Jul 26, 2020

மணிக்குறள் - 4. வறுமை ஒழிக

வறுமை ஒழிக்கும் வகைசெய வாழ்வில்
வெறுமை தவிர்த்து விடு                                  31

வெற்றுப் பயலென வேகுஞ்சொல் கேளாதே
உற்ற வறுமை ஒழி                                              32

ஓடி உழைத்த உயர்செல்வம் ஓடுமுன்
நாடி நரம்பில் மது                                               33

எதுவரினும் இல்லையென் றாகும் அழிக்கும்
மதுவுக்(கு) அடிமை மனம்                               34

கடன்பட்டுக் கட்டு(ம்)வழி காணான் உடைமை
உடன்படா(து) ஓடும் ஒழிந்து                          35

ஆக்கும் அளவறிந்(து) ஆக்கியன துய்த்தலே
நீக்கும் வறுமை நிலை                                       36

சிக்கனம் வேண்டும் சிறுதொகை கைக்கொளினும்
சிக்கலே இல்லை சிறப்பு                                   37

படைத்த பெருஞ்செல்வம் பார்ப்ப(து) அறியாய்!
மடையுடை வெள்ள மழை                                38

குன்றன்ன செல்வமும் குன்றும் பொறுப்பின்றி
நின்றழிக்க நீபிறந் தாய்?                                  39

கல்வி பெருஞ்செல்வம் காணா வறுமைக்கு
நல்விதையை நெஞ்சில் நடு                            40

ஆத்தீகமும் நாத்தீகமும்

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி


1.       ஆன்மீகமா? அறிவியலா? 
ஆன்மீகமே அறிவியலா? கலப்படமா?

படிக்காத பாமர மனிதனுக்குக் கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட அறிவியலே ஆன்மீகம். அறிவியல் என்று அறியப்படாமலேயே முன்னோர்கள் காலங்காலமாய்க் கடைப்பிடித்து வந்த வழியே ஆன்மீக வழி. அவ்வழியில், சிலர் எல்லாம் அறிந்தவராய், “அது அப்படித்தான், இது இப்படித்தான்” என்று தனக்குத்தானே வரையறுத்துக்கொண்டு வழிகாட்டிகளாய் மாறியதன் விளைவு, அறிவியலாகிய ஆன்மீகமும் கலப்படமானது. இக்காலத்தில் கலப்படம் இல்லாத பொருளேது? கலப்படம் செய்வதனால் நன்மையா விளைகிறது? கலப்படம் என்று தெரிந்து, அதன் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற கருத்து மேலெழுந்து தூய நிலைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களே மனிதர்கள். அவர்களது எண்ணங்கள் செயல்களாக மாறினவா, மாறவில்லையா என்பது அவரவர்தம் மனத்தைப் பொறுத்தது. இவ்வாறு, ஆன்மீகத்தினுள் உண்மையிலேயே பொதிந்துள்ள அறிவியல் எது? பொய்யாகப் புகுத்தப்பட்டவை எவை என்பது அறிய மிகவும் அரிதானது.

சில எடுத்துக்காட்டுகள்:
·        வேப்பிலையில் மந்திரம் போடுதல்
·        அலகு குத்தி வழிபடுதல்
·        காவடி தூக்குதல்
·        தலையில் தேங்காய் உடைத்தல்
·        மாலை அணிந்து நோன்பிருந்து கடவுளைக் காணச் செல்லுதல்

இப்படியே மதத்தின் பெயரால் நடக்கும் எல்லாச் சடங்குகளுக்கும் காரணம் கற்பித்தல் யாவராலும் இயலும். அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவருடைய மனத்தைப் பொறுத்தது.

2.       உண்மையா? பொய்யா? 
அதனால் என்ன பயன்?

