பாவலர் மா.வரதராசன் அவர்களின் வழிகாட்டலில் ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, இரட்டை மணி மாலை, மும்மணி மாலை, பல்சந்த மாலை, தூது எனப் பலவகைச் சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
பைந்தமிழ்ச்சோலையைச் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
பட்டறிவும் பகுத்தறிவும் இணைந்த தாலே
பக்குவமாய்ப் பழகுகின்ற இனிய நண்பர்
எட்டாத கவியென்பார் தமிழின் யாப்பை
எளிதாகக் கற்றதுடன் எல்லோ ருக்கும்
கிட்டுவிதஞ் செய்கின்ற அறிவு பேழை
கேளிரென அனைவரையும் அணைக்கும் செம்மல்
மட்டில்லா அன்புகொண்ட வெங்க டேசன்
மன்றத்தில் கவிபாட அழைக்கின் றேனே!
என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் இவரைக் கவிபாட அழைப்பார்.
மடக்கணி அமைந்த பாடல்களும், இரட்டுற மொழிதல் வெண்பாக்களும் இவருக்கு உகந்த பாவகைகளாகும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்குச் சான்றாக அவருடைய மடக்கணி கலந்த இரட்டுற மொழிதல் பாடல் ஒன்றை இங்கே காண்போம்.
(பெண்ணும் கட்டளைக் கலித்துறையும்)
காரிகை தன்னோ டிலங்குவதால் நாமமும்
காரிகை தன்னோ டிலங்குவதால் – ஈரெட்டில்
நேர்வந்து நிற்கு மழகினால் இவ்விரண்டும்
நேர்வந்து நிற்கு மழகு.
பெண்: அழகுடன் இருப்பாள், காரிகை என்ற பெயரும் உண்டு, பதினாறு வயதில் எந்தப் பெண்ணும் அழகாய் விளங்குவாள்.
கட்டளைகலித்துறை: அழகுடன் விளங்கும், காரிகை என்ற பெயரும் உண்டு, பதினாறு எழுத்துக்கள் வந்தால் நேரசை அழகாய் முன்வந்து நிற்கும்.
இவ்வாறாய இவருடைய ஓயாத மடக்கு, சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த பாவலர் மா.வரதராசனார் அவர்கள் இவருடைய தமிழ்ப்பணிக்குப் படையலாகச் செய்த இரட்டுற மொழிதல் இதோ.
வெங்கடேசனுக்கும் - மீனுக்கும் (இன்னிசை வெண்பா)
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத்
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு
வெங்கடேசனார்: உண்ணுதல் மறந்து பா வடிப்பார், அவருடைய பாக்கள் (தோலெனின் பாட்டு) மிளிரும், கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார். மடக்குப் பா, இரட்டுற மொழிதல் எழுதுவார், தமிழ்க் கடலில் (அவருள்ளம்) நீந்தும்.
மீன்: உணவில் உண்ணுமாறு அடங்கும், மேல்தோலாகிய செதிள் மிளிரும், கண்கள் மூடாது. (எப்போதும்), மடங்கி, வளைந்து நீந்தும், துணையுடன் இணைந்து இரண்டாகக் காட்சி தரும், குளிச்சியான கடலில் வாழும்.
பைந்தமிழ்ச் சோலையின் இணையாசிரியராகவும் எண்பேராயத்தின் தலைவராகவும், தமிழ்க்குதிர் மின்னிதழின் துணையாசிரியராகவும் பொறுப்பு ஏற்று எண்ணற்ற பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் இவர்.
இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
பண்பினி லோங்கிய பைந்தமிழ்ச் செம்மலிவர்
பண்ணையார் நற்றமிழ் மன்னையார் - அண்ணுதற்
கென்று மினிய தமிழ்போல் எளியவர்க்கு
நன்றாய் நடக்கும் மடக்கு
- தமிழகழ்வன் சுப்பிரமணி