கள், பதினொரு மெய்கள், குற்றுகரம் ஆகிய 24 எழுத்துகள் சொற்களின் இறுதியில் அமையும். மெய் முன்னும், உயிர் பின்னுமாய் ஒலித்து நிற்பது போலவே உயிர்மெய்க்கு மெய் முதலாகும்; உயிர் இறுதியாகும்.
(தொடரும்)