இப்படியே மதத்தின் பெயரால் புனையப்பட்ட புராணக் கதைகள் யாவற்றுக்கும் காரணம் கற்பிக்கவும் முடியும். அவை பொய்யாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும், அதன்மூலம் நீ பெறுவது என்ன? அதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்றை உண்மையென்று சொல்ல, ஆதாரம் வேண்டுவோர், ஒன்றைப் பொய்யெனச் சொல்ல என்ன ஆதாரம் தருகிறார்? நம்ப முடியாதவை எல்லாம் பொய்யாகி விடுமா? மனிதனின் அறிவுக்கு எட்டியவை மட்டுமே உண்மையாகுமா? பல அறிவியல் ஆய்வுகளின் தொடக்கக் காலத்தில் கைக்கொட்டிச் சிரித்தவர்கள், அந்த அறிவியல் கண்டுபிடிப்பு உண்மையானதைக் கண்டு வாயை மூடிக்கொண்டிருந்த கதைகளையெல்லாம் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்வதற்கு முன்புவரை, அவையெல்லாம் கற்பனையே பொய்யே என்று சொல்பவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியலில் எப்படிச் சேர்ப்பது?

இன்றைய வானூர்திகளைக் காணாதவரை, சீவக சிந்தாமணியில் வரும் புஷ்பக விமானத்தைப் பற்றிய செய்தியே கட்டுக்கதை என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் பகுத்தறிவுவாதிகளா? அவர்கள் பகுத்தறிந்தது அவ்வளவுதான். தனக்குத் தெரியாத எந்த ஒன்றையும் குறைசொல்வதற்கு யாருக்கும் எவ்வகையிலும் உரிமையில்லை.

நாம் வாழும் தற்காலத்தில் எது அறம், எது சட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ளதுபோல், முற்காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்த அறம், சட்டம் யாவும் இப்போது இருப்பதைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பகுத்தறிவாகுமா? இதைத்தான் இன்றைய பகுத்தறிவுவாதிகள் குற்றம் கூறி வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் ஓர் ஆண், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்று சட்டம் இருக்கிறது, இன்னொரு நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தியென்று மட்டுமே வாழ வேண்டும் என்று சட்டம் இருக்கிறது அல்லது மனக் கட்டுப்பாடு இருக்கிறது என்றால், இதில் எது சரி? எது தவறு? சட்டங்கள் எக்காலத்தும், எல்லாவிடத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவரவருக்கு விருப்பமான சட்டத்தை அவரவர்தம் மனமே ஏற்படுத்திக் கொள்கிறது. இங்கும் அப்படித்தான். “நான் நாத்திக வாதி; நான் இப்படித்தான் பேச வேண்டும். இப்படித்தான் பேசுவேன். நான் ஆத்திக வாதி. ஆன்மீகம் என்று சொல்லப்பட்ட எல்லாம் உண்மையென்று சாதிப்பேன்” என்ற கருத்துகள் மேலோங்கிவிட்டன.

3.       சரியும் தவறும்

தான் கொண்ட கொள்கை தவறு என்று தெரிந்த பின்பும், அது தான் கொண்ட கொள்கையாயிற்றே; அதனால் கடைசிவரையில் அப்படித்தான் இருப்பேன் என்ற எண்ணம் தவறானது. அவரவர்தம் கருத்தை வெளியிடுவதில் தவறில்லை. அவரவர்தம் கருத்தே சரியானது. மற்றவர் கருத்தோ தவறானது என்று வாதிடுபவர்களுக்கு, அடுத்தவர் கருத்து எப்போதும் புரியாது. முதலில் காது கொடுத்துக் கேட்க வேண்டும்; பின்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாம் ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது. அது தவறே; இது சரியே என்று எந்த நம்பிக்கையைக் கொண்டு வாதிடுகிறீர்கள்?

4.       பகுத்தறிவு என்றால் என்ன?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு – திருக்குறள்.

பகுத்துப் பார்த்து அறியாமலேயே பகுத்தறிவாளன் என்ற பெயரை யாரும் பெற்றுவிட முடியாது. சில வினாக்களைத் தொடுத்துவிட்டு ஆன்மீக வாதிகளால் பதிலுரைக்க முடியவில்லையே என்பதனால், ஆன்மீகம் பொய்யானது என்று சொல்லிவிட முடியாது. அத்தகைய வினாக்களுக்கான விடைகளை அறிய முயலாதவர்கள் என்று அவர்களைக் குறைசொல்ல முடியாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ஆன்மீகத்தின் பெயரால் பல பொய்யான கதைகளைச் சொல்லி நம்ப வைப்பதில் அவர்களுக்கு என்ன நிகழ்கிறது என எண்ணிப் பார்க்க வேண்டும். பகுத்தறிந்து வாழ்வது மட்டுமே வாழ்க்கையா? பகுத்தறியும் திறன் இல்லாமல் மனித இனம் இருந்திருந்தால் இந்தச் சண்டைகளுக்கே இடமில்லை.

