Mar 13, 2011

செய்யுளா? உரைநடையா?

காலமெலாம் கட்டிவந்த கவிதைகளில் தட்டிவராத்
தளைகளிடைத் தமிழ்க்கன்னி தனித்தன்மை பெற்றோங்கி
பொங்கிவரும் பூரிப்பால் பெருமைமிக வளர்ந்திருந்தாள்!
சிந்துவினைச் சொந்தமெனக் கொண்டவனப் பாரதியும்
தானெழுதி வைத்தவுரை நடைக்கவிக்குப் பொருத்தமதாய்         5
'வசனகவி' எனப்பெயரை வைத்தெழுதிப் போந்தார்.
'புதுக்கவிதை' என்றெழுத வில்லையவர் பண்பில்லை
இன்றெழுது வோரதனை ஏற்காமல் பெயர்வைத்தார்
திரைப்படத்தில் வசனங்கள் கூடவளம் பெற்றிருக்க
அவ்வசனம் போலவே அடிக்கொரு வார்த்தையென             10
அளந்தெழுதி வைத்துவிட்டு அதுகவிதை என்றால்
மதிப்பில்லை கவிதைக்கு, தமிழ்மகனுக் கெங்கிருக்கும்?
காளமேகம் அருணகிரி கண்டுவந்த தமிழ்மண்ணை
ஆளவந்து வழக்கமொழித்(து) அனைத்தையுமே மாற்றிவிட்டுத்
தமிழ்வளர வில்லையென நியாயங்கள் பேசிடுவார்               15
ஓசைநயம் ஒழுகுதமிழ் வடிவமைக்கத் தெரியாமல்
பேசுதமிழ்ப் போலவே பதம்சொல்லி வைத்துவிட்டு
உணர்வுகளே கவிதையென வசனங்கள் பேசிடுவார்!
உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதைமட்டும் கருவியில்லை
கவிதையிலே உணர்விருக்கும் கவினழகைக் காட்டிவிடும்          20
கண்டதெலாம் கவிதையெனக் கொண்டுவந்து விட்டாலோ
சிந்திக்க ஆளின்றிச் சீரழிந்து போயிடுமே!
திரிசொல்லைக் காணும்நம் பின்னோர்தாம் புரியாமல்
'என்னவிது?' என்றேதான் கேட்டிடுவார் என்சொல்ல?

Mar 3, 2011

விடையே தெரியாத விடியல்!

வாழ்க்கை...
விடையே தெரியாத விடியல்!
எண்ணங்கள் மட்டும்
எட்டாத உயரங்களையும்
எவ்வளவோ ஆழங்களையும்
குப்பைகளாய்க் குவித்துவைத்திருக்கும்.


இப்படியே செல்லும்
இந்த வாழ்க்கையில்
எத்துணைக்குத்தான் ஆசைப்பட முடியும்?
என்றெண்ணி,
இனி எந்த ஆசையும் வேண்டாம்
என்னும் போதினிலே
இறந்துவிடுகிறான் மனிதன்.


இவ்வுலகில் வாழும்
ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒருவகையில்
ஏதோ ஓர் ஆசைக்காய்
ஏங்குகிறது நெஞ்சம்.


ஆசை...
இன்பம் தேடல்
அடிப்படைத் தேவைகள்
தன்மானப் பிரச்சினைகள்
பண்பட்ட வாழ்க்கை
அஞ்சுதற்கு அஞ்சுதல்
என எவ்வகையிலும் இருக்கலாம்.


ஆக, ஆசையின் ஆளுகைக்குள்
அகப்பட்டவன் மனிதன்.
ஆசைப்பட்டவை கிடைக்கவும் செய்கின்றன.
ஆதலின் விடியல் எனலாமே.
விடை ஏது?
ஆசை ஏனெனத் தெரியாதபோது.

நிலையற்ற வாழ்க்கை

கால ஓட்டம்
காட்டாற்று வெள்ளம்!
கரைகளையும் அரித்துக்
கருவுக்குள் பதித்துத்
தான்மட்டும் செழிப்பாய்!
வாழ்க்கைப் போராட்டமோ?
உன்னைப் பொறுத்தவரையில் இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில்
யாருக்கோ அடிமை நீ!


சஞ்சல நெஞ்சம்
சரித்திரக் களஞ்சியம்!
வாழ்ந்தேன் இங்ஙனம்
வீழ்ந்தேதான்!


எழும்போதெல்லாம்
என்னை என்ன செய்யமுடியும்?
என்கிற மமதை!
உன்பார்வையில் தன்னம்பிக்கை!
வாழ்ந்துவிட்டுப் போ!


விழும்போதெல்லாம்
விதியின் விளையாட்டு
வினை யாரை விடும்?
வீண்தத்துவம்!
ஆனால், அதுதான் ஆறுதல்.


யாவரும் எப்போதும்
ஒரே நிலை
என்பது நிலையில்லை!
மாற்றிப்போட்டவை வகுத்துத்தரும்
புதுப்பாதைகள்!
நிலையானது என எண்ணிச் செய்வது
சில காலங்களுக்கு நிலையானது.
ஆனால்,
அது என்றும் நிலையானது இல்லை.

Mar 1, 2011

பிதற்றல்

ஒன்றுமில்லை என்றுசொல்ல
இலக்கண மரபுகளையும்
இன்னிசைச் சந்தங்களையும்
இடையூறென்னும் துன்பங்களுக்கு
ஏன் ஆளாக்க வேண்டும்?


ஏதோ எழுதுவோம்
எண்ணங்களை!
இன்னும் தெளிவாய் அறிந்திராததைத்
'தெள்ளுதமிழ்' என்று சொல்லிக்கொண்டு
'செம்மொழி' எனும் போலிமகுடம் சூட்டிப்
பிதற்றல்களாய்ப் பதிவு செய்கிறேன்


காதல்கூடக் கரைந்துவிடும் வலியா?
மனிதனின் மனம்
எண்ணங்களின் கலவையாய்க்
குழம்பிப் போயிருந்தால்,
தர்க்கங்களின் தாக்குதல்களுக்கு
உள்ளாகியிருந்தால்,
அறிவுச் சுடரில் கருகிப் போயிருந்தால்,
மாறிமாறி வரும்
மழையும் வெயிலும் போலிருந்தால்
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


கரைந்துவிடுமானால் அது
காதல் அன்று
என்று வாதிட்டால்
காலங்காலமாய்
நெஞ்சங்களில் ஊறி,
இனி அழிக்கவே முடியாது என்றெண்ணி
உயர்ந்த காதல்,
உறுதிக் காதல்,
உத்தமக் காதல் என்று
பேரெடுத்தால்கூட,
மாறும் மனம் உள்ளவரை
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


இது வெறும் பிதற்றல்...
கவிதை என்று சொல்லிக்
கண்மூடித்தனமாய் இருந்துவிடாதே!
பாவம் தமிழ்!