வேலனை வேண்டலும் வாழ்த்தலும்
அப்பனே! ஆறு முகனே! அடியனாம்
சுப்பனைக் காத்தருள் வாய் 1
அந்தமிழ்ச் சேயே! அருகிருந் துன்னருளைச்
சிந்தையில் சேர்த்துச் செதுக்கு 2
அணிபூங் கடம்பா! அழகிய வேலா!
கணிப்பாய் உளத்தைக் கனிந்து 3
அண்டமெலாம் ஆற்றலாய் ஆனாது நின்றாயைத்
தொண்டன் தொழுதேத்து வேன் 4
ஆவென்றி யான்மலைக்கும் அம்மலையின் செங்கோவே!
பாவென்றி கொள்ளப் பய 5
ஆஅடி வந்தேன் அகமகிழ்ந்(து) உம்மையே
தேஎடி வந்தேன் தெளிந்து 6
ஆற்றலே ஆற்றலின் ஆற்றலே ஆற்றினில்
ஆற்றுப் படுத்தி அகழ் 7
இன்றமிழ்ச் செம்மையை ஈந்தருள்வாய் எம்முருகா
நன்றாய்ச் செயலாற்ற நான் 8
இனிக்க இனிக்க இசைந்திசைக்க ஏற்றுப்
பனிக்கப் பனிக்கப் பழக்கு 9
இயலா தெனமருங்(கு) இன்னாமை தோயச்
செயலாக்கச் செவ்வேள் துணை 10
No comments:
Post a Comment