தாம் வினவும் வினாக்களுக்கு, மற்றவர் பதிலளிக்கவில்லையென்றால், தான் அதற்கான விடையைத் தர வேண்டும். உடனே அது பொய் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒருவன் செய்வது உனக்குப் பிடிக்கவில்லையா? அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டும் அவசியம் உனக்கு இல்லை. நீ உன் வேலையைப் பார்க்கலாம். அவன் செய்வதால் ஏற்படும் நன்மையும் தீமையும் அவனாலேயே நிகழும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று பகுத்துப் பார்க்காமலா கணியன் பூங்குன்றனார் சொன்னார்?

இவ்வாறு பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள் எல்லாவற்றையும் பகுத்துப் பார்த்துத் தெரிந்துகொண்டவர்களும் அல்லர். ஆன்மீக வாதிகள் என்று சொல்பவர்கள் பகுத்துப் பார்க்காமல் வாழ்பவர்களும் அல்லர்.

5.       தொழில்நுட்ப வழியாக ஒரு செய்தி

இப்போது ஒரு programming language (நிரல்)ஐ எடுத்துக் கொள்வோம். ஒரு சிலருக்கு அந்த நிரலின் வெளியீடு (output) மட்டுமே தெரியும். ஒரு சிலருக்கு அந்த வெளியீடு எப்படி வருகிறது என்று தெரியும். இன்னும் சிலருக்கு அந்த வெளியீட்டைக் கொண்டு வருவதற்கான நிரலும் தெரியும். இன்னும் சிலருக்கு அந்த நிரலை எழுதுவதற்கான மூல நிரலும் தெரியும். இன்னும் சிலருக்கு அந்த மூல நிரலை வரையறுத்த நிரலின் ஆணி வேரும் தெரியும். மனிதன் கண்டுபிடித்த ஒரு பொருளுக்குள்ளேயே இவ்வளவு நுட்பங்களைக் கொணர முடியுமென்றால், இவ்வாறு இயற்கையின் தன்மையை – நுட்பத்தை உணர்ந்தவர்களின் பல்வேறு நிலைகளைப் பகுத்தறியாமலேயே குறைசொல்வது தவறேயாகும்.

6.       கிணற்றுத் தவளை

கிணற்றில் இருக்கும் தவளைக்குக் கடலைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது; அது கடலைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அதனால் தன் கிணற்றைவிடப் பெரியது என்று இருக்கவே முடியாது என்ற கருத்தை உடையதாயிருக்கும். கடலைக் கண்ட தவளை, அந்தக் கிணற்றுத் தவளையிடம், கடலை வந்து பார் என்று சொல்ல முடியும்; ஆனால், அந்தக் கிணற்றுத் தவளை மனது வைத்தால் மட்டுமே, தன் கிணற்றைவிட்டு வெளியே வர, மனது வைத்தால் மட்டுமே, அது அடுத்தடுத்து நிலங்களைத் தாவித் தாவிப் பலவித நிலப்பரப்புகளையும் பற்றிய எண்ணங்களையும் மனத்திலேற்றிக் கடந்துவந்து கடலையும் காண முடியும். 

ஆன்மீகம் எல்லாம் பொய் என்று சொல்வது பகுத்தறிவா? இல்லை. பகுத்து அறிந்து இருந்தால், அதிலுள்ள உண்மைகளையும் மறுக்க முடியாது; பொய்களையும் மறுக்க முடியாது. ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ளாததாலேயே ஒருவன் பகுத்தறிவாளன் ஆகிவிட முடியாது.

7.       கடவுள் என்றால் என்ன?

கடவுளைப் பற்றி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. அஃது அவனது அறிவின் அளவைப் பொறுத்தது அல்லது அவனது அறியாமையைப் பொறுத்தது.

ஆதியில் மனிதர்கள் இயற்கையைக் கடவுளாக வழிபட்டனர். அதிலிருந்தே வழிபடுவதற்குரிய தெய்வங்கள் காலங்காலமாக மருவிக் குலதெய்வங்களில் வந்து நின்றது. உண்மையில் சொல்லப் போனால், இந்தக் குல தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாய் வாழ்ந்து கடவுளாய் வணங்கப்படுபவர்கள்.

கடவுள் இல்லை; ஆனால் கடவுள் ஏன் வேண்டும்? கடவுள் இல்லை என்று வாதிடுவதைவிட, எந்தக் கடவுள் இல்லை என்று வாதிடுவதே பகுத்தறிவு. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை, கடவுளரை இவ்வாறு வரையறுக்க முடியும். அதை யாராலும் மறுக்க முடியாது.

è  உன்னுடைய துன்பத்தை உன்னால் நீக்க முடியாத போது, மற்றொருவன் அதனை நீக்கி உன்னை வாழ வைத்தால் அவன் கடவுள்.
è  தன்னிலை திரிந்து, நிம்மதியற்று, விரக்தியுற்று வாழும் உன்னை ஒருவன் உன்னுடைய நிலையினும் மேன்மையான ஒரு நிலைக்குக் கொண்டுவந்து வாழ வைப்பானேயானால் அவன் கடவுள்.
è  இதுவரை நீ அறியாத ஒன்றை, எளிதில் எண்ணமாக – சொல்லாக - செயலாக ஒருவன் மாற்றி, உன்னை வியப்பில் ஆழ்த்துவானேயானால் அவன் கடவுள்.
è  நீ குழந்தையாக இருக்கும்போது, உன்னுடைய ஒவ்வொரு நிலையிலும் உன்னைப் பாதுகாத்து வளர்த்து வந்து, உன்னைச் சுயமாய் வாழ வைக்க ஒருவனால் முடியும் என்றால் அவன் கடவுள்.
è  ஒன்றைப் பெறுவதனால் உன் நிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு உனக்கு மகிழ்ச்சி பிறக்குமானால், அதைப் பெறுவதற்கான மூலமாக இருந்த ஒவ்வொருவனும் கடவுள்.

‘அவரால்தான் நீ வாழ்கிறாய். அதனால் அவர் உனக்குக் கடவுள் போன்றவர்’ என்று கடவுளோடு ஒருவரை ஒப்பிட்டுச் சொல்லும்போது, கடவுள் என்ற ஒன்றை மனத்தில் மிக உயர்ந்த மதிப்புக் கொடுத்துக் கற்பனை செய்திருந்தால் மட்டுமே, அந்தக் கடவுள் போன்றவருக்கும் அந்த மதிப்பையும் உன்னால் கொடுக்க முடியும். என்னதான் ஒரு மனிதரை மாமனிதர், மாமாமனிதர் என்று எத்தனைச் சொற்களைக் கொண்டு மதித்தாலும், காண முடியாத ஒன்றே மனிதனின் அறிவுக்கு எட்டாத ஒன்றே கடவுளாகும் என்று மனம் அமைதியுறும். அப்போதுதான் கடவுளோடு ஒப்புமை ஏற்படுத்த முடியும்.

இந்தச் சிறிய வாழ்க்கைக் காலத்துக்குள் எத்தனை எத்தனை வாதங்கள்.  கடவுளென்று ஒன்றை வணங்குவதால் மன நிறைவு, மன அமைதி கிடைக்கப்பெற்றால் - இன்னும் பல நன்மைகள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றதென்றால் அதில் தவறில்லை. கற்பனைக்கு எட்டாத அந்தக் கடவுள் கொள்கையெல்லாம் வேண்டாமப்பா என்று சொல்பவர்களும் இருக்கட்டுமே. அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து பார்க்க விரும்பினால், அதை ஏன் தடுக்க வேண்டும்? கடவுள் கொள்கையோடு வாழ்ந்தால்தான் எனக்கு மன நிறைவு என்று சொல்பவர்கள் அப்படியே வாழட்டுமே. அதை ஏன் தடுக்க வேண்டும்?

Jul 23, 2020

நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும்



பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி


“நம்ம கிருட்டிணன் ஆசிரியர் இரட்டுற மொழிதல் பாட்டு ஒன்று சொல்லுவார். அந்தப் பாட்டின் கடைசி அடி மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. ‘பழையதும் பகவானும் ஒன்று’. அந்தப் பாட்டு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் கவிஞர் அர. வெங்கடேசன் அவர்கள். என்னைவிட மூத்தவர். நான் பயின்ற பள்ளியில் எனக்கு முன்னே பயின்று இப்போது ஆசிரியராக இருக்கிறார். அண்மையில் அவரிடம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒரே பள்ளியில் வெவ்வேறு காலக் கட்டத்தில் பயின்ற எங்கள் இருவருக்கும் பிடித்த கவிதை என்னும் ஒன்று எங்களுக்குத் தமிழைக் கற்பித்த - தமிழார்வத்தைத் தூண்டிய ஆசிரியரைப் பற்றிச் சிந்திக்க வைத்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள். தமிழ்ப்பற்றின் காரணமாகக் கிருட்டிணன் என்றே அவருடைய பெயரை அவர் எழுதுவதைக் கண்டிருக்கின்றேன். பாடம் நடத்துவதில் அவர் தனி வகை. சுமாராகப் படிக்கும் மாணவர்களைவிட நன்றாகப் படிக்கும் மாணவர்களே அவரிடம் நிறைய அடி வாங்குவர். அவருக்கு வரும் சினத்தை ஆற்ற முடியாமல் எண்ணியெண்ணித் திரும்பத் திரும்ப அடித்தே அவருடைய அரத்தத்து அழுத்த (BP) அளவை ஏற்றிக் கொண்டவர். “உன்னை எல்லாம் போய்வந்து போய்வந்து அடிக்கணும்” என எங்கள் ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.

பள்ளி மாணவர்களுக்குப் பாடம் புரிதல் ஓர் அளவில்தான் இருக்கும். ஆனால் அந்த அளவையும் விஞ்சிப் புரிய வைக்கப் பெருமுயற்சி செய்தவர். எனக்கு ஏழாம் வகுப்பில் தமிழும், எட்டாம் வகுப்பில் கணிதமும் நடத்தியவர். கையெழுத்து முத்துமுத்தாய் இருக்க வேண்டும் என்பார். நன்றாகப் படிக்கும் மாணவனே தவறிழைத்தால் தரையில் தூக்கிப் போட்டு மிதிக்கும் அளவுக்கு அவருக்குப் பெருஞ்சினம் வரும். அவருடனான ஒவ்வொரு வகுப்பிலும் அவ்வளவு அச்சத்துடன் அமர்ந்திருப்போம்.



தெய்வத்திரு க.கிருட்டிணன் ஆசிரியர்
  
ஏழாம் வகுப்பில் ஏன்தான் அரிச்சந்திரப் புராணத்தைப் பாடமாக வைத்தார்கள் என்று தெரியவில்லை. காசிக் காண்டத்திலிருந்து பதின்மூன்று பாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் அவர் இலக்கணக் குறிப்புச் சொல்லி, விளக்கம் சொல்லிக் கதைசொல்லிப் புரிய வைப்பதற்குள் வகுப்பே முடிந்துவிடும். ஒரு நாளில் ஒரு பாடல் மட்டுமே நடத்த முடியும்.

புத்தகத்தில் பாவகையே குறிப்பிடப்படவில்லை. சேர்த்துச் சேர்த்தெழுதிய கலிவிருத்தங்கள், சந்தக் கலி விருத்தங்கள். பிரித்துப் படித்துப் பொருள் புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதில் இரண்டு பாடல்கள் மனப்பாடப்பகுதி வேறு. முதல் பாடலை நடத்தி முடித்தார். அதன் கடினத் தன்மையைக் கண்டு கவலையுற்ற எங்களை ஆற்ற, ‘இதெல்லாம் கடினமில்லை, நாளை இதைவிடக் கடினமான பாடலைக் கற்பிக்கிறேன்’ என்றார். அடுத்த நாள் அவர் கற்பித்த பாடல் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' – திருப்புகழ்ப் பாடல். அடுத்த இரண்டு நாள்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மனப்பாடம் செய்து திங்கட்கிழமை வந்து சொல்ல வேண்டும் என்றார். ‘புத்தகத்தில் இருப்பதையே படிக்க முடியவில்லை. இதெல்லாம் எங்களுக்குத் தேவையா?’ என்று எண்ணிய மாணவப் பருவம் அது.

ஆசிரியர் யாரும் என்னைத் திட்டிவிடக்கூடாது, அடித்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன் நான். அவருடைய அடிக்கு அஞ்சி, அந்த இரு நாள்களும் அப்பாடலை மனப்பாடம் செய்வதற்கே சரியாய்ப் போய்விட்டது.  திங்கட் கிழமை நன்றாக மனப்பாடம் செய்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றேன். ஒவ்வொருவராய் எழுப்பிச் சொல்லச் சொல்லுவார் என்று அஞ்சியே நின்றிருந்தோம். உள்ளே வந்தார். 'மனப்பாடம் செய்தீர்களா?' என்றார். 'ஆம் ஐயா' என்றோம். ‘எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பாடலைச் சொல்லுங்கள்’ என்றார். கும்பலில் கோவிந்தா போட்டோம். எத்தனை பேர் அதை மனப்பாடம் செய்திருந்தனர் என்று தெரியாது. ஆனாலும் சொல்லி முடித்துவிட்டோம்.

சனி, ஞாயிறுகளில் மற்ற பாடங்களைத் தவிர்த்துவிட்டுத் தமிழை மட்டுமே படித்துக் கொண்டிருக்கும் பழக்கம் இப்படித்தான் வந்ததோ? என எண்ணுகிறேன். அந்தத் திருப்புகழ்ப் பாடலையும் சந்தக் கலிவிருத்தப் பாடல்களையும் படிக்கப் படிக்க, அவற்றை மனத்துக்குப் பழக்கப் பழக்கச் செய்யுள்களின் இனிமையை உணர்ந்தேன். ஏழாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட அத்தனை செய்யுள்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன். அது மட்டுமன்றி 'இலக்கணக் குறிப்பு' எனக்கு மிகவும் விருப்பமான பகுதியாக மாறிவிட்டது.

அந்த அரிச்சந்திரப் புராணப் பாடல்களைப் புரிந்துகொண்டு படித்ததிலிருந்து எனக்கும் அதுபோல் பாட்டெழுத வேண்டும் என்று ஆசை வந்தது. எதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வேறு என்ன? பாட்டி வடை சுட்ட கதைதான். இலக்கணம் தெரியாத காலத்தில் நான் எழுதிய முதல் பாடல் அது.

பாட்டியின் வடையைக் காகம் பற்றிக் கொள்ளக்
காட்டுநரி காகத்தைப் பாடச் சொல்லச்
சிந்தித்த காகம் வடையைக் காலிலிட்டுக் கரையத்
தந்திரம் பலிக்கா நரி ஏமாந்தோட.

பள்ளிப் பாடங்களை மனப்பாடம் செய்வது எனக்குப் பிடிக்காத செயல். ஆனாலும் படிக்க வேண்டியிருக்கிறதே என்று கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலும் செய்யுள் பகுதிக்கான வினா விடைகளை நான் மனப்பாடம் செய்ததில்லை. புத்தகத்தில் கொடுக்கப்படாத வினாக்கள் தேர்வில் கேட்கப்பட்டாலும் என்னால் விடை எழுத முடியும். செய்யுள்களைப் பொருள்புரிந்து மனப்பாடம் செய்வது எக்காலும் மறக்காது என்பது எவ்வளவு உண்மை!

அவ்வளவு தமிழார்வத்தை வளர்க்க அவர் அரும்பாடுபட்டார். பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டுற மொழிதல் பாடலை நடத்தும்போது தானெழுதிய இரட்டுற மொழிதல் பாடலையும் கற்பித்தார். அவர் எழுதிய பாடலின் கடைசி அடியான 'பழையதும் பகவானும் ஒன்று' என்பதைச் சொல்லிக் கவிஞர் அண்ணன் அவர்கள் கேட்டதும் முழுப்பாடலையும் அப்படியே சொன்னேன். அவர் ஒரு கணம் மகிழ்ந்து நின்றார்.

நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும்
பாரில் காலை கரம்தூக்கும் - சோர்வில்
உழன்றிட்டால் தூக்கித் துணைசெய்யும் சோறு
பழையதும் பகவானும் ஒன்று.

சிலவிடங்களில் வெண்டளை பயின்று வரவில்லை.  எனவே இதை நேரிசை வெண்பாவாகக் கொள்ள முடியவில்லை எனினும் வெண்கலிப்பாவாகக் கொள்ளலாம். கவிஞர் அண்ணன் அவர்கள் இதை என்னிடம் கேட்க வேண்டும் என்று எவ்வளவு நாள் எண்ணியிருந்தார் என்று தெரியவில்லை. எனக்கும் இப்பாடல் மறக்கவே இல்லை.

ஏழாம் வகுப்பாவது பரவாயில்லை. எட்டாம் வகுப்பில் கணிதப் பாடம். அடி வாங்காமல் எந்த நாளும் பொழுது போகாது எனச் சொல்லலாம். ஒருமுறை ‘முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்’ என்னவென்று கேட்டார். வகுப்பில் இருந்த யாருக்கும் சரியான விடை தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோண அளவைச் சொல்லி அடிவாங்கி அத்தனை பேரும் வகுப்பிற்கு வெளியில் நின்றது கொடுமை. இதுபோல் பல நிகழ்வுகள் அவ்வாண்டு முழுவதும் அரங்கேறின. முக்கோணத்தைப் பற்றி ஏழாம் வகுப்பில் படித்தோம். ஆனால் எட்டாம் வகுப்பு வருவதற்குள் மறந்துவிட்டோம். முந்தைய வகுப்பில் படித்ததை மறக்காமல் அடுத்த வகுப்புக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் எல்லா முந்தைய வகுப்புப் புத்தகங்களையும் எடுத்துப் படிப்பது என் வழக்கமாகிவிட்டது.

கணிதமாகட்டும், தமிழாகட்டும். எந்தப் பாடமாகட்டும். அவர் கையில் எடுத்த்தால் அவற்றை விளக்கிப் புரியவைப்பதில் பெரும் வல்லவர். அவருடைய திறமைக்கு  மிகப்பெரும் புகழை அடைய வேண்டியவர்.

மேலும் நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபோது எனக்கு ஒரு கவிதை எழுத வேண்டி இருந்தது. அதற்காக அவரைப் போய்ப் பார்த்தேன். அதற்குள் நான் ஓரளவுக்குக் கவிதை எழுதக் கற்றிருந்தேன். அவரும் எனக்கு ஒரு கவிதை இயற்றித் தந்தார். அந்தக் கவிதையின் கருத்தையே வைத்து நானும் ஒரு கவிதை இயற்றி அவரிடம் காட்டினேன். உள்ளம் மகிழ்ந்தார்.

எங்கள் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் இப்போது இல்லை. ஆனால் அவருடைய மாணவர்களாகிய நாங்கள் அவருடைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்து வியக்கின்றோம்.

எப்பாட முங்கை எடுத்தாய்ந் தெணமேற்றித்
தப்பா துரைக்கும் தகைமைர்  ஒப்பார்
இலாத பெரியோர்!என் எண்ணம் புகழைச்
சொலாஅ தடங்குமோ? சொல்.

வாழ்க அவர் புகழ்!
  * * *

Jul 19, 2020

மணிக்குறள் - 3. ஆசான் வாழ்த்து

முனைவர் அர. விவேகானந்தன்

ஆன்ற புலமை அரவிவேக ஆனந்தர்
ஈன்ற குழவியென்பேன் யான்                 21

செந்நா வுரைகண்டு சீர்விவேகம் பற்றுதலின்
எந்நாளும் ஆனந்த மே                               22

தான்கற்ற தண்டமிழைத் தன்னோடு வைத்திராது
வான்பற்ற வைப்பார் வகை                    23

அருந்தமிழ் ஆற்றுப் படுத்தும் அகத்துப்
பெருமிதம் போற்றுக பேறு                      24

கோடாங் குளத்துக் கொடைநலம் வாழிய
வாடாங்கு வண்டமிழ்ச் சொல்               25

கோடானு கோடி கொடுப்பினும் செந்தமிழக்
கோடாங்கல் கோடி பெறும்                    26

ஆயிரம் பாக்கள் அழகாய் இயற்றினும்
பாயிரம் ஆசானே பார்                              27

அந்தமிழக் காதலர் ஆற்றல்சால் பாவலர்
சிந்தனை யெல்லாந் தமிழ்                      28

உளங்குளிர்ந்(து) உச்சி முகர்வாள் தமிழ்த்தாய்
துளங்கும் மரபெழிலைக் கண்டு          29

செந்தமிழ் போற்றும் செழியன் சுடர்விழி
நந்தமிழ் ஆசான் நகல்                               30

Jul 12, 2020

மணிக்குறள் - 2. தாய் தந்தை வாழ்த்து

பூமாதேவி – சேகர்

தாய்

பூமியாந் தேவியெனப் பொன்னான பேருடையள்
யாமிங்குப் போற்றுகின்ற யாய்           11

பொருந்தும் பெயர்க்குப் பொறுமைக் குணத்தாள்
பெருமை எனக்கிது பேறு.                        12

மேலாளர் யாவரும் மேலல்லர் என்னன்னை
மேலாண்மை மெச்சுவேன் யான்          13

எங்காப்பே எண்ணத்தில் யாதுசெய முற்படினும்
அங்காப்பாள் அச்சொல் அறிந்து          14

நாளும் கிழமையும் நன்கறிந்(து) ஆற்றுவாள்
கோளும் வியக்குஞ் செயல்                      15

தந்தை

கற்றறிந்து கேட்டறிந்து காணும் கலையெலாம்
உற்றறிந்து சேகரஞ்செய் தார்                  16

கண்பார்க்கக் கையியற்றும் காணுங் கலைகளை
நண்பாக்கிக் கொண்டார் நயந்து           17

பள்ளிப் படிப்பின்றிப் பாட்டெழுதும் ஆசானாம்
உள்ளுந் தெருக்கூத்(து) உரைத்து            18

வானத் தொளிர்ந்து வழங்கும் பயனெலாம்
தானுணர்ந்து தக்கதுரைப் பார்                19

கலைபல கற்றதோடு காண்பவர்க் கெல்லாம்
நிலைபல நேர்நிறுத்து வார்                        20

Jul 5, 2020

மணிக்குறள் - 1. இறை வணக்கம்

வேலனை வேண்டலும் வாழ்த்தலும்

அப்பனே! ஆறு முகனே! அடியனாம்
சுப்பனைக் காத்தருள் வாய்                                   1

அந்தமிழ்ச் சேயே! அருகிருந் துன்னருளைச்
சிந்தையில் சேர்த்துச் செதுக்கு                             2

அணிபூங் கடம்பா! அழகிய வேலா!
கணிப்பாய் உளத்தைக் கனிந்து                           3

அண்டமெலாம் ஆற்றலாய் ஆனாது நின்றாயைத்
தொண்டன் தொழுதேத்து வேன்                            4

ஆவென்றி யான்மலைக்கும் அம்மலையின் செங்கோவே!
பாவென்றி கொள்ளப் பய                                         5

ஆஅடி வந்தேன் அகமகிழ்ந்(து) உம்மையே
தேஎடி வந்தேன் தெளிந்து                                         6 

ஆற்றலே ஆற்றலின் ஆற்றலே ஆற்றினில்
ஆற்றுப் படுத்தி அகழ்                                                 7

இன்றமிழ்ச் செம்மையை ஈந்தருள்வாய் எம்முருகா
நன்றாய்ச் செயலாற்ற நான்                                    8

இனிக்க இனிக்க இசைந்திசைக்க ஏற்றுப்
பனிக்கப் பனிக்கப் பழக்கு                                       9

இயலா தெனமருங்(கு) இன்னாமை தோயச்
செயலாக்கச் செவ்வேள் துணை                